Monday, August 4, 2014

உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!



உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!

அப்பனே ஏழுமலை ஆண்டவ வணங்குகிறேன்!
தப்பென இதுவரை தவறியும்  செய்ததில்லை!
எப்பவும் என்னுடைய இதயத்தே வாழ்கின்ற
ஒப்பென ஒன்றில்லாய்! உன்னடி வணங்குகிறேன்!

தாங்கிட இயாலாத தளர்வெனக்கே வந்தாலும்
நீங்கிட வழிகாட்டும் நிமலனே வணங்குகிறேன்!
ஓங்கியே உலகளந்த உத்தம! உன்நாமம்
தாங்கியே திருவடி தலைவைத்தே வணங்குகிறேன்!

எண்ணிய எய்திட எனக்கருளும் செய்கின்ற
புண்ணிய பெருமாளே! போற்றியுனை வணங்குகிறேன்!
கண்ணிலே கருமணியாம் கண்ணனே காலமெலாம்
மண்ணிலே மறைந்தாலும் மறப்பேனா! வணங்குகிறேன்!

உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!
என்னைக் காத்தருள்வாய் ஏழுமலைப் பெருமாளே!
பொன்னை வேண்டியல்ல! பொருளை வேண்டியல்ல
அன்னை அலர்மேலு அருள்வேண்டி வணங்குகிறேன்!

புலவர் சா இராமாநுசம்