Thursday, March 15, 2012

ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம் உடனடி செய்வது பொறுத்தமே!அ


ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம்
   உடனடி செய்வது பொறுத்தமே!
இருநாள் வீணே போயிற்றே-தமிழ்
   இனமே விரைந்து செயலாற்றே!
வெறிநாய் சிங்களர் உணரட்டும்-படை
   வீரர்கள் அணியென திரளட்டும்!
வருநாள் உலகம் அறியட்டும்-இறுதி
    வாழ்வா சாவா? தெரியட்டும்!

கூடங் குளமாய் ஆகட்டும்-மக்கள்
   கொதித்து ஊர்வலம் போகட்டும்!
பாடம் வடவரும் கற்கட்டும்-அதைப்
   பார்த்தே சிங்களர் மிரளட்டும்!
வேடம் கலைந்திட சிலரிங்கே-தலை
  வெட்கிக் குனிய வருமிங்கே
நாடகம் முடியும் அப்போதே-இதை
   நடத்துவோம்! உண்மை! தப்பாதே!

இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
    இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
   மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
    சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவ ஒன்றென செய்வீரே-பெரும்
    அறப்போர்! விரைவில் உய்விரே!

வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
   வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
    அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
   பார்த்தா..?புறப்படும்! இப்போதே!
பிணியிது! மருந்திது! செயல்படுவீர்!-நம்
    பேரினம் அழியவா வழிவிடுவீர்!?

                                 புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 14, 2012

வங்கக் கடலில் புயல்போல வருவீர்! எழுவீர்! அலைபோல!


இனியும் எதற்காம் வேடிக்கை-மத்தியில்
   எடுத்த முடிவவர் வாடிக்கை!
கனியும் காயல பிஞ்சவரே-ஆடிக்
   காற்றில் பறக்கும் பஞ்சவரே
பணிந்து வேண்டுதல் நம்தவறே-அறப்
   போரினைத் தொடர நம்மவரே
துணிந்து செயல்படின் இப்போதே-உடன்
   தொல்லைத் தீரும் அப்போதே!

ஊருக்கு ஊரும் ஊர்வலமே-உணர்வு
   ஓங்கிடத் தருவீர் ஒலிவளமே
யாருக்கும் அஞ்சிட வேண்டாமே-மேலே
    எதுவும் நடப்பினும் ஈண்டாமே
பேருக்கு செய்வது இதுவல்ல-வீண்
    போட்டிக்கும் செய்வது இதுவல்ல
கோரிக்கை வைத்தோம் பயனில்லை-என்றும்
    கோழையா? நாங்கள்! இனியில்லை

இலவு காத்த கிளியாகி-இரக்கம்
    இல்லா அரசால் பலியாகி
உலவ ஈழம் நடைப்பிணமாய்-நாம்
     உணர்வே இன்றி கிடப்போமா
நலமே பெற்றவர் வாழட்டும்-இன்றேல்
    நம்மினம் முற்றும் அழியட்டும்!
பலமே நமக்கு மனஉறுதி-சிங்கள
    பாவிகள் தமக்கு அதுயிறுதி

பொங்கி எழுவாய் தமிழகமே-சில
    போலிகள் ஒதுங்கட்டும் தமிழினமே
எங்கும் தொடங்கட்டும் அறப்போரே-இன
     அழிவைத் தடுத்திட இப்போரே
தங்குத் தடையது இல்லாமல்-ஏதும்
     தனிவழி யாரும் செல்லாமல்
வங்கக் கடலில் புயல்போல
     வருவீர்! எழுவீர்! அலைபோல!

                புலவர் சா இராமாநுசம்

Tuesday, March 13, 2012

ஈழம் மேன்மை கொண்டே மலரட்டும்!


மீண்டும் இங்கே பாடுகின்றேன்-கருணை
     மத்தியில்  எங்கே? தேடுகின்றேன்
வேண்டும் மௌனம் கலைந்திடவே-உடன்
     விரைவில் முடிவு எடுத்திடவே
மாண்டவர் எம்மவர் நடந்தகதை-அதை
     மாற்றிட செய்வீர் இன்றேயிதை
சீண்டிட வேண்டாம் மேன்மேலும்-தீய
     சிங்களர் வாழந்திட வருநாளும்!

அச்சம் கொள்ள கேட்டவரும்-அந்தோ
     அழுது அலற பார்த்தவரும்
பச்சிளம் பாலகன் படுகொலையை-இன்று 
     பார்த்தன உலகமே கொலைவெறியை
துச்சமா? எம்மினம் எண்ணாதீர்-சிறு
     துரும்பும் தூணாம்! பண்ணாதீர்
மிச்சம் உள்ளவர் வாழட்டும்-ஈழம்
     மேன்மை கொண்டே மலரட்டும்

இமயம் வரையில் வென்றானே-இன்று
     இதயம் வெடிக்க நின்றானே
சமயம் இதுதான் ஆள்வோரே-பெற்ற
     சாபம் நீங்கிடும் மீள்வீரே!
அமையும் ஈழத்தில் நல்வாழ்வே-சிங்கள
     அரசுக்கு எதிராய் ஓட்டளிப்பின்
உமையும் வாழ்த்திப் புகழ்வாரே-எனில்
    உலகில் தாழ்த்தி இகழ்வாரே

கன்றின் வாழ்வும் பட்டதென-தேர்
    காலில் மகனை இட்டவனை
இன்றும் போற்றும் எம்மினமே-என
    எண்ணிப் பாரீர் இத்தினமே
நன்றே செய்வீர் நம்புகிறோம்-ஆனால்
    நடந்ததை நினைப்பின் விம்முகிறோம்
ஒன்றே குரலாய் தமிழினமே-இங்கே
   ஒலிக்கும் ஒலியும் கேட்கிலையா ?

                            புலவர் சா இராமாநுசம்

  

Monday, March 12, 2012

இன்றென் பதிவு இருநூறே!


இன்றென் பதிவு இருநூறே-நான்
   எழுதிடப் பெற்றேன்! பெரும்பேறே!
சென்றன நாட்கள் இப்படியே-இனி
   செல்லுமா காலம் அப்படியே!
ஒன்றென இரண்டென நாளும்தர-என்
    உள்ளத்தில் கவிதை பிறந்துவர
நன்றென நீங்கள் நவின்றதுவே-மேலும்
   நல்கிடக் காரணம் ஆனதுவே

வளர்த்த பெருமை உமக்காகும்-உமை
   வாழ்த்திட வாய்ப்பு எனக்காகும்
தளர்ந்த வயதில் கோல்போல-எனக்கு
    தந்தீர் ஊக்கம் நாள்போல
விளைந்த கவிதை நிலைபோல-நல்
   விதையில் பெய்த மழைபோல
வளைந்த நெல்லின் கதிர்போல-நான்
    வணங்கிட வாழ்த்துவீர் முன்போல
 
தானே புயல்போல் என்னவளே-துயர்
   தாக்க மறைந்துப் போனதிலே
வீணே! வாழ்வு இனியென்றே-மனம்
   வெதும்ப ஏங்கும் நிலையன்றே
ஏனோ இனியும்  வாழ்வதென-என்ற
   எண்ணம் நெஞ்சில் சூழ்ந்ததென
நானோ! வருந்திட வலைப்பூவே-உயிர்
   நல்கிய திந்த அலைப்பூவே!


நேரம் போவது தெரியாமல்-வேறு
   நினைப்பே ஏதும் அறியாமல்
பாரம் மிக்க எண்ணமே-கவிதைப்
   படைக்க சூழும் வண்ணமே
யாரும் வருவார் போவாரே-அவர்
   எவரோ அறியார் ஆவாரோ
கூறும் எதுவும் செவியேறா –அது
   குறையா! நிறையா! மொழிவீரா..?

                புலவர் சா இராமாநுசம்

Thursday, March 8, 2012

பெண்களே ஒன்று கூடுங்கள்! பேசியே முடிவைத் தேடுங்கள்!ம


மகளிர் தினமும் இன்றாமே
மகிழும் நிலையா? அன்றாமே!
புகலும் இன்றும் என்னநிலை
பொய்யர்கள் பேசும் மாயவலை

இடமே தனியே ஒதுக்கீடு
ஏனோ பலப்பல குறுக்கீடு
திடமே இல்லை யாருக்கும்
தினமே சொல்வது பேருக்காம்

எத்தனை ஆண்டுகள் போயிற்று
என்ன நடைமுறை ஆயிற்று
ஒத்த கருத்தும் இல்லையே
உதடு உதிர்ப்பது சொல்லையே

மக்கள் அவையே கூடுவதும்
(ஏ)மாற்றக்  கருத்தைத் தேடுவதும்
வெக்கக் கேடாம் சொன்னாலே
வேதனை வேதனை இந்நாளே

அந்தோ பாபம் இந்நாளை
அறியா மகளிர் தம்நாளை
வெந்தே தானேக் கழிக்கின்றார்
வீணே இறைவனைப் பழிக்கின்றார்

பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே

விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே

சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே

நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்

            புலவர் சா இராமாநுசம்




  

Wednesday, March 7, 2012

வரும் வரலாற்றில் பெரியப் புகழ்த்தருமே!


செய்தீர் இதுவரை பாபம்தான்!-இனியும்
   செய்தால் தமிழர் கோபம்தான்!
எய்யும் அம்பென எழுந்திடுமே-நம்
   ஏக இந்தியா விழுந்திடுமே!
பொய்யில்! உண்மை அறிவீரே-ஓட்டு
  போடுவீர் இலங்கைக்கு எதிராக
ஐயா! மத்தியில் ஆள்வோரே-ஈழம்
   அமைந்திட தமிழர் வாழ்வாரே!

ஜெனிவா நாட்டில் கண்டணமே-நாடுகள்
    சேர்ந்து செப்பிட அக்கணமே
துணிவாய் அதனை ஆதரித்து-மேலும்
    துணையாய் இருக்க வேண்டுமென
கனிவாய் தொழுது சொல்லுகின்றோம்-பாபக்
    கழுவாய் இதுவென கொள்கின்றோம்
இனியார் எதுவும் சொன்னாலும்-நீர்
    இதனைச் செய்யின் பழிமாளும்


மூன்றாம் ஆண்டும் ஓடியதே-அங்கே
   முள்ளால் வேலி தோன்றியபின்
சான்றாம் கொடுமைக்கு அளவுண்டா-தினம்
   சாகவும் வாழவும் வழியின்றி
ஈன்றாள் ஈண்டான் இல்லாது-அந்தோ
   எத்தனை குழைந்தைகள்! விழியின்றி
ஒன்றா இரண்டா சொல்வதற்கு-இந்த
   உலகம் உணர்ந்து கொள்வதற்கு



இந்தியக் குடியினர் தமிழினமே-என்ற
    எண்ணம் வைத்தால் உம்மனமே
சிந்திய உதிரம் காய்ந்திடுமே-வெறி
    சிங்களர் கொட்டம் ஓய்திடுமே
நிந்தனை பெற்றது மறைந்துவிடும்-ஏற்ற
   நேரம் இதுவென உணர்ந்துவிடும்
வந்தனை செய்வர் அனைவருமே-வரும்
   வரலாற்றில் பெரியப் புகழ்த்தருமே!

                     புலவர் சா இராமாநுசம்




  

Monday, March 5, 2012

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்...!


மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர்!
ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும்
பேழையுள் வைக்கும் பணமது கொண்டும்
அற்றார் அழிபசி தீர்தல் இன்றே
பெற்றான் பொருளை வைப்புழி என்றே
ஐயன் வள்ளுவர் அறைந்தார் அன்றே
பொய்யில்!உண்மை! உணர்வோம் நன்றே!

முன்னோர் உரைத்த முதுமொழி தன்னை
பொன்னே போல போற்றுவோம்! அன்னை
தன்நிகர் இல்லாத் தமிழ்மொழி போற்றி
இன்முகம் காட்டி இன்சொல் சாற்றி
மாற்றார் ஆயினும் மதித்து நடக்கும்
ஆற்றல் கொள்வீர்அன்பால் வெல்வீர்
இயற்கை தன்னின் இயல்பைக் காப்போம்
செயற்கை செய்யும் சிதைவை தடுப்போம்!

நல்லன கண்டு நாளும் செய்வோம்!
அல்லன செய்ய அஞ்சின்! உய்வோம்!
உடுக்கை இழந்தவன் கைபோல் சென்றே
இடுக்கண் களைவது நட்பாம் என்றே
வாழின் வையம் வாழ்த்திடும்! ஆமே!
சூழும் பெருமையும் வந்திடும்! தாமே!
கண்ணியம் கடமை கட்டுப் பாடனென
அண்ணா வழியில் அனைவரும் வாழ்வோம்



இப்படி வாழின் என்றுமே பெருமை
ஒப்பிட இயலா! உரைப்பதோ அருமை!
எப்படி யேனும் வாழ்ந்தால் சரியென
தப்படி வைத்தால் தண்டணை உரியன
அறிவீர்! தெளிவீர்! ஆவன உணர்வீர்!
பெறுவீர் வெற்றி!பேதமை அகற்றி
ஒன்றே செய்யினும் நன்றே செய்க
நன்றே செய்யினும் இன்றே செய்க!

                  புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...