Monday, February 6, 2017

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர் சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்!



சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர்
சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமயோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
இறைவாநீ! என்றுமே மன்னனைத் தொழுவர்!


பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
பலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!

புலவர் சா இராமாநுசம்