Tuesday, December 1, 2015

அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று????


அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!!
இன்று????

மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!


சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

Sunday, November 29, 2015

போதுமடா சாமி –நாங்க பொழைக்கவழி காமி



போதுமடா சாமி –நாங்க
பொழைக்கவழி காமி
சேதமதிக மாச்சே –ஏதும்
செய்யமுடி யாபோச்சே

அளவுமிஞ்சி போனா –எதிலும்
அழிவுவரும் தானா
களவுபோன பொருளே –உடன்
காட்டுமுந்தன் அருளே

 மேலும்வரு     மென்றே-பயம்
மேலும்வர நன்றே
மூளுமச்சம் நெஞ்சில்-தீயை
மூட்டுவதா பஞ்சில்

கருணைகாட்டு சாமி –உடன்
காக்கவாரும் பூமி
வருணதேவன் பாரும் –எங்கள்
வாழ்கைதனை காரும்

புலவர் சா இராமாநுசம்