Friday, April 6, 2012

அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை!


அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை
   அமிர்தமே ஆனாலும் அதுதான் எல்லை!
வளமில்லா நிலத்தாலே பயனே இல்லை
   வளராது பயிரங்கே!துயரே! எல்லை!
களமின்றி விளையாட்டா? எதுவும்இல்லை
    கண்ணற்றார் துயருக்கு ஏது எல்லை!
உளமின்றி செய்வார்க்கு வெற்றி இல்லை
    உணர்வின்றி நடப்பார்க்கும் அதுவே எல்லை!

பொய்சொல்லி வாழ்வதும் வாழ்வா இல்லை
    புறம்சொல்லி திரிவார்க்கும் வருமே எல்லை!
மெய்சொல்லி வரும்துன்பம் உண்மை யில்லை
    மேதினியில் அவர்வாழ்வே புகழின் எல்லை!
செய்நன்றி மறந்தார்க்கும் உயர்வே யில்லை
     சினம்காக்க தவறினால் அழிவே எல்லை!
தொய்வின்றி உழைப்பார்க்கு தோல்வி யில்லை
     தோற்றாலும் முயற்சிக்கு இல்லை எல்லை!


விதியென்ற சொல்லுக்கு வலிமை இல்லை
     வீணென்று புறந்தள்ளி நடப்பின் எல்லை
மதிவென்று வாழ்வுகுத் தாழ்வேஇல்லை
   மட்டற்ற மகிழ்வுக்கே காணார் எல்லை!
எதுவொன்றும் குறையின்றி ஆயின், இல்லை
     இனிதென்ற சொல்லுக்கு, வாழ்வில் எல்லை!
இதுவென்று சொல்பவர் யாரும் இல்லை
     இவ்வண்ணம் செயல்படின் உண்டோ எல்லை!

                    புலவர் சா இராமாநுசம்
   


Wednesday, April 4, 2012

அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!


கற்றிலன் ஆயினும் கேட்டலும் நன்றே
   கற்றாரின் சொற்களை ஏற்றலும் நன்றே!
பெற்றவர் தமையென்றும் பேணுதல் நன்றே
    பெரியோரைத் துணையாகக் காணுதல் நன்றே!
உற்றவர் துயர்கண்டே நீக்குதல் நன்றே
    உண்மையை மறைக்காமல் உரைப்பதும் நன்றே!
அற்றவர் அழிபசி தீர்தலும் நன்றே
     அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!

வழியலா வழிசென்று வாழ்வதும் தீதாம்
    வைதாரைப் பதிலுக்கு வைவதும் தீதாம்!
பழிவர எச்செயலும் செய்வதும் தீதாம்
    பாதகர் தம்முடன் பழகலும் தீதாம்!
இழிகுணம் ஒருவர்க்கு என்றென்றும் தீதாம்
    இல்லாரை எள்ளுதல் மிகமிகத் தீதாம்!
விழியெனக் கல்வியை அறியாமை தீதாம்
    வீண்காலம் போக்குதல் வாழ்வுக்கே தீதாம்!

எண்ணியே எச்செயலும் செய்திட வேண்டும்
     எண்ணாமல் ஆபத்தில் உதவிட வேண்டும்!
கண்ணியம் வார்த்தையில் என்றுமே வேண்டும்
    கடமையைத் தவறாது செய்திட வேண்டும்!
புண்ணியம் எதுவென்று அறிந்திட வேண்டும்
    புகழ்பெறப் பிறரைப் புகழ்ந்திட வேண்டும்!
பெண்ணினம் தன்னையே போற்றிட வேண்டும்
     பிறர்வாழ தான்வாழ நினைத்திட வேண்டும்!

                      புலவர் சா இராமாநுசம்



Monday, April 2, 2012

யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே!


யாதும் ஊரே யாவரும் கேளீர்!
ஓதினான் அன்றே புலவன் நன்றே
கோதில் அன்னோன் கூற்றை ஏற்றே
மேதினி அறியதன் மேன்மையை சாற்றே!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!
சேதியை எடுத்தும் செப்பினான் அவனே!
நோதலும் தணிதலும் அதுபோல் என்றே
நுவன்றவன் அவனே! மேலும் நன்றே!


இப்படிப் பல்வகைக் கருத்துகள் கொண்டே
ஒப்பிட இயலாத் தமிழில் உண்டே!
செப்பிட முடியா இலக்கியப் பாடல்
எப்படி யேனும் படித்திட வேண்டும்!


பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல என்றே வகுத்தனர் இலக்கணம்!
பிழையென எதையும் தள்ளுதல் வேண்டா
விழைவன தவறெனில் கொள்ளுதல் வேண்டா!


உள்ளுவ தெல்லாம் உயர்வென இருப்பின்
எள்ளும் நிலையே என்றும் வாரா!
தெள்ளிய தமிழில் திருமறை வடித்த
வள்ளுவன் வகுத்த வழிதனில் செல்வீர்!


ஏதிலார் குற்றம் கண்டது போதும்
வாதமே செய்து வாழ்ந்தது போதும்!
சோதனைப் பற்பல! மோதும் போதும்
சாதனைச் செய்திட முனைவீர் ஏதும்!


இரவும் பகலுமாம் இன்பம் துன்பம்!
வரவும் போதலும் வழிவழி யாகும்!
உறவும் உணர்வும் ஒன்றிடவாழின்
துறவும் வேண்டா துன்பமும் தீண்டா!


நல்லன செய்தே நலமிக வாழும்
அல்லன நீக்கி அறமது சூழும்
வல்லமை ஒன்றே! வாழும் வழியாம்!
இல்லறம் காக்கின் இல்லை பழியாம்!

                                   புலவர் சா இராமாநுசம்

Saturday, March 31, 2012

மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே மின்சார சுடுகாடாம் ஆமேஈண்டே!


மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே
     மின்சார சுடுகாடாம் ஆமேஈண்டே
பொன்போல கட்டணமே விண்ணைமுட்ட-மற்ற
     பொருள்களின் விலையேற்றம் கண்ணீர்சொட்ட
என்செய்வர் மக்களும் அம்மாயம்மா-மேலும்
     அடிமேலே அடியா சும்மாயம்மா!
மின்சாரக் கட்டணம் குறைப்பீரம்மா-இந்த
     மின்வெட்டே! வாட்டுவது, போதுமம்மா!

நாதியின்றி வாழ்பவர் நாட்டிலின்றே-இன்று
    நடுத்தர குடும்பங்கள் பாவமன்றே!
வீதியிலே இறங்கிவர இயலாரென்றே-இந்த
    வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர்நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பாருமம்மா-அப்
    பாவிகளின் துயரத்தைத் தீருமம்மா!
நீதிக்கும் குரல்கொடுக்க துணியமாட்டார்-இரவு
     நிம்மதியும் இல்லாமல் உறங்கமாட்டார்!

பணக்காரர் இதுபற்றி  கவலைகொள்ளார்-இங்கே
    பரமயேழைக்கும் இலவசம்! தொல்லையில்லார்
கணக்காக செலவுதனை திட்டமிட்டும்-மாதக்
     கடைசியிலே கடன்வாங்கித் துயரப்பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப்பலரும்-வாழும்
    பேதைகளாம் நடுத்தரமே! பொழுதாபுலரும்!?
குணமான குன்றேறி நின்றாரவரே!-அவர்
    கொதித்தாலே எதிர்வந்து நிற்பாரெவரே!

வெந்துவிட்ட  புண்ணிலே வேலும்பாயா-மேலும்
    வேண்டுமா?முயல்வீரே! நாளும் ஆய!
நொந்துவிட்டார் ஏற்கனவே அறிவீர்நீரே-அந்த
     நோக்காடே தீரவில்லை! இதுவும்வேறே
வந்துவிட்டால் துயர்நீங்க வழியேயில்லை!-எதிர்
    வரலாற்றில் என்றென்றும் பழியேயெல்லை!
கந்துவட்டி மேலாகும் இந்தவுயர்வே-எம்மைக்
    கடங்காரன் ஆக்காதீர் கருணைகாட்டும்!

                        புலவர் சா இராமாநுசம்
   

Thursday, March 29, 2012

காலம் ஓடும் நிற்காதே-வீண் காலம் கடத்தல் ஆகாதே!


காலம் ஓடும் நிற்காதே-வீண்
  காலம் கடத்தல் ஆகாதே!
ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்
   நடப்பது இயற்கைப் பேராலே
ஆலம் கூட மருந்தாகும்-தூய
  அன்பே ஏழைக்கு விருந்தாகும்
கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
   கொள்கை அழகு! பேசலுக்கு

திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
   தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
   பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
    கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
   எண்ணா செயல்தரும் துயரன்றோ

மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
   மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
   சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நம்
   குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
   சிந்தனை தன்னில் ஆழ்வோமே

வையம் தன்னில் வாழ்வாங்கு-நாம்
   வாழ என்றும் புகழோங்கும்
செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
    சீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
   உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
   பூமியில் புகழச் சொல்லேது!

                   புலவர் சா இராமாநுசம்


Wednesday, March 28, 2012

ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே!



ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று
   அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே
கூசுகின்ற காட்சியினை திரையில்கண்டேன்-மனம்
   கொதிப்படைய இக்கவிதை இங்கேவிண்டேன்
மாசுதரும் இசெயலே காவல்துறைக்கே-ஆளும்
    மாண்புகளும் பெறுவாராம் இதிலேபங்கே!
பேசுகின்றார் மக்கள்மிகத் துயரப்பட்டே-கறைப்
   போக்கிடவும்? துடைப்பீரா வருத்தப்பட்டே!

ஏணியாக அனைவரையும் ஏற்றிவிட்டே-வாழ்வில்
    என்றென்றும் வறுமையே நாளும்பட்டே
கேணியாக ஊருக்கே நீரும்தந்தார்-இன்று
    கேவலமாய்த் தள்ளிவிட அந்தோ!நொந்தார்!
தோணியாகக் கரைதனிலே ஏற்றிவிட்டே-இன்று
     துயரமெனும் தீயாலே எரியும்பட்டே
நாணுகின்ற நிலைதானே நெஞ்சில்கொண்டேன்-ஐயா
     நானுமொரு ஆ, சி(றி)ரியன் எனவேவிண்டேன்

நாட்டுக்கே கோவலமாம் இந்தக்காட்சி-மிக
     நல்லோரே சொல்லுங்கள் இதுவாமாட்சி
கேட்டுக்க ஆளில்லை! எண்ணவேண்டா-இந்தக்
    கொடுமைக்கே இனியேனும் எல்லைஉண்டா
ஓட்டுக்கு வரும்போது உரைப்பதென்ன-அதை
    உணராது நடப்பதும் என்னஅன்ன?
பாட்டுக்கே வேண்டியிதை எழுதவில்லை-பாதை
    பழுதின்றி சென்றாலே வாரதொல்லை!

                         புலவர் சா இராமாநுசம்




   
      

Monday, March 26, 2012

வலையின் வயது ஒன்றாகும்!


வலையின் வயது ஒன்றாகும்-நீர்
    வாழ்த்திடப் பிறந்தது இன்றாகும்
இலையில் தெளித்த முத்தாகும்-அது
    இதயத்தில் வாழும் சொத்தாகும்
அலையில் மிதக்கும் கலமாகும்-என்
    அகமே விளையும் நிலமாகும்
நிலையில் வாழ்வில் நிலையாகும்-உயிர்
    நீங்கிடின் கவிதைக் கலையாகும்


எட்டுத் திக்கிலும் உள்ளாராம்-என்
   இதயம் கவர்ந்த பல்லோராம்
தட்டித் தட்டி வளர்த்தாரே-நல்
   தமிழாம் பண்பின் உளத்தாரே
மொட்டுள் உள்ள மணம்போல-நாசி
   முகரத் தந்தார் தினம்போல
கட்டிக் காத்தார் என்வலையே-ஏதும்
    கவலை என்றும் எனக்கிலையே!

இளமைப் பருவம் போயிற்றாம்-என
    இதயம் இளமை ஆயிற்றாம்
வளமைத் தந்தாள் தமிழன்னை!-மேலும்
    வாழ வைப்பதும் அவளென்னை
உளமே மகிழ இதனாலே-கவிதை
    உருவாய் பிறந்திடும் அதனாலே
களமே! கணிணீ! ஆனாயே-என்
   கவிதை வளர்ப்புத் தாய்நீயே!

எப்படி ஓடின பலநாளும்-அது
   எனக்கும் தெரியா! வருநாளும்
இப்படிப் போனால் அதுபோதும்!-கவிதை
    எண்ணத்தில் நாளும் அலைமோதும்
தப்படி வாழ்வில் வைத்ததில்லை-நான்
    தனக்கென எதையும் சொன்னதில்லை
செப்பிட மேலும் ஏதுமிலை-என்
    சிந்தையில் அணுவும் தீதுமிலை!

               புலவர் சா இராமாநுசம்



   



இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...