Saturday, February 23, 2013

பதினாறு பேர்கள் மாண்டு போக –பலர் படுகாயம் அடைந்துமே நொந்தோ ராக!




பதினாறு  பேர்கள்  மாண்டு போக பலர்
      படுகாயம் அடைந்துமே  நொந்தோ ராக!
சதிகாரர்  குண்டுதனை  வைத்து  விட்டார் நம்
     சமுதாய  ஒற்றுமைக்கு   அழிவும் இட்டார்!
விதியென்றே  சொல்வதா  இதனை  இங்கே அட
    வீணர்களின்  செயலுக்கு  பலன்தான்  எங்கே?
மதிமாறி  போகின்றீர் ! வேண்டாம்  இனியும் எதிர்
     மாறான  நிகழ்வுகளே  மேலும் விளையும்!

அப்பாவி  மக்கள்தான்  அழிந்து  போனார் ஏதும்
     அறியாது  நொடியிலே  பிணமாய்  ஆனார்!
எப்பாவி  செய்தானே  இந்த கொடுமை உலகம்
     ஏற்காது  என்றுமே! அறியார்  மடமை!
ஒப்பாது! ஒப்பாது  நல்லோர்  உள்ளம் நன்கு
     உணர்ந்தாலே  வாராது  நெஞ்சில்  கள்ளம்!
முப்போது  சொன்னாலும் உண்மை  என்றும் இன
    மூர்கரே! நினைத்திடின்  விளைவே  நன்றும்!


மதவெறி  இனவெறி  ஒழியும்  நாளே !மக்கள்
      மனிதத்தை  நேயத்தை  மதிக்கும் நாளே!
சதமென  சமுதாயம்  போற்றும்  நாளாம் மேலும்
     சாதிமத  வேற்றுமையை  அறுக்கும்  வாளாம் !
பதவிவெறி பணத்தாசை  இலஞ்ச ஊழல்- நாளும்
      பரவாமல்  தடுக்கின்ற  தூய  சூழல்!
உதவிடுமே ! அமைதியுடன்  நாமும்  வாழ ஆள்வோர்
      உணர்ந்தாலே  போதுமே  வளமை சூழ!

                                புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, February 19, 2013

வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து வருந்தி எழுதினேன் நானிதனை




வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்    
     வேதனை நெருப்போ எனைசுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
      வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும்  இன்றுவரை-உலகில்
       ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
      எதற்கு இறைவா அழித்துவிடு


படமதைப் பார்த்து அழுதேனே-இனி 
  பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
   வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
    இரக்க மின்றி கண்துஞ்சல்
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
    வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்       
    மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
  புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
  இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
   கதர உதிர நாளுமென


இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்   
   ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
   இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
    பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
   செழிக்க வாங்கித் தருவாயா

              புலவர்  சா இராமாநுசம்

Sunday, February 17, 2013

பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர் போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!



ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும்
ஏறின பெட்ரோல் விலைசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம் பயனென்ன!?-இக்
கொடுமைக்கு விடிவு இனியென்ன?

பால்விலை ஏறிற்று என்செய்தோம்-நாம்
பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமை
தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடம்
பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயர்
மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினம்
இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

புலவர் சா இராமாநுசம்