Thursday, October 22, 2015

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரிக்கும் தீயாக இருப்பதனைக் கண்டோம் ஏட்டில்!



உயிரோடு எரிக்கப் பட்ட இளம் குழந்தைகள் கொடுமை! கவிதை! மீள்பதிவு!
கீழே (இன்றும் பொருந்தும்)

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரிக்கும்
தீயாக இருப்பதனைக் கண்டோம் ஏட்டில்
வேண்டாமைஅதுவென்றே காந்தி, பெரியார்-மிக
வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
போகவில்லை!அறிந்தோமே! சிறுமைப் பட்டோம்
மாண்டானே,கோகில்ராஜ் ! சாதி! வெறியில்-அந்தோ
மாறாதா!? இந்நிலையே! நீதி! நெறியில்!


ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-நாட்டில்
ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
நீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்
சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என்றே
உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்
நன்றேதான் அதுவென்றே ஏற்றுக் கொண்டோம்-நமே
நாடெங்கும் கொள்கையாய் பரப்பி விண்டோம்
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ஏங்கிட நீங்குமா சாதி மடமை!

 புலவர் சா இராமாநுசம்

Tuesday, October 20, 2015

வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்!



வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை
வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்
இலைநிகர் அதற்கென மகிழ்கின்றேன்-நாளும்
இருகரம் கூப்பித் தொழுகின்றேன்
அலைபடும் கடற்கரை மணலாக-எரியும்
அணல்தனை அணைக்கும் புனலாக
நிலையென உம்முடை வரவுகளே-தேயா
நிலவெனக் கண்டேன் உறவுகளே


அன்பினை அடக்கிட தாளில்லை-என்றே
ஐயன் சொன்னது தவறில்லை
என்பினை போர்த்திடும் தோலாக-உம்மோர்
இன்னுரை அனத்தும் பாலாக
என்னுயிர் வளர்த்திடும் எருவாக –நெஞ்சில்
எழுவன,கவிதைக் கருவாக
இன்பினை மேலும் தருவீரே –என்னுடை
இதயத்து நன்றி பெறுவீரே!

புலவர் சா இராமாநுசம்

Monday, October 19, 2015

இன்றேதான் என்னுடைய பிறந்த நாளாம் இணையவழி வாழ்த்தநீர் சிறந்த நாளாம்!


இன்றேதான் என்னுடைய பிறந்த நாளாம்
இணையவழி வாழ்த்தநீர் சிறந்த நாளாம்
ஒன்றேதான் உறவுகளே அன்புப் பரிசாம்
உள்ளத்தில் இன்பமதைக் கொட்டும் முரசாம்
என்றேதான் இதயமதில் எண்ணம் கொண்டே
இயன்றவரை கருத்துக்களை வலையில் விண்டே
நன்றேதான் வாழுவரை பதிவைத் தருவேன்
நல்லோரே! உம்முடைய வலைக்கும் வருவேன்


எத்தனையோ எழுதிவிட நினைத்த போதும்
இயலாத நிலைதந்து முதுமை மோதும்
சித்தமதில் தோன்றுவன சிதறிப் போகும்
செயலிழந்த மனநிலையால் துயரே ஆகும்
பெத்தமனம் பிள்ளைகளின் அன்பைத் தானே
பெருமைமிக எதிர்நோக்கும் அதுபோல் நானே
இத்தனைநாள் நான்வாழ மருந்தாம் நீரே
இனிமேலும் வளர்கின்ற உறவாம் நீரே!

புலவர் சா இராமாநுசம்