Friday, April 11, 2014

செய்தி! அறிவிப்பு!




உறவுகளே! கடுமையான முதுகுவலி ! மருத்துவர் அறிவித்த படி
இம்மாதம் முழுவதும் ஓய்வு தேவைப்படுகிறது! பொறுத்தருள்க!
நலமடைந்ததும் சந்திப்போம்

வணக்கம்!


புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, April 9, 2014

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று ஆனார் இளங்கோ அடிகளென



ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் 
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

Monday, April 7, 2014

என் முகநூலில் அகம் பதித்த முத்துக்கள்





மனிதன், தன் நன்மைக்காக இயற்கையோடு போராடி வெற்றி கண்டாலும், அவன் வெற்றி கெள்ளமுடியாத பல
சக்திகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன !உதாரணமாக
கொழுந்து விட்டு எரியும் தீயை வேண்டுமானால் அணைத்துவிடலாம். குமிறி வெடிக்கும் எரிமலையை அணைக்க முடியுமா!? அது , தானேதானே அடங்க வேண்டும்

வெள்ளம்கூட முதலில் பள்ளம் இருகுமிடம் நோக்கித்தானே பாயும் அதுதானே இயற்கை! அது நிரம்பிய
பிறகுதானே மேடு நோக்கித் திரும்பும் ! நம் வாழ்க்கையும் அப்படித்தான்! நம்முடைய வாழ்க்கையில் வரும் மேடு, பள்ளங்களுக்கு ஏற்பவே ,வெற்றிகளும், தோல்விகளும் அமையும்!
வாழ்வில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் உள்ளத்தில் தோன்றும் எண்ணம் தான் முதல் காரணமாகிறது! அதன் பிறகே அது செயல் வடிவம் பெறுகிறது! எனவே எண்ணம் தூயதாக இருக்குமானால் ,செயலும் தூயதாகவே அமையும்

நெருப்பு வெளியில் இருந்தால்தான் நீரைச் சூடாக்க முடியும்! அதுவே நீருக்குள் சென்றால் அதுவே அவிந்து தானே போகும்! அதுபோலத்தான் மனிதர்களும், தம் தகுதிக்குரிய ,இடத்தில் இருந்தால்தான் அவர்களின் சக்தியை
வெளிப்படுத்த இயலும்! மீறினால் நெருப்பின் கதிதான் அவர்களுக்கும் வரும்!

யாரோ ஒருவன் உயிருக்குப் பயந்து நம்மிடம் அடைக்கலமாகிறான்! துரத்தி வரும் கூட்டம் வந்து கேட்டா,இங்கில்லையே என்று பொய் சொல்லி காப்பாற்றுகிறோம் என்றால் இது பொய்யா!!!
அல்ல! என்கிறார் வள்ளுவர்! அது பொய்தான் என்றாலும்
உண்மையின் இடத்தில் வைக்கலாம் என்கிறார் ! போனால்
வராத உயிரைக் காக்க ,சொன்னதும் மேலும் , அவர் தனக்கு
ஏதும் நன்மை கருதி சொல்லாததும் எண்ணி ஆய்வு செய்தால்
உண்மைக்கு ஒப்பாகும் அது என்பதே கீழ் வரும் குறள் தரும் பொருளாகும்

பொய்மையும் வாய்மை இடத்த புரைநீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

அறம் என்றால் என்ன!? பொருள் உள்ளவன் இல்லாதவனுக்குக்
கொடுத்து , உதவுதல் ஆகும்! இது பொதுவான கருத்து. அப்படிபொருள்
இல்லாதவன் அறமே (தருமம்) செய்ய இயலாதா என்றால் , வள்ளுவர்
இயலும் என்கிறார்! எப்படி!?

யாரும் எந்த நிலையிலும், வாழ்க்கையில் பொய்யே சொல்லாமல்
வாழ்ந்து வந்தால் அறம் செய்யாமையைக் காட்டிலும் நன்மை தரும்
என்பதாம் .

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று1

புலவர்   சா  இராமாநுசம் 

Thursday, April 3, 2014

கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக் கயவரைக் கண்டாலே விலகலினிது!


எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்
   இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது!
பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
   பிழையின்றி பேசலே மொழிக்கினிது!
கண்ணியம் காத்தலே மாந்தர்க்கினிது-கல்வி
   கற்றாரைக் காமுற்று காணலினிது!
புண்ணியம் தேடலே வாழ்விலினிது-செய்யும்
   பொதுவாழ்வு தன்னிலே நேர்மையினிது!


கொல்லாமை விரதாமாய்க் கொள்ளலினிது-நல்
    கொள்கையின் வழிநாடி நடத்தலினிது!
இல்லாமை நோயின்றி இருத்தலினிது-தம்
    இயல்பாலே காண்போரைக் கவர்தலினிது!
சொல்லாமை பொய்தன்னை அறத்திலினிது-எதுவும்
    சொந்தமெனச் சொல்வதை மறத்தலினிது!
கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக்
    கயவரைக் கண்டாலே விலகலினிது!


பாராட்டி பகைவரை பேசலினிது-அப்
     பகைமையும் அதனாலே நீங்கலினிது!
ஊரோடு ஒத்துமே போதலினிது-தம்
     உறவோடு ஒற்றுமையே ஆதலினிது!
வேரோடு முள்தன்னைக் களைதலினிது-நல்
    வேந்தன்கீழ் வாழ்தலே மாந்தர்க்கினிது!
சீரோடு இதுபோலப் பலவுமினிது-எடுத்துச்
     செப்பிட ஆனாலும் போதுமினி(யி)து!

                    புலவர் சா இராமாநுசம்


Monday, March 31, 2014

செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து உய்வீரா நீங்கள் உய்வீரா!



செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

வருகின்ற தேர்தலில்
தருகின்ற வாக்கினை-ஆய்ந்து
தருவீரா நீங்கள் தருவீரா!
புரிவீரா நீங்கள் புரிவீரா -இனி

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

ஏமாற்ற இலவசம்
என்பதே! உணர்ந்துடன் –பதவி
தாமற்ற தருவதே உணர்வீரா!
நாமற்ற யாதென உணர்வீரா- உடன்

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

தரமில்லா கூட்டணி
தகவில்லா காட்சிகள் நமக்கு
வரமல்ல! சாபமே அறிவீரா!
நிறம்மாறும் பச்சேந்தி! புரிவீரா!-என

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!


புலவர் சா  இராமாநுசம்

Friday, March 28, 2014

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!



 அன்பின்  இனிய  உறவுகளே!  வணக்கம்!

        ஒரு  மகிழ்ச்சியான  செய்தி!

   என் வலைவழி நான்  எழுதிய  சில  கவிதைகளைத்  தொகுத்து,   வலையில்  வந்தே  அலையில் மிதக்கும்  கவிதைகள் என்ற  பெயரில் ,நூலாக( ஓராண்டுக்கு முன்னதாக,)
சீதை பதிப்பகத்தின்  வாயிலாக வெளி வந்தது

        தற்போது  அப்  புத்தகத்திற்கு , தமிழ்நாடு  மத்திய
நூலக ஆணைக்குழு  ஆயிரம் பிரதிகளை  வாங்க அனுமதி
வழங்கியதோடு, வாங்கியும் விட்டது  என்பதை  அன்போடு  தெரிவித்துக்
கொள்கிறேன்

     நூலை  வெளியிட்ட சீதை  பதிப்பகத்திற்கும். மத்திய  நூலக
ஆணைக்குழவிற்கும் , தமிழக  அரசுக்கும், என்னை  நாளும்
ஆதரித்து ஆக்கமும்  ஊக்கமும் தரும்  அன்பு  உறவுகளாகிய உங்களுக்கும்  உளம் கனிந்த  நன்றி! நன்றி!

            புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, March 25, 2014

முகநூலில் என் அகம் பதித்தவை!





உறவுகளே வணக்கம்!

பூக்கின்ற எல்லாப் பூக்களும் பிஞ்சாவதில்லை! எல்லா பிஞ்சுகளும் காயாவதில்லை! எல்லாக் காய்களும் கனியாவதில்லை! எனவே, வாழ்கையில், நாம் எண்ணும் எண்ணங்களும், செய்ய முற்படும் செயல்களும் பலபலவே
ஆனாலும், சிலசிலவே வெற்றி பெறும் ,என்பதை உணர வேண்டும்! அதுதான் அமைதியான வாழ்கைக்கு வழி கோலும்

நெருஞ்சி முள் நிறைந்த இடத்தில் வெறும் காலை வைத்தால் பாதம் முழுவதும் முள் குத்திக் கொள்ளும்! ஐயோ என்று காலை மாற்றி மாற்றி வைத்தாலும் அதே நிலைதான்! அது தீரவேண்டுமென்றால் ,முள்ளற்ற இடம் நோக்கிப் போக வேண்டும்! அதுபோல, சில சூழ்நிலைகளில் , சில நிகழ்ச்சிகள்
நம், மனதில் முள்ளாகக் உறுத்திக் கொண்டே இருக்கின்றன
என்றால் ,அதைவிட்டு விலகி வேறு வகையில் எண்ணங்களை
திருப்புவதே புத்திசாலித்தனமாகும்!


ஒருநாள்தான் வாழ்வு , என்றாலும் மலர்கள் பூக்கத்தானே செய்கின்றன! அதுவும், தனக்கே உரிய அழகும், நிறமும் மாறாமல்,மனதை மயக்கும் மணத்தை வீசி, காலா காலமாக, இயற்கையோடு இணைந்து நடப்பதை கண்டும், இந்த மனிதப் பிறவிகள் மட்டும் இயற்கைக்கு மாறாக,ஏன், எதிரியாக நடந்து
கொண்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான்!
புரியவில்லையே! பகுத்தறிவு , என்று, ஒன்று இருப்பதுதான் காரணமோ!!!?

அழகானவை!

குற்றமில்லாமல் திருத்தமா பேசுதலே கல்வி கற்றவர்களுக்கு அழகாகும்!
செல்வம் உடையவர்கள் , தம் நெருங்கிய சுற்றத்தாருக்கு உதவி
செய்தலே அழகாகும்!
வேதம் ஓதுகின்ற வேதியர்களுக்கு ஒழுக்கமே அழகாகும்!
நீதி, தவறாமல் ஆட்சி செய்வதே அரசனுக்கு அழகாகும்!
வாணிகம் செய்வார்க்கு மேலும், மேலும் வருமானத்தைப்
பெருக்குவதே அழகாகும்!
உழவர், உழுது பயிர் செய்து உண்டு வாழ்வதே அழகாகும்!
(வெற்றிவேற்கை)


உலக நீதி! குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டியவை!

படிக்காமல் ஒருநாளும் இருக்காதே!
பிறர் மனம் வருந்தும்படி எதையும் சொல்லாதே!
பெற்ற தாயை என்றும் மறவாதே!
வஞ்சனையாய் தீமை செய்வாரோடு சேராதே!
போகத் தகாத இடங்களுக்குப் போகாதே!
ஒருவர் நம்மை விட்டுப் போனபின்பஅவரைப்பற்றி
இழிவாகப் பேசாதே!
(தெடரும்)


பொதுவாக ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வதுதான் சிறப்பு என்றாலும், வாய் ,அதாவது நாக்கு ,அதைமட்டுமாவது
அடக்கியே வாழ வேண்டும்! வள்ளுவர் இதனைப்பற்றி தனியாகவே கூறுகிறார் ! நம்முடைய வாய் பேசுவதற்கும் ,உண்ணும் உணவின் சுவையை அறிவதற்கும் துணையாக இருப்பதே நாக்குதான்! ஒருவன் , புலன்களில் எதனை அடக்க
முடியாவிட்டாலும் நாக்கை மட்டுமாவது கட்டுப் படுத்தாமல் விட்டால் , மற்றவர்களின் இழி சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் ஆளாகி சோகத்தையே முடிவாக பெறுவார்கள்

தகாத சொற்களைப் பேசுவதால் வருவது தண்டணைதான்
என்ற நேர் பொருளோடு ,குறிப்புப் பொருளாக, சுவை அறிய உதவும் நாக்கால் தகாத(உடல் நலத்திற்கு) உணவுகளை உண்ணுவதும் கேடுதான் என்பதையும், நயமாக உணர்த்துவது
இன்புறத் தக்கது!

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு -குறள்

     

      புலவர்  சா  இராமாநுசம்


   

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...