Monday, October 24, 2011

இடுவீர் பிச்சை இடுவீரே



  இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
   ஏழைகள் கற்க விடுவீரே
 கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
   கேடெனக் களையின் எதிர்நாளே
 தொடுவீர் ஏழைகள் நெஞ்சத்தை-உடன்
   தொலைப்பீர் கல்வியில் இலஞ்சத்தை
 விடுவீர் ஏழைகள் நிலைஉயர-அவர்
   வேதனை நீங்கி தரமுயர

திறமை இருந்தும் பயனின்றி-வீணே
    தேம்பிட வாழல் மனங்குன்றி
 அறமா கருதிப் பார்ப்பீரே-பணம்
    அளித்தால் எவரையும் சேர்ப்பீரே
 தரமே அற்றவர் போனாலும் –அந்தோ
    தருவீர் இடமே!ஆனாலும்
 வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
    வாழ்வே குட்டிச் சுவர்தானா

இல்லோர்  கல்வி இல்லோரா-இதை
    எடுத்து எவரும் சொல்லாரா
 நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
    நாட்டுக்கு நலமா கூறுங்கள்
 வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
    வாழ்வை அழிக்கும் பேய்க்காலா
 கல்லார் என்றும் அவர்தான-கேட்கும்
    கவிதை இதுவென் தவற்தானா

ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
    இருப்பது இறைவன் தானென்றீர்
 பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
    பிணைத்திட பணமது தாம்பாக
 வாழையின் அடிவரும் வாழையென-அவன்
    வாழ்ந்தே மடிவது கொடுமையென
 கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே

Sunday, October 23, 2011

ஊரறிய உலகறிய உண்மை தன்னை

      ஐ.நா அறிக்கை வந்தபோது எழுதியது


 ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
    உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை
 பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்
    பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்
 சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
    செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக
 வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
    விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா

 தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
      தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே
 இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
      இனப்பற்றே வெறியாக விளையும் கேடே
 கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
      காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
 பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
      பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே
 
 ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
     ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே
 ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
     உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்
 கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்
     கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்
 பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
    பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே

 கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
    காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
 மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
    மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
 எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
    ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்
 உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
    உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்
                                                                                     
           புலவர் சா இராமாநுசம் 

Friday, October 21, 2011

வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

  
தேசியம் என்றாலே பொருளறிய தாரே
  தேசியம் பேசுவதா திருத்துவது யாரே
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
  தினந்தோறும் மீனவரின் துயரமே இன்றே
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
  கொட்டவும்  குனிவதா கேலியவர் பேச
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
  பரவட்டும் எதிர்பெனும் தீமிகப் பற்றி

எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
  எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
  உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
  சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
  வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

கச்சத் தீவை கயவர்கள் கையில்
  காரண மின்றியே கொடுத்தமே வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
  ஆடும் ஆட்டம் சொல்லியே பயனில்
துச்சமே அவரென துரத்துவோம் இன்றே
  துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சமே இன்றியே அனைவரும ஓட
  மேதினி முற்றுமே நம்புகழ் பாட
       
               புலவர் சாஇராமாநுசம்

 

Wednesday, October 19, 2011

இன்றென் பிறந்த நாளாகும்

 
 எட்டுப் பத்தென  வயதாகும்-ஐயா
   இன்றென் பிறந்த நாளாகும்
பட்டுப் பட்டே பதப்பட்டேன்-துன்பம்
   பட்டே நானும் சுகப்பட்டேன்
தொட்டுத் தாலி கட்டியவள்-நெஞ்சில்
   துயரத் தீயை மூட்டுயவள்
விட்டுச் சென்றது ஒன்றேதான்-என்றும்
   விலகா வேதனை அன்றோதான்

வையம்  தன்னில் வாழ்வாங்கு-நான்
   வாழ்ந்த வாழ்வு மனமோங்க
பொய்யும் புரட்டும் இல்லாமல்-பிறர்
   புறத்தே எதுவும் சொல்லாமல்
ஐயன் வகுத்த வழியென்றே-முடிந்த
   அளவில் நானும் பழியின்றே
செய்யும் பணிகளைச் செய்தேனே-நட்பே
   சிறப்பென அன்பைப் பெய்தேனே

சிதலைத் தின்ற ஆல்போல-அடி
   சிதைய அந்தோ! நாள்போல
மதலை விழுதே தாங்குமன்றே-பெற்ற
   மகளீர் என்னையும் அதுபோன்றே
இதமாய் நாளும் தாங்கிடவே-வற்றா
   இளமை மனதில் தேங்கிடவே
பதமாய் நடந்தே வாழ்கின்றேன்-கவிதை
   படைப்பதே பணியெனச் சூழ்கின்றேன்

வலையில் கவிதைப் படிப்பவரே-எனை
   வாழ்த்திக் கருத்தும் கொடுப்பவரே
அலையில் பட்ட துரும்பாக-ஓர்
   ஆலையில் பட்டக் கரும்பாக
நிலையில் மனதும் நிலையாக-பெரும்
   நிம்மதி! துயரம் அதுபோக
விலையில் பாசப் பந்தங்களே-உம்மால்
   விளைந்தது! நன்றி! சொந்தங்களே

                         புலவர் சா இராமாநுசம்

Monday, October 17, 2011

உலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

                    புலவர் சா இராமாநுசம்

           

 

Saturday, October 15, 2011

மீண்டும் எழுந்தது போராட்டம்

   

 மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை
   மிரட்டவும் அல்ல போராட்டம்
தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்
  துச்சமா எண்ணிடல் எளிதல்ல
வேண்டி யாரும் செய்யவில்லை-வாழ
  வேண்டியே வேறு வழியில்லை
சீண்டியே அவர்களை விடுவீரோ-அரசுகள்
  சிந்தித்து செயலும் படுவீரோ

தேர்தல் கருதி சொன்னீரோ-ஓட்டுத்
   தேவையைக் கருதி சொன்னீரோ
தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
   தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்
யார்தலை யிட்டு முடிப்பாரோ-எவரெவர்
   என்ன முடிவு எடுப்பாரோ
போர்மிக அறவழி நடந்தாலும்-அதில்
   புகுந்தால் அரசியல் கெட்டுவிடும்

செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
   சிறிதும் இருக்குமா என்றேதான்
ஐயம் என்னுள் எழுகிறதே-நெஞ்சும்
   அஞ்சி பயத்தில் விழுகிறதே
பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
   போனதே கட்சிகள் அரசியலே
உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
   உண்மை பலருக்கும் புரியவில்லை

மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
   மீளவும் காரணம் இன்றேதான்
தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
   தணித்திட உறுதி பூண்பீரே
துக்கம் போக்கிட அரசுகளே-இரு
   தூணாய் விளங்கும் அரசுகளே
மக்கள் குரலை மதிப்பீரே-உடன்
     மகிழ்ந்து போற்றி குதிப்பாரே!

               புலவர் சா இராமாநுசம்

 

Friday, October 14, 2011

புலத்தில் வாழும் தமிழருக்கும்



    புலத்தில் வாழும் தமிழருக்கும்-வேறு
      புலத்தில் வாழும் தமிழருக்கும்
    உளத்தில் உள்ள குறைநிறைகள்-நான்
      உணர்ந்ததின் விளைவே இக்கவிதை
    வளத்தில் சிறந்த யாழ்மண்ணில்—மீள
      வளமொடு திகழ யாழ்தன்னில்
   குளத்தில் நீரிலாத் தாமரையாய்-வன்னிக்
      குடிகள் சுருளக் காண்பதுவோ
  
   தீதோ தவறோ தெரியாதே-துயர்
       தேங்கிட நெஞ்சில் புரியாதே    
   ஏதோ என்னுள் தோன்றுவதை-இங்கே
       எழுதிக் கவிதையாய் ஊன்றியிதை
   வாதோ  செய்திட தரவில்லை-பிடி
       வாதமும் பிடித்திட வரவில்லை
   மோதா வகையில் உடன்கூடி-பேசி
       முடிவை எடுப்பீர் நலன்நாடி
  
   வெளிப்படை யாக எழுதிவிட-நான்
       விரும்ப வில்லை பழுதுபட
   களிப்பிலா மக்கள் வன்னியிலே-உடன்
       காத்தவர் பெற்றிட நன்னிலையே
   அளிப்பதே அனைவரின் முதற்கடனே-என
       ஆவன செய்வோம் நாமுடனே
   தெளிவுற ஒன்றாய் கூடுங்கள்-என்ன
        தேவையோ அதனைத் தேடுங்கள்
  
   ஒன்று பட்டால் வாழ்வுண்டே-நீர்
        உணர்ந்து செய்வீர் இத்தொண்டே
    நன்று இச்செயல் நடக்கட்டும்-அதனால்
        நாட்கள் சிலபல கடக்கட்டும்
   இன்று தேவை எண்ணீடுவீர்-நம்
        எதிரியைப் பிறகே வென்றிடுவீர்
  கொன்றுத் தின்ற கொடும்பாவி-அவன்
       கொடுப்பான் விரைவில் உடலாவி
          
                     புலவர் சா இராமாநுசம்
    
        
 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...