Showing posts with label அன்று மூவர் உயிர் காக்க தீக்குளித்து தன் உயிர் தந்த. Show all posts
Showing posts with label அன்று மூவர் உயிர் காக்க தீக்குளித்து தன் உயிர் தந்த. Show all posts

Friday, February 21, 2014

பெண்ணே எரிந்து போனாயே-உயிர் பிரிந்து எங்கே போனாயோ


அன்று , மூவர் உயிர் காக்க தீக்குளித்து தன், உயிர்
தியாகம் செய்த செங்கொடிக்கு அஞ்சலியாக
எழுதிய கவிதை!

பெண்ணே எரிந்து போனாயே-உயிர்
பிரிந்து எங்கே போனாயோ
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
வேலூர் சிறையில் நின்றாயா
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
கதறி துயரில் விழுகின்றார்
எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனி
எத்தனை உயிர்கள் மாள்வாரே

வஞ்சம் மட்டுமே உருவாக-மூவர்
வாழ்வைப் பறிக்கும் கருவாக
நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிர்
நீங்கின் மீண்டும் வருமொன்றா
தஞ்சம் அடைந்த பறவைக்கும்-தன்
தசையைத் தந்தவன் தமிழனடா
பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீ
பற்றி எரியும் திட்டாதீர்

முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாம்
முடங்கியா விடுவோம் ஆகட்டும்
அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
அடக்கவும் தெரியும் தமிழனுக்கு
திடமாய் முடிவு எடுப்பாராம்-அவர்
தினமும் அறப்போர் தொடுப்பாராம்
விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
விடத்தை அவரே தின்பாரா

இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
இழந்தோம் செங்கொடி வீணாவே
குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
கோழையா நாமே தரைமுட்ட
கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
காக்க தமிழரே உடன்ஒல்லை
துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
தூக்குக் கயிற்றை அறுப்பீரே


மீள் பதிவு!       புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...