Tuesday, November 20, 2012

எம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே



எம்மொழி உமது தாய்மொழி யென்றே 
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே 
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே 
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே 

என்றும் இளமை குன்றா மொழியே 
ஈடே இல்லா தமிழரின் விழியே 
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே 
நானிலம் போற்றும் வளமையும் உண்டே 

கன்னித் தமிழாம் கனியின சுவையாம் 
காலத்தால் என்றும் அழியா மொழியாம் 
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம் 
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம் 

இன்னல் பலபல எய்திய போதும் 
எதிரிகள் செய்திட கலப்பட தீதும 
கன்னல் தமிழே கலங்கிய தில்லை 
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை 

புலவர் சா இராமாநுசம்

18 comments:

  1. தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்வோம்
    தங்களை பார்பதற்கு மகிழ்ச்சி அடைவோம்

    ReplyDelete
  2. வரிகள் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. தமிழனென்றே சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா!
    பாரதியார்

    தமிழனாகப் பிறந்ததும் பெருமை.
    உங்களைப் போன்ற தமிழ்க்கவிகளைக்
    காண்பதும் எங்களுக்கு பெருமை தான் புலவர் ஐயா.

    ReplyDelete
  4. சிந்தையில் தித்திக்கும்
    திகட்டாமல் தாளமிடும்
    எம் தாய்த்தமிழுக்கு
    அழகிய கவி படைத்தீர்கள் பெருந்தகையே...
    அருமை..

    ReplyDelete
  5. //இன்னல் பலபல எய்திய போதும்
    எதிரிகள் செய்திட கலப்பட தீதும
    கன்னல் தமிழே கலங்கிய தில்லை //

    உண்மைதான். கன்னித்தமிழ் என்றுமே கலங்கியதில்லை. கவிதைக்குக்கு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  6. கன்னித்தமிழ்,கலங்காத தமிழ்
    அருமை ஐயா

    ReplyDelete
  7. // எம்மொழி உமது தாய்மொழி யென்றே
    என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
    செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
    செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே //

    எனது தாய்மொழி தமிழ் என்பதில் நான் பெருமையும் உவகையும் கொள்கிறேன்.

    ReplyDelete
  8. புலவர் மொழியென்று
    பலருரைக்கும் நிலையின்று
    பாராள்வோர் கைவிட
    பாவலர் உம்போன்றோர்
    பறையறிவிக்க
    பாங்காய் வாழுது
    எம் தமிழ்

    ReplyDelete
  9. செந்தமிழ் பெருமை படித்ததிலே இன்பத் தேன் வந்து இனித்ததென் நாவினிலே

    ReplyDelete
  10. இன்னல் பலபல எய்திய போதும்
    எதிரிகள் செய்திட கலப்பட தீதும
    கன்னல் தமிழே கலங்கிய தில்லை
    காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை//

    அழகிய வரிகள்...வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete