எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு
எங்கனும் தேடியும் காணல்அருமை !
இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம்
இறையாண்மை ஆராய பொழுதே விடியும் !
மங்காது நடக்குதே மக்களவை-அங்கு
மார்தட்டி தோள்தட்டி கேட்டல் எவை !
சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை
செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை !
இல்லாத ஒன்றினை எதற்கு நானே-கவிதை
எழுதிட வேண்டுமா முற்றும் வீணே
சொல்லாதீர் நானிதை சொன்னதாக-மீறி
சொன்னாலே வாழ்வினில் அமைதிபோக !
பொல்லாத விளைவுகள் தேடிவருமே-வீண்
பொல்லாங்கு நாள்தோறும் நாடிவருமே!
நல்லோரே இதுதானே மனித உரிமை-நீங்கள்
நம்புங்கள் அதுதானே எனகுப் பெருமை !
புலவர் சா இராமாநுசம்

