Thursday, August 6, 2015

மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே!


மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே
மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே
வீணலவே! விளம்புவது உண்மை ஒன்றே
விளக்கமுற வருங்காலம் காட்டும் நன்றே
காணவென காட்சிபல காண்பீர்! இங்கே
கட்சிகளும் அறப்போரில் ஏற்றார் பங்கே!
பேணலரும் செயலெனும் உம்மால் முடியும்
பெருமைவர வாழ்த்திடுவர்! துயரம் விடியும்!


ஏதுமினி இலவசத்தால் பயனே இல்லை
எண்ணிடுவீர்! அதனாலே வந்தத் தொல்லை
போதுமினி மக்களவர் உழைத்து வாழ
பூரணமாய் மதுவிலக்கு நாட்டில் சூழ!
தீதுமினி நடவாது செய்வீர் ஈண்டும்
தெய்வமெனத் தாய்க்குலமே போற்ற யாண்டும்!
யாதுமினி செய்வதற்கு தருணம் இதுவே
யாவருக்கும் தெரியுமிது ஒழிய மதுவே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 5, 2015

நான்காவது பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு!



அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!
முதற்கண் இவ்வாண்டு ,நான்காவது
பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த புதுக் கோட்டை மாவட்டம் முன் வந்துள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் வரும்
அக்டோபர் மாதம்( 10 ,11 ,தேதிகள் ) என தற்போது திட்டமிடப் பட்டுள்ளது.அன்புத் தம்பியும் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் ஆகிய,திருமிகு முத்து நிலவன் முன் வந்து பொறுப்பெடுத்து நடத்துகிறார் அதுபற்றி கலந்துரையாட அவரே நேரில்
இங்கு (அதற்காகவே ) வருகிறார்
 

எதிர் வரும் சனிக்கிழமை(8--8-2015) காலை பத்து மணி அளவில் கே-கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் ,இக்கூட்டம் நடை பெறும்! அனைவரும் வருகை தர வேண்டுகிறேன்
இதற்கான அழைப்பு அனைவருக்கும் அன்புத் தம்பி அரசன்
அவர்கள் மின் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்
படி, கீழே........

அனைவருக்கும்
இந்த வருட பதிவர் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் புதுக்கோட்டையில் நிகழ்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது, ஆகையால் ஏற்கனவே இரண்டு முறை நடத்திய அனுபவம் இருப்பதினால், சென்னை பதிவர்களாகிய நம்முடைய கருத்துக்களையும் அறிந்து கொள்ள திரு. முத்துநிலவன் அவர்கள் விரும்புகிறார். அதன்படி வருகிற சனிக்கிழமை - 08/08/2015 காலை 10 to 12 மணிக்கு டிஸ்கவரி புக் பேலசில் ஆலோசனைக் கூட்டம் நிகழ இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

 புலவர்  சா  இராமாநும்