Thursday, May 16, 2013

பூண்டும் கருகிப் போனதுவே –எரியும் புகையில் நெருப்பென ஆனதுவே!





தாங்கிட  இயலா  கொடுமையிதே –காற்றும்
   தகித்திட  முடியா  அனலேயிதே!
தூங்கிட ஏதும் வழியில்லை-இரவும்
   தொடர்ந்து  வேர்வை தரும்தொல்லை!
ஓங்கிட நாளும் என்செய்வோம் –எப்படி
    உறக்க மின்றியே நாமுய்வோம்!
நீங்கிட வேண்டும் இந்நிலையே –உடன்
    நிம்மதி அதுவரை நமக்கிலையே!


வீதியில் நடப்பவர் பரிதாபம் –படும்
    வேதனைத்  தருமே கடுங்கோபம்!
பீதியால் நிழலைத் தேடுகின்றார் –காணின்
    பிழைத்திட  அங்கே  ஓடுகின்றார்!
காதில் புகுவதும் வெங்காற்றே-உச்சிக்
   கதிரவன  வெம்மையால் உடன்மாற்றே!
நீதியில்  செயலிதாம் மாற்றிடவாய்
    நிம்மதி பெற்றிட  ஆற்றிடுவாய்!

ஆண்டுக்கு ஆண்டு  இவ்வாறே –அனலை
   அள்ளித்  தந்தால்  எவ்வாறே!?
ஈண்டே நாங்கள்  வாழ்ந்திடவா –இல்லை
    இன்னல் பட்டே  மாயந்திடவா!
பூண்டும்  கருகிப்  போனதுவே –எரியும்
    புகையில் நெருப்பென  ஆனதுவே!
வேண்டுவன் தினமும்  கதிரோனே-இவ்
    வேதனை  தாங்காயிம் முதியோனே!

             புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, May 14, 2013

அன்னையர் தினத்தில், என் அன்னைக்கு நினைவஞ்சலி!



அன்னையர் தினத்தில், என் அன்னைக்கு
நினைவஞ்சலி
----------------------------

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கநீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

வருகையும் , நன்றி அறிவிப்பும் !


அன்பின் இனிய  உறவுகளே!
                காலை வணக்கம்!

                 முன்னரே, நான் குறிப்பிட்ட வாறு என்னுடைய  மலேசிய  சுற்றுப்  பயணத்தில் இலங்காவி, பினாங்கு,கோலாலம்பூர் ஆகிய  இடங்களைப்  பார்த்து விட்டு திரும்பி நேற்று இரவு சென்னை நலமுடன் வந்து  சேர்ந்தேன்.
                      என்னை வாழ்த்தி அனுப்பிய உங்களது அன்பும், ஆதரவுமே
என்  பயணத்தை எவ்வித  இடையூறுமின்றி நடை பெற துணை நின்றது
என்பதை  மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி யினை காணிக்கை  ஆக்குகிறேன்

            பயண குறிப்புகளை  பின்னர்  எழுதுகிறேன்.

                                        புலவர் சா  இராமாநுசம்

Friday, May 3, 2013

இதயம் கனிந்த நல்லோரே—என் இதயத்தில் வாழும் பல்லோரே!



இதயம் கனிந்த நல்லோரே—என்
   இதயத்தில் வாழும் பல்லோரே!
நிதமும்  எழுத  நினைக்கின்றேன்-முதுமை
     இயலா  நிலையால் தவிக்கின்றேன்

இன்பம் எங்கும் பொங்கட்டும்!-உங்கள்
   இல்லம் செழுமையில் ஓங்கட்டும்!
துன்பம் முழுமையும் போகட்டும்!-நல்
   தூயவர் ஆட்சியே நிலைக்கட்டும்!

சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
   சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
நீதி நேர்மை  தவழட்டும்!-மக்கள்
   நிம்மதி யாக வாழட்டும்!

பாடே படுபவன் ஆளட்டும்!-இந்த
   பரம்பரை ஆட்சி மாளட்டும்
கேடே பெற்றோம் எதனாலே-மிக
   கேவல மான இதனாலே!

உழைப்பவன் வாழ வழியில்லை!-நன்கு
   ஊரை ஏய்ப்பவன் தரும்தொல்லை
பிழைப்பைத் தேடும் ஏழைகளே-பாபம்
   ஏதும் அறியாக் கோழைகளே!

ஊரில் இல்லை வரும்வாரம்-எனவே
   உம்வலை காண யிலைநேரம்!
வேரில் பழுத்த பழம்நீரே-உமை
   வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!

                         புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 1, 2013

எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய் இணைந்திடச் செய்தாய் மேதினமே!.



சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனைச்
சுரண்டி உண்பவன் முதலாளி!
வரண்ட வாழ்விலே தொழிலாளி - நல்
வளமுடன் வாழ்பவன் முதலாளி!
திரண்டிட அணியெனத் தொழிலாளி - ஓடும்
திசைதனை அறியா முதலாளி!
மிரண்டவன் பணிந்தது மேதினமே - அதன்
மேன்மையைப் போற்றுதும் இத்தினமே!

வருக வருக மேதினமே - உழைக்கும்
வர்க்கம் போற்றிட மேதினமே!
தருக பல்வகைத் தொழிலோங்க - ஏதும்
தடையின்றிப் பற்றாக் குறைநீங்க!
பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி,
பேதத்தை நீக்கும் நற்புத்தி
கருக ஆண்டான் அடிமையென - நச்சுக்
கருத்தும் அகற்றிய மேதினமே!

செய்யும் தொழிலே தெய்வமென - முன்னோர்
செப்பிய வழியேச் செய்வோமென
நெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்
நிலைத்திட வறுமை அகத்திலவன்
பெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்
பெய்யா நிலையில் துயர்தாக்க
உய்யச் செய்தாய் அன்னவரை - இந்த
உலகம் போற்றிட மேதினமே!

போதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்துப்
பேசிட உள்ளம் நினைத்தாலும்
பீதியே வந்திடும் முன்னாலே - அவன்
பேச்சும் அடங்கிடும் தன்னாலே!
ஊதிய உயர்வு கேட்டாலே - உடன்
உதைக்க வருவான் அடியாளே!
மேதினி தன்னில் மேதினமே - அவர்
மேன்மைக்குக் காரணம் இத்தினமே!

வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
கல்லார் கற்றார் பேதமில்லை - வேலைக்
கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
எண்ணிடத் திறந்தது விழிநன்றே
எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
இணைந்திடச் செய்தாய் மேதினமே!.

                                        புலவர்   சா.இராமாநுசம் 

Monday, April 29, 2013

உற்றவன் நீதான் என்றால் உடனடி விரைந்து வாவா!



இனிய அன்பர்களே!
      சில நேரங்களில் சில சூழ்நிலைகளால் கவிதை வருவதுண்டு
      அவ்வகையில் வந்த கவிதை இது!
                 ஊரில், என் நண்பன்! என் கவிதைப் பிரியன்,கோபித்துக் கொண்டு
      இரவு வீட்டை விட்டு சென்னை வந்து விட்டான். இல்லமே
      அழுது புலம்பியது. நண்பரோடு தங்கியிருந்த அவனை,சென்னை வந்து
       யார் அழைத்தும் வர மறுத்து விட்டான்
                நான் பின் வரும் கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன்
       அடுத்த நாளே வந்து விட்டான்!
            
             அன்னையின் கண்ணீர் இங்கே
                 ஆறெனப் பெருகி ஓட
             சென்னையும் சென்றாய் அங்கே
                 சென்றுநீ என்னக் கண்டாய்
             உன்னுரு காட்டும் நிழலை
                  ஒழித்திட முயலல் மடமை
             என்னுயிர் நண்பா இதனை
                   எண்ணிட மறந்தாய் ஏனோ
             
             இடமிலை என்று நீயும்
                   இவ்வூரினைப் பிரிந்து செல்ல
               திடமிகு உமதுத் தந்தை
                   தீதென்ன செய்தேன் என்றே
              உடலுமே குலுங்க குலுங்க
                  உள்ளமே நொந்து அழுதார்
               மடமையாம் நண்ப இந்த
                   மனநிலை பெற்றாய் ஏனோ
              
             பெ ற்றவர் சுற்றம் நீங்கி
                  பிரிதொரு ஊரும் செல்ல
               பற்றுமே அற்றார் போல
                  பறந்தனை இரவில் நன்றோ`
               கற்றவர் செய்யும் செயலா
                  கண்ணீரோ வெள்ளம் புயலா
                உற்றவன் நீதான் என்றால்
                   உடனடி விரைந்து வாவா!

                                புலவர் சா இராமாநுசம்

Saturday, April 27, 2013

புற்று நோயாம் ஊழலிங்கே போனது என்றால் ஒழிவதெங்கே



 நானா நீயா பாரென்றே
     நடந்திட  மத்திய அரசின்றே!
 வீணாய் தம்முள் தாம்சாடி
     விரையம் ஆகிடப் பலகோடி!
 காணோம் ஏதும் பலனொன்றே
     கடமை கண்ணியம் நிலையின்றே!
 ஏனாம் இந்த இழிநிலையே
     எண்ணிப் பார்க்கவும் வழியிலையே !

புற்று நோயாம் ஊழலிங்கே
      போனது என்றால் ஒழிவதெங்கே
 உற்றுப் பார்த்தால் மனிதரிலே
      ஊழல் செய்யாப் புனிதரிலே!
 மற்றவர் செய்தால் ஊழலெனல்
      மறைப்பார் ஊழல் தம்மதெனில்!
 கற்றவர் அறிந்தே செய்கின்றார்
      கல்லார் அறியாது செய்கின்றார் !

முடங்கிப் போவதோ அவையிரண்டும்
     முறையா சரியா படை திரண்டும்!
 அடங்கிப் போனபின் பலனென்ன
     அழிவதுப் பணமே கோடியன்ன!
 திடமொடு ஆய்து முடிப்பீரோ
     திரும்பவும் அமளிக்கு விடுப்பீரோ!
 நடந்தது நடந்ததாய் போகட்டும்
     நல்லது எதுவோ ஆகட்டும்!

அனைத்து மக்களும் வெறுப்பானார்
   அமளிக்கி அனைவரும் பொறுப்பானார்!
நினைத்துப் பார்க்கவும் கூசிடுமே
   நிம்மதி கெட்டே ஏசிடுமே!
தினைத் துணையளவில் எளிதாக
   தீர்த்திட முயலல் வழியாக!
பனைத் துணையளவு பெரிதாக
   பரவ வளர்த்தல்  தவறன்றோ?
 
        புலவர் சா இராமாநுசம்
         

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...