Wednesday, August 24, 2016

எங்கே போகுது தமிழ்நாடு-மேலும் இப்படி நடந்தால் பெருங்கேடு!


எங்கே போகுது தமிழ்நாடு-மேலும்
இப்படி நடந்தால் பெருங்கேடு
இங்கே எதுவும் சரியில்லை-கேட்க
ஏடுகள் தலைவர்கள் எவருமில்லை
பங்கே பிரித்துக் கொண்டாராம்-நாளும்
பழங்கதை எடுத்து விண்டாராம்
சங்கே ஊதியே விடுவாரோ –இவர்
சண்டையில் மக்கள் கெடுவாரோ


புலவர் சா இராமாநுசம்

Sunday, August 21, 2016

முகநூல் பதிப்புகள்!



தேவைக்கு மேலாக சூடேற்றினால் அடுப்பில் கொதிக்கும் பாலே பொங்கி அடுப்பை ஆணைத்து விடும்! அது போல, எதையும் அளவறிந்து செய்ய வேண்டும் இல்லை என்றால் முற்றிலும் கெடும்
அமுதுகூட அளவுக்கு அதிகமானால் நஞ்சாகி விடுமென்பது தானே
ஆன்றோர் வாக்கு!

ஒலிம்பிக்கில் , வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்ற வீர மங்கையருக்குப் பலரும் வாழ்த்து தெரிவிப்பது பாராட்டுக்குரியது
ஆனால் அரசியல் வாதிகளும் சினிமா பிரபலங்களும் பாராட்டுவது
வியப்பாக உள்ளது! இவர்கள் தங்கள் செல்வாக்கினை விளையாட்டுத்
துறையை மேம்படுத்த இதுவரை, ஏதேனும் ஊக்கமோ, உதவியோ செய்தார்களா!!! இல்லையே! இதுவும் அவர்கள் தங்களை மேலும் விளம்பரப் படித்திக் கொள்ளும் ஒன்றோ என்றுதான் கருத த் தோன்றுகிறது!

பட்டறிவுக்கும் பகுத்தறிவுக்கும் வேறுபாடு உண்டு! ஒருமுறை விளக்கைத் தொட்டு சூடு பட்ட குழந்தை மறுமுறை தொடாது! இது
பட்டறிவு! நஞ்சுண்டவன் சாவான் என்றால், அவன் மட்டுமல்ல, நஞ்சு உண்டவள், நஞ்சு உண்டவர் நஞ்சு உண்டது என, அனைத்தும்
சாவுமென அறிவது பகுத்தறிவாகும்!

தமிழக சட்னமன்ற சபாநாயகருக்கு ஒரு வேண்டு கோள்!
மாண்பு மிகு ஐயா! எதிர் கட்சி உறுப்பினர் (88 பேர்) அனைவரையும் ஒரு வாரத்திற்கு, மன்ற நிகழ்சிகளில் கலந்து
கொள்ள தடை விதித் திருப்பது அறமோ, முறையோ அல்ல! அதனை
மறுபரிசிலீனை செய்து குறைத்து அவர்களும் தங்கள் சனநாயக்
கடமையை ஆற்ற ஆவன செய்வீர்கள் ,என நாடே எதிர் பார்க்கிறது! மாண்பு மிகு முதல்வர் அவர்களும் இதில் கவனம்
செலுத்த பணிவன்போடு வேண்டுகிறேன்!


உறவுகளே!
சமுதாயத்தில் ,நாம் பிறருக்காக அஞ்சி,தவறு செய்யாமல் வாழ்வதை, விட நம் மனசாட்சிக்கு பயந்து வாழ்வதே நேர்மையான நடமுறையாக இருக்கும்! காரணம், அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ, மனைவிக்கோ
அல்லது, சமுதாயத்தில் மற்றவர்களுக்கோ அஞ்சினால் ,அவர்கள் காணாத வகையில் தவறு செய்யத் தோன்றலாம்! ஆனால் நாம், நம்
மனசாட்சிக்குப் அஞ்சினால் தவறே நடக்காது ஏனெனில் அதுதான்
நம்மோடு எப்பொழுதும் இருப்பதாகும்


மக்கள் ,நடுத் தெருவிலே நடக்காமல் நடை பாதையில் நடப்பது சட்டத்திற்கு மதிப் பளித்து , என்றால் பாராட்டுக்குரியது!
தெருவில் நடந்தால் வரும் வண்டிகள் மோதுமே என்று
அஞ்சிதான் என்றால், அது, அந்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி
இருக்க முடியும்!