Thursday, October 2, 2014

உத்தம உன்புகழ் உலகில் வாழ்க! உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!


அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே
அடிமை விலங்கை அகற்றினார் அன்றே!
திண்மை அகிம்சையாம் அறவழி என்றே
தேடிக் கொடுத்தார் விடுதலை ஒன்றே!
உண்மையைத் தனது உயிரெனக் கொண்டே
உத்தமர் காந்தி, செய்தார் தொண்டே!
மண்ணில் பிறந்த மாந்தரில் எவரே
மாகாத்மா வாக மதித்தது! இவரே!


நிறவெறி தன்னை நீக்கிட வேண்டி
நீலத்திரைக் கடல் அலைகளைத் தாண்டி!
அறவழி நடந்து, ஆப்பிரிக்க நாட்டில்
அல்லல் பட்டது காண்போம் ஏட்டில்!
தீண்டா மையெனும் தீமையை ஒழிக்க
தீவிரம் காட்டிட சிலரதைப் பழிக்க!
வேண்டா மையா சமூக கொடுமை
விட்டது இதுவரை நம்செயல் மடமை!

இடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி
ஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி!
உடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென
உள்ளம் நொந்தவர் உறுதியே, பூண்டவர்,
எடுத்தார் விரதம் இறுதி வரையில்!
இறந்து வீழ்ந்தார் முடிவெனத் தரையில்!
கொடுத்தனர் பாவிகள் குண்டாம்பரிசே
கொன்றான் மதவெறி கொடியவன் கோட்சே!

எத்தனை நாட்கள் சிறையில் காந்தி
இருந்தவர் எனினும் எண்ணமே சாந்தி!
புத்தனாய் வாழ்ந்தார் போற்றிட, உலகம்
பதவியை நாடாப் பண்பினில் திலகம்!
சத்திய சோதனை வாழ்வாய் கொண்டே
சரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே!
உத்தம உன்புகழ் உலகில் வாழ்க!
உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!

புலவர் சா இராமாநுசம்

20 comments:

  1. வாழ்க நீ எம்மான்.

    ReplyDelete
  2. காந்தி போற்றுவோம்
    காந்தி போற்றுவோம்
    தம 2

    ReplyDelete
  3. தேசப்பிதாவை மறந்து விட்ட மக்கள் மத்தியில் அவர் தொண்டுதனை நினைவூட்டிய கவிதை.
    த.ம.3

    ReplyDelete
  4. இடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி
    ஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி!
    உடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென
    உள்ளம் நொந்தவர் உறுதியே, பூண்டவர்,
    எடுத்தார் விரதம் இறுதி வரையில்!
    =========
    இன்றைய அரசியல்வாதிகள் உணர வேண்டியது....

    ReplyDelete
  5. அருமையான பாடல் புலவர் ஐயா.

    ReplyDelete
  6. அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே

    சிறந்த பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  7. காந்தியைப் போற்றுவோம்..

    ReplyDelete
  8. மனித வரலாற்றிலேயே மகத்தான மனிதர் காந்திஜி .உங்கள் கவிதாஞ்சலி அருமை !
    த ம 8

    ReplyDelete
  9. அண்ணலுக்கு அழகான புகழாரம்.. எதிர்பாரா பணிச் சூழல் காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை ஐயா. இனி தொடர்ந்து வருவேன் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  10. காந்தி மகானைப் போற்றிப் பாடியே மனம் மகிழச் செய்தீர்கள்
    அருமையான பா !மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா திரு.புலவர் இராமாநுசம் அவர்களுக்கு,

    வணக்கம். மகாத்மா காந்தி பற்றிய கவிதை அருமை. வாழ்த்துகள். நானும் ஒரு கவிதை காந்தி பற்றி எழுதியுள்ளேன்.
    எனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  12. அந்த மகானுக்கு அருமையான கவிதை ஆரத்தைப் படைத்தீர் ஐயா! அருமையான வரிகள்!

    ReplyDelete