Tuesday, November 4, 2014

பிழையன்றோ ? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப் பேதையராம் அன்னவரை காக்க வாரீர்!



ஏதேதோ  நடக்குது  நாட்டுனிலே –முழுதும்
   எழுதிட  முடியுமா  பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ  தெரியாது  வாழுகின்றோம்-போகும்
   திசைகாணா துயர்தன்னில்  வீழுகின்றோம்-மேலும்
போதாது விலைவாசி  விண்ணைமுட்ட –தினம்
   புலம்பிட  மக்களும்  கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட  இயலவில்லை-ஏதோ
   உள்ளத்தை  வருத்திட வந்ததொல்லை


பகல்கொள்ளை  படுகொலை  பெருகிப் போச்சே-நாளும்
    பயத்துடன்  வாழ்கின்ற  நிலையு மாச்சே!-வேறு,
புகலென்ன ! வழியின்றி!  வருந்த லாச்சே-நாடும்
     போவதென்ன  காடாக!  மாற லாச்சே!-மேலும்
மழைவெள்ளம்! இட்டபயிர் அழிந்து போக-கண்டே
    மனம்குமுறும்  விவசாயி நொந்து சாக!-நீதியில்,
பிழையன்றோ ? ஆள்வோரே  எண்ணி பாரீர்- ஏழைப்
    பேதையராம் அன்னவரை காக்க  வாரீர்!

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, November 1, 2014

அப்பாவி மீனவர்மேல் பொய்வழக்குப் போட்டே!



அப்பாவி மீனவர்மேல் பொய்வழக்குப் போட்டே-தண்டணை
அறிவித்தார் மரணமெனும் செய்திதனைக் கேட்டே!
இப்பாவை எழுதுகிறேன் தமிழினமே கேளாய்!- சுரணை
இருக்கிறதா நம்மிடையே ! இருப்பதென்ன வாளாய்!
துப்பாக்கி போல்நாமும் வெடித்திடவே வேண்டும்-என்றே
துடிக்கிறது என்மனமும்! யாதுபலன்! மீண்டும்!
தப்பான ஆட்சிதானோ! மத்தியிலே நடத்தல்!-எதையும்
தடுக்கின்ற உணர்வின்றி நாட்களையேன் கடத்தல்!


ஆளுக்கு ஒருகட்சி தலமையது என்றே!-தமிழ்
ஆர்வலரும் சிதறிவிடல் நன்றலவே! இன்றே
நாளுக்கு நாளிங்கே நலிவுதானே உற்றோம் –வடவர்
நாட்டாலே என்னபெரும் நன்மைதனைப் பெற்றோம்!
தோளுக்கு மேலேறி சிங்களவன் சிரிக்க-குன்றா
சோகத்தை நம்மவரோ நாள்தோறும் தரிக்க!
வாளுக்குக் கூர்மயங்கி மழுங்கிவிடல் போன்றே!- இன்றே
வாழ்கின்ற நம்வாழ்க்கை உரியதொரு சான்றே!

புலவர் சா இராமாநுசம்

Thursday, October 30, 2014

இனிய உறவுகளே! வணக்கம்!



     இனிய  உறவுகளே!  வணக்கம்!

                 தம்பி முத்துநிலவன் அவர்கள்  தன் வலையில், முகநூல்  பதிவுலகை
அழிக்கிறதா  என்ற  தலைப்பில்  ஓர்  ஆய்வுக்  கட்டுரை  எழுதியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்!  அவர் கேள்வி சரியானதே! முடிவில் அவர்  கொண்ட அச்சத்திற்கு, உரிய  முடிவும்(பதிலும்)அவரே , கூறியுள்ளது, மிகவும் நன்று!
           
              என்னுடைய  கருத்தும்  அதுவே!  கடந்த  திங்கள்  நானும் , என்னுடைய
மனதில் தோன்றிய அச்சத்தின்  காரணமாக ஒரு  கவிதையை( என்வலையில்)
எழுதி, என்  ஆதங்கத்தை அதில்  வெளிப்படுத்தியுள்ளேன்  பலரும், ( குறிப்பாக பதிவர்கள்) படிக்க  வேண்டும் என்பதற்காக, அக்கவிதையை , மீள் பதிவாக
மீண்டும் இங்கே வெளியிடுகிறேன்!

வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே,
வாராக் காரணம் தெரியவில்லை!-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்!- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்!- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல!-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல!-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே !–அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!



நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல!-முகநூல்
சென்றது  ஏதும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல!-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! வந்திடல், மிகமாட்சி!

புலவர் சா இராமாநுசம்

Friday, October 24, 2014

திரைகடல் ஓடு என்றாரே திரவியம் தேடு என்றாரே!



திரைகடல் ஓடு என்றாரே
   திரவியம் தேடு  என்றாரே
குறையிலா வழியில் அதைப்பெற்றே
   கொள்கையாய் அறவழி தனைக்கற்றே
நிறைவுற அளவுடன் நீதிசேர்ப்பீர்
   நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்
கறையிலா கரமென புகழ்ப்பெறுவீர்
   கண்ணியம் கடமை எனவாழ்வீர்

வையம் தன்னில் வாழ்வாங்கும்
   வாழின்! வாழ்வில் பெயரோங்கும்
செய்யும் எதையும்  தெளிவாகச்
   செய்யின் வருவது களிவாகப்
பொய்யோ புரட்டோ செய்யாமல்
   போலியாய் வேடம் போடாமல்
ஐயன் வழிதனில் செல்வீரே
   அன்பால் உலகை வெல்வீரே!

தீதும் நன்றும் பிறர்தம்மால்
   தேடி வாரா! நம்மாலே
நோதலும் தணிதலும் அவ்வாறே
   நவின்றனர் முன்னோர் இவ்வாறே
சாதலின் இன்னா திலையென்றே
   சாற்றிய வள்ளுவர் சொல்ஒன்றே
ஈதல் இயலா நிலைஎன்றால்
  இனிதாம் அதுவும் மிகஎன்றார்!

எல்லா மக்களுக்கும் நலமாமே
   என்றும் பணிவாம் குணந்தாமே
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
   செப்பிடும் குறளாம் திருச்செல்வம்
நல்லா ரவரெனப் புகழ்பெற்றே
   நாளும் நாளும் வளமுற்றே
பல்லார் மாட்டும் பண்பாலே
  பழகிட வேண்டும் அன்பாலே

                              புலவர்  சா இராமாநுசம்

Thursday, October 23, 2014

நன்றி! நன்றி! தமிழ்மணத்திற்கு!



உறவுகளே!
வலைப் பதிவுகளை திரட்டித் தருவதில் முதன்மையாக விளங்கும் தமிழ்மணம் திரட்டியில், கடந்த சில நாட்களாக ஆபாசமான தலைப்புகளில் பதிவுகள் வருவதைக் கண்டு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க அதனை மிகவும் பெருந்தன்மையோ ஏற்றுக்
கொண்டு, அப்பதிவுகளை நீக்கி வருத்தம் தெரிவித்துள்ளது கண்டு
தமிழ்மண நிர்வாகிகளை பாராட்டி , நன்றியோடு வணங்கி வாழ்த்தினைத் தெரிவித்தும் கொள்கிறோம்!

புலவர்  சா  இராமாநுசம்

தரங்கெட்டுப் போவதுவோ! தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ!



தரங்கெட்டுப் போவதுவோ! தமிழ்மணமும் தானோ-கூசும்
தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ
கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா-என்ன
காரணமோ தெரியவில்லை! போதைதரும் மதுவா

மனம்நோகப் பலபேரும் எழுதிவிட்ட பின்பும் –குறை
மாறவில்லை என்றாலே வளராதோ துன்பும்
தினம்போல தவறாது வலையுலகில் வந்தீர் –பதிவைத்
திரட்டுயென தொகுப்பாக முறைப்படித்தித் தந்தீர்

நன்றியதில் மாற்றமில்லை வாழ்த்துகின்றோம் உம்மை-இன்று
நடக்கின்ற முறைகண்டு வருந்துகின்ற எம்மை
என்றும்போல் அரவணைத்து கு(க)றைநீக்க வேண்டும் –நாமே
இணைந்தால்தான் பதிவுலகு வளர்ந்திடுமே யாண்டும்

புலவர் சா இராமாநுசம்

Monday, October 20, 2014

வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்!


வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை
வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்
இலைநிகர் அதற்கென மகிழ்கின்றேன்-நாளும்
இருகரம் கூப்பித் தொழுகின்றேன்
அலைபடும் கடற்கரை மணலாக-எரியும்
அணல்தனை அணைக்கும் புனலாக
நிலையென உம்முடை வரவுகளே-தேயா
நிலவெனக் கண்டேன் உறவுகளே


அன்பினை அடக்கிட தாளில்லை-என்றே
ஐயன் சொன்னது தவறில்லை
என்பினை போர்த்திடும் தோலாக-உம்மோர்
இன்னுரை அனத்தும் பாலாக
என்னுயிர் வளர்த்திடும் எருவாக –நெஞ்சில்
எழுவன,கவிதைக் கருவாக
இன்பினை மேலும் தருவீரே –என்னுடை
இதயத்து நன்றி பெறுவீரே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...