Thursday, November 24, 2016

அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று???? பொருந்தும்!




அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!!
இன்று????  பொருந்தும்

மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!



சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, November 22, 2016

தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன் திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா!



கார்திகைப் பிறந்துகூட நாராயணா- வானில்
கார்மேகம் காணலியே நாராயணா
நேர்த்திகடன் ஏதுமில்லை நாராயணா-கண்ணில்
நீர்வடிந்து வற்றிவிட நாராயணா
வார்த்தையில்லை செல்வதற்கு நாராயணா-வாழ
வழியேது உழவனுக்கு நாராயணா
தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன்
திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா


புலவர் சா இராமாநுசம்

Monday, November 21, 2016

அடமழை பெய்யாது ஐப்பசி போகவும்-இயற்கை அன்னையே நீரின்றி இட்டபயிர் சாகவும்!




விடமுண்டு விவசாயி வேதனையால் மாளவும்
விளைநிலம் எல்லாமே வெடிப்புகளே ஆளவும்
இடமில்லை இவ்வுலகில் இனிவாழ என்றே
இதயத்தில் பல்வேறு துயர்சூழ நன்றே
திடமின்றி, உழவனவன் மாற்றுவழி கண்டான்!
தேடினான் கிடைத்தோ விடமது உண்டான்


புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 16, 2016

முகநூலில் முக்காலம்!


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்---வள்ளுவர் காலம்

டைகட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
கைகட்டி பின்செல் பவர்------வெள்ளைககாரன்காலம்

இலஞ்சத்தில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
பஞ்சத்தில் பின்செல் பவர்---இது, தற்காலம்

புலவர் சா இராமாநுசம்

Monday, November 14, 2016

முகநூல் பதிவுகள்!

தமிழக மக்களின் நலன் கருதி ,நம் முதல்வர் அவர்கள் மிகவும்
கடுமையாக எதிர்த்து வந்த தீங்கான பல திட்டங்கள் ஒவ்வொன்றாக
ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வருவதைக்காணும் போது தமிழ்
நாட்டை தற்போது ஆள்வது பெரும்பான்மை அண்ணா திமுகா
அரசா?????? அல்லது !!!!!!வேறா ! ஐயம், எனக்கு வருகிறது
உங்களுக்கு!!!!??


உறவுகளே !
பொதுவாக மருத்துவ மனையில் , நோயாளி
சேர்க்கப் பட்டு குணமானால் மருத்துவர் தான்
அவர் வீடுதிரும்புவது(டிஸ்சார்சு)பற்றி அறிவிப்பார் ஆனால்
, நம் முதல்வர் வீடு திரும்புவதை அவர்தான் அறிவிப்பார்
என்று,அப்பல்லோ மருத்துமனை ,அதன் தலைவர் சொல்வது!!!!
சரியா?


ஆயிரம் ஐநூறு நோட்டுகள் செல்லாது என்று அரசு சொன்னதால் தங்கநகை
விற்பனைநேற்று இரவு முடிந்து விடிந்தும் நடந்து கொண்டிருகிறேதே நகைக் கடைகளில்
இப்படி கருப்பு பணம் வெள்ளை யாகிறதே அரசு என்ன செய்கிறது
செய்யப் போகிறது !!? முன் யோசனை வேண்டாமா!!


ஐயா ஓர் ஐயம்!
நோட்டுகள் செல்லாதென சொன்னது , சரி! வரவேற்போம்! பதிலாக வரும் புதிய நோட்டுகள், ஐநூறு
ஆயிரம் என்று வந்தால் தானே முறையாக இருக்கும் அது
என்ன இரண்டாயிரம் என்ற கணக்கு!!? இதில் ஏதேனும்
மர்மம் இருக்குமோ?


பசி வந்தா பத்தும் பறக்கும் என்பார்களே அவை என்ன! கீழே ----
மானம், குடிபிறப்பு ,கல்வி,ஈகை,அறிவுடமை,பதவி,தவம்,உயர்வு,
தொழில்முயற்சி, காதல் என்பனவாம்!


திருமிகு இராகுல் காந்தி அவர்கள்
வங்கியில் வரிசையில் நின்று செல்லாத நோட்டை மாற்றினார்
இது, செய்தி!
ஆகா! என்ன எளிமை! ஒரு பழமையான தேசியக் கட்சியின்
எதிர்காலத் தலைவர் மக்களோடு தானும் ஒருவராக நின்று ,(செலவிற்கு பணமில்லாமல்) நோட்டை மாற்றிக் கொண்டது
கண்டு நாடே பாராட்டுகிறது! இது ஒன்றே இவரது அரசியல் முதிர்ச்சிக்கு , எடுத்துக் காட்டு! இதற்கு மேலும் நான் விளக்க
வேண்டுமா! கடவுளே மக்களை நீதான் காப்பாற்ற வேண்டும்!


ஒருவன் சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனாலும்
நன்கு கற்றவர்களால் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு , அறிவு
பெறுவதே போதுமானதாகும்! அதுவே தளர்ச்சி யுற்ற காலத்தில் ஊன்றுகோல் போல அவனுக்குப் பயன் படும் என்பதாம்!


புலவர்  சா  இராமாநுசம்  

Sunday, November 6, 2016

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!


ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில்
உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று
நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே!
நாட்டுக்கே நலம்செய்யும் ஆட்சி வருமா-என்றே
நல்லோர்கள் ஒதிங்கினால் நன்மை தருமா!
மாட்டுக்கு மூக்கணாங் கயிற்றை போன்றே-நீரும்
மனம்வைத்தால் மாறும்! வரலாறு சான்றே!


புலவர் சா இராமாநுசம்

Saturday, October 29, 2016

உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும் ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்!



காவேரிக்காக அறவழி போராட்டம்!
-----------------------------------------------
உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும்
ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்
பொறுமைக்கும் அளவுண்டாம் எண்ணிப் பாரீர் –துயர்
போக்கிட ஒன்றென திரண்டு வாரீர்


மூத்தாரா இளையாரா பேதம் வேண்டாம் –தன்
முனைப்பிங்கே அணுவளவும் அறவே வேண்டாம்
காத்திட வேண்டாமா நமது உரிமை –இதைக்
கண்ணென எண்ணுதல் ஆமே! பெருமை

அழுதாலும் தவறென்று சொல்லி நம்மை -இனியும்
அடக்கிட அதிகாரம் முயலும் உண்மை!
எழுவீரா தொழுவீரா எண்ணிப் பாரீர் –நம்மின்
எதிர்கால நிலையெண்ணி திரண்டு வாரீர்!

சிதறிய தேங்காயாய் இருத்தல் நன்றோ –உடன்
சிந்தித்து செயல்பட வேண்டும் இன்றோ!?
பதறியே எழுந்திட வேண்டும்1 அன்றோ!-மேலும்
பார்ப்பதா வேடிக்கை நாளும் நன்றோ!

தொடர்கதை ஆகுமுன் முடிவெ டுப்பீர் –எனில்
தூண்டிலில் மீனெனத் துடிது டிப்பீர்!
இடர்தனை நீக்கிட எண்ணிப் பாரீர் –ஒன்றாய்
இணைந்திட அணியெனத் திரண்டு வாரிர்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...