Saturday, October 29, 2016

உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும் ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்!



காவேரிக்காக அறவழி போராட்டம்!
-----------------------------------------------
உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும்
ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்
பொறுமைக்கும் அளவுண்டாம் எண்ணிப் பாரீர் –துயர்
போக்கிட ஒன்றென திரண்டு வாரீர்


மூத்தாரா இளையாரா பேதம் வேண்டாம் –தன்
முனைப்பிங்கே அணுவளவும் அறவே வேண்டாம்
காத்திட வேண்டாமா நமது உரிமை –இதைக்
கண்ணென எண்ணுதல் ஆமே! பெருமை

அழுதாலும் தவறென்று சொல்லி நம்மை -இனியும்
அடக்கிட அதிகாரம் முயலும் உண்மை!
எழுவீரா தொழுவீரா எண்ணிப் பாரீர் –நம்மின்
எதிர்கால நிலையெண்ணி திரண்டு வாரீர்!

சிதறிய தேங்காயாய் இருத்தல் நன்றோ –உடன்
சிந்தித்து செயல்பட வேண்டும் இன்றோ!?
பதறியே எழுந்திட வேண்டும்1 அன்றோ!-மேலும்
பார்ப்பதா வேடிக்கை நாளும் நன்றோ!

தொடர்கதை ஆகுமுன் முடிவெ டுப்பீர் –எனில்
தூண்டிலில் மீனெனத் துடிது டிப்பீர்!
இடர்தனை நீக்கிட எண்ணிப் பாரீர் –ஒன்றாய்
இணைந்திட அணியெனத் திரண்டு வாரிர்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, October 27, 2016

இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன் இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்


இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன்
இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்
பனிக்கின்ற கண்களுடன் கண்ணீர் சிந்த-நாட்டில்
பாராது கண்துயிலும் அரசோ! இந்த-நிலையில்
கனியிருக்க காய்தேடும் கயமை போன்றே—சற்றும்
கலங்காமல் தேர்தலிலே கருத்தை ஊன்ற-கண்டு
நனிதுயரில் வாடுபவன் பாடம் தருவான்-நாளை
நடப்பதை எண்ணிடுவீர் ! துயரம் மறவான்!


புலவர் சா இராமாநுசம்

Friday, October 21, 2016

அளவின்றி வாழ்த்துகளை அளித்தீர் நீங்கள்-நானும் அகமோடு முகம்மலர ஏற்றேன்! உங்கள்



அளவின்றி வாழ்த்துகளை அளித்தீர் நீங்கள்-நானும்
அகமோடு முகம்மலர ஏற்றேன்! உங்கள்
உளமகிழ என்நன்றி மலரை ஏற்பீர்- பொங்கும்
உணர்வுகளை உரைத்திடவே இயலா! காப்பீர்!
வளம்திகழ வாழ்வாங்கு வாழும் வரையில்-ஐயன்
வள்ளுவனின் சொற்படியே முடிந்தவரையில்
நலம்திகழ நடந்திடுவேன் உறுதி! உறவே-மீண்டும்
நவில்கின்றேன் நன்றியென ! அறியேன் கறவே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, October 19, 2016

என் பிறந்தநாள் இன்று! வாழ்த்துங்கள் உறவுகளே!



உறவுகளே! வணக்கம்
இன்று என் பிறந்தநாள்! நேற்றோடு எண்பத்து மூன்று முடிந்து ,இன்று எண்பத்து நான்கு தொடங்குகிறது! வலைத்தள
நண்பர்களும் முகநூல் அன்பர்களும்தான் என்னை வாழ வைக்கும்
தெய்வங்கள்! வாழ்த்துங்கள்! நான் வாழும் வரை உங்களை மறவேன்!
அன்பன், புலவர் சா இராமாநுசம்

Sunday, October 9, 2016

என்னதான் நடக்குது நாட்டினிலே –செய்தி ஏதேதோ வந்திட ஏட்டினிலே!



என்னதான் நடக்குது நாட்டினிலே –செய்தி
ஏதேதோ வந்திட ஏட்டினிலே
தன்னாலே வெளிவரும் தயங்காதே-முழுத்
தகவல் விரைவிலே மயங்காதே
முன்னாலே இருந்தவை மாறிடலாம்-உறவு
முறிந்ததாய் கட்சிகள் கூறிடலாம்
பின்னாலே நடப்பதை யாரறிவார்-கூட்டு
பிரிந்திட சேர்ந்திட தடமறிவார்
(என்னதான் நடக்குது)
 

புலவர் சா இராமாநுசம்

Tuesday, October 4, 2016

இந்தியா என்பதொரே நாடாம்-என்ற எண்ணாத்தால் வந்ததே கேடாம்!


இந்தியா என்பதொரே நாடாம்-என்ற
எண்ணாத்தால் வந்ததே கேடாம்
தந்ததே மத்தியில்! கூறும் !-நீதி
தவறிய பதில்மனு பாரும்!
வெந்தது தமிழரின் உள்ளம்-நன்கு
வெளிப்பட பா.ஜா .கா கள்ளம்
சிந்திக்க வேண்டுமா இனியும்-திரண்டு
செய்தாலே அறப்போரும் கனியும்
செய்வீரா! நீர் செய்வீரா


புலவர் சா இராமாநுசம்

Sunday, October 2, 2016

அண்ணல் காந்திக்கு அஞ்சலி!


அண்ணலே காந்தி நீங்கள்-தூய
அறவழி சுதந்திரத்தை எங்கள்-இரண்டு
கண்ணெனப் பெற்றுத் தந்தீர்-ஒளிரும்
கலங்கரை விளக்கென வந்தீர்-ஆனால்
தன்னலம் மிக்கார் இங்கே-அதனை
தரமின்றி போட்டார் ! பங்கே!-எனினும்
பொன்மலர் என்றும் நீராம் –மணக்கும்
புகழ்தானே! மறையாப் பேராம்
வாழ்க காந்தி நாமம்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...