Friday, May 30, 2014

பொற்றா மரையாக விளங்க வேண்டும் –அரசின் புகழுக்கே, சான்றாகும் ! அதுவே ஈண்டும்!





ஏழைபண  காரருக்கு  நீதி  ஒன்றே –என
    எண்ணிவிட இயலாத  நிலைதான்  இன்றே!
பேழைதனில்  உள்ளபணம் மாற்றி  விடுமே –அறப்
    பிழையன்றோ  இதனாலே  முற்றும்  கெடுமே!
கோழைகளாய்  வாய்மூட  குமுறும்  நெஞ்சம் –ஏழை
     குரலங்கே  எடுபடுமா!  அந்தோ  அஞ்சும்!
வாழவழி செய்திடுமா  புதிய  ஆட்சி –இனி
     வருங்கால நடைமுறைகள் வழங்கும்  சாட்சி!

     
வற்றாத  ஊற்றாக  ஊழல்  இங்கே –இனியும்
     வளர்ந்திட்டால் வந்திடிமா  வளமை அங்கே!
முற்றாக  ஒழித்திடவே  வழிகள்  தேடி –அதை
      முதற்பணியாய்  செய்வீரேல் நன்மை  கோடி!
உற்றாரா ! உறவினரா  உரிமை கொண்டே –எவர்
      உம்மிடமே வந்தாலும் மறுத்து  விண்டே!
பொற்றா மரையாக  விளங்க வேண்டும் –அரசின்
      புகழுக்கே, சான்றாகும் ! அதுவே  ஈண்டும்!

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, May 28, 2014

முடிந்தது ஒருவகையாய் இங்கே எல்லாம்-இது முடியரசா ! குடியரசா ! காலம் சொல்லும்!




முடிந்தது  ஒருவகையாய்  இங்கே எல்லாம்-இது
   முடியரசா ! குடியராசா ! காலம்  சொல்லும்-பொழுது
விடிந்தாலும் வெளிச்சமது  மெல்ல  வருமே –அதற்குள்
    வேண்டாத  வாதங்கள்  தொல்லை  தருமே

மந்திரத்தால்  மாங்கயை  வீழ்த்தல்  ஆகா –ஏறிய
    விலைவாசி உடனடி  குறைந்து  போகா -உடன்
சிந்தித்து  செயல்படவும் ஆள  வந்தார் – மேலும்
    சிலமாதம் காத்திருக்க  வாக்குத்  தந்தார் !


 பழையகள்  புதியமொந்தை  ஆகா  தென்றே –நாட்டில்
     பரவலாக மக்கள்தான் பேச  நன்றே –அவர்
விழைவனவே எதுவென்று  அறிதல்  வேண்டும்- அரசு
     விரைவாக  செயல்திட்டம்  தீட்ட  வேண்டும்

ஊழலுக்கு  வழியேதும்  இல்லா  நிலையே– திட்டம்
     உருவானால் கையூட்டு தருவார்  இலையே!-அந்த
சூழலுக்கு ஏற்றபடி இருந்தால்  போதும் –திட்டம்
      செயல்பட்டால் வெளிப்படையாய்  குறையும் தீதும்