Monday, February 3, 2014

போதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே?



போதுமென்ற மனங் கொண்டே
     புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
    எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
     தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
    சொல்லில் இன்றைய மனிதநிலை!

மாறிப் போனது மனிதமனம்
     மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
    உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
    பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
    இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
    ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
    வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
     குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
     பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
     சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
     முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
   காண்பதே இன்றைய மனிதநிலை!

                        புலவர் சா இராமாநுசம்

19 comments :

  1. மாண்பற்ற இந்த மனித நிலை மாறும் காலமும் வாராதோ ?
    த ம 1

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. அருமையான கவிதை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தங்கள் மனிதநிலை பற்றிய விளக்கத்தை வரவேற்கிறேன்.


    தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

    ReplyDelete
  5. உறவுகளிடையே புரிதல் பற்று எல்லாம் மலையேறிப்போன காலமிதாகிவிட்டது. விருந்தோம்பல் என்றால் விலை என்னவென்று கேட்கும் நிலை வந்துவிட்டது. இன்றைய மாந்தரின் நிலையை மிகவும் சரியாக எழுதியுள்ளீர்கள் ஐயா. நம்மால் இயன்றவரை மா(ற்)றி இனிதே வாழ்வோம்.

    ReplyDelete
  6. இனிய வணக்கம் பெருந்தகையே...
    அருமையான கவிதை..
    மனித மனத்தின் நிலை பற்றிய
    அற்புதமான பாடல்..
    இப்போதுதான் தன்னிறைவு பற்றிய
    கவிதையை பதிவு செய்தேன்..
    நீங்களும் அதே மனநிலையில்
    பதிவு செய்திருப்பது
    மனதிற்குள் இனிக்கிறது..

    ReplyDelete
  7. மனித மனம் நிறம் மாறி மாறி வந்தாலும் சுற்றத்திலும் இது நடப்பது கொடுமை, மனிதன் அன்பெனும் கட்டுக்குள் நிற்காவிட்டால் வேதனைதான் - கவிதை அருமை அய்யா !

    ReplyDelete
  8. இன்றைய நிலையை சரியாக படம் பிடித்துக் காட்டிவிட்டது ஐயா கவிதை
    //கற்றும் அறியா மூடநிலை
    காண்பதே இன்றைய மனிதநிலை!//
    நிறைவு வரிகள் மிக மிக அருமை

    ReplyDelete
  9. "கற்றும் அறியா மூடநிலை" என்ற தொடர் அருமையாக உள்ளது!

    ReplyDelete
  10. மிக்க நன்றி!

    ReplyDelete
  11. //மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே//

    சரியாகச் சொன்னீர்கள் ஐயா. பல மனிதர்கள் மேடையேறாமல் கூட சொன்ன சொல்லை மறந்து விடுகிறார்கள் சுலபமாய்...

    நல்ல கவிதை.

    த.ம. +1

    ReplyDelete
  12. பேருக்கே இன்றே உறவெல்லாம்
    பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
    யாருக்கும் இதிலே பேதமிலை
    இதுதான் இன்றைய மனிதநிலை!உண்மைதான் அய்யா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...