Wednesday, February 28, 2018

பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்



பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும்
புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்
பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும்
பதவிபட்டம் பணமென்றே கொள்கை நாட்டமே
உழுதுயிட்ட பயிரெல்லாம் நாசம் ஆகவே-கண்ட
உழவனவன் வழியின்றி மோசம் போகவே
விழுதுவிட்டே வளர்கிறது ஊழல் மரமே-மக்கள்
வேதனையே படுவதுவா இறைவன் வரமே


புலவர் சா இராமாநுசம்

Sunday, February 25, 2018

வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்



வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து
வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம்
தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே
தடமறியா அரசேதான் நடத்தல் தொல்லை
கருவின்றி பிள்ளைபெற முயல்வோர் போன்றே-ஏதும்
கருதாது ஆட்சிதனை நடத்தல் சான்றே!
உருவின்றி நிழல்தேடும் காட்சி வீணே –மக்கள்
உணர்கின்ற நிலைவருமே விரைவில் காணே!

புலவர் சா இராமாநுசம்

புலவர் சா இராமாநுசம்

Friday, February 23, 2018

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!




ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில்
உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று
நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே!
நாட்டுக்கே நலம்செய்யும் ஆட்சி வருமா-என்றே
நல்லோர்கள் ஒதிங்கினால் நன்மை தருமா!
மாட்டுக்கு மூக்கணாங் கயிற்றை போன்றே-நீரும்
மனம்வைத்தால் மாறும்! வரலாறு சான்றே!



புலவர் சா இராமாநுசம்

Tuesday, February 20, 2018

எதையும் சொல்லிப் பயனில்லை!

 

எதையும் சொல்லிப் பயனில்லை
யாரையும் நொந்தும் பயனில்லை
கதையிலும் காணாத் திருப்பங்கள்
கண்டிட மக்கள் விருப்பங்கள்
புகையும் எரிமலை போன்றதுவே
பொங்கிடக் காண்பீர் தோன்றதுவே
பகையும் தீர்ப்பர் ஒருநாளே
பாரீர் விரைவிலத் திருநாளே


புலவர் சா இராமாநுசம்

Monday, February 19, 2018

வாழ்த்து வரவேற்பு!



நன்றி வருக தமிழ்  மணமே!
      வாழ்க வருக !தமிழ்  மணமே!
என்றும் வருக தமிழ்  மணமே!
     இணையில்  தமிழ்  மணமே!

Monday, February 12, 2018

தமிழ்மணத்திற்குத் தாழ்மையான வேண்டுகோள்!





தமிழ்மணத்திற்குத் தாழ்மையான  வேண்டுகோள்
        தகவல்  இல்லை என்று  நாள்தோறும்  தகவல்
தர  காரணம்  என்ன? ஏதேனும்….?
        பொருளாதார சிக்கலா! தொழில் நூட்பக் கோளாறா இவ்வாறு
தடைப்பட்டு இருப்பதற்கு என்று!? புரியவில்லை! உரியவிளக்க மளித்தால்
அதற்கேற்ப நாங்கள்  செயல் படுவோம்
        உன் வரவு இல்லாமல்  வலைப்பதிவுலகமே இருண்டு
கிடக்கிறது ! யார் எழுதுகிறார்கள். என்ன எழுதுகிறார் என உன்  பட்டியலைப்
பார்த்து அறிந்து நாள்தோறும் பழகி விட்ட நாங்கள்  இன்று , கண்ணைக் கட்டி காட்டில் விட்டது  போலவும் திசை அறியாத  மாலுமி போலவும்
திகைத்து நிற்கிறோம்
        இந்நிலை நீடித்தால் வலைப்ப பதிவு உலகமே காணாமல்
போய்விடும்
         இதுவரை நீ ஆற்றிக் கொண்டிருக்கின்ற சேவைக்கு ஈடோ  இணையோ என்பது முற்றிலும்  உண்மை!
         அது தொடர இறைவனை  வேண்டுவதோடு .நீயும்
விரைந்து விளக்க மளிக்க  வேண்டுகிறோம்
 
புலவர்  சா  இராமாநுசம்

Thursday, February 8, 2018

நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!


நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!


புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...