இனிய அன்பர்களே!
சில நேரங்களில் சில சூழ்நிலைகளால் கவிதை வருவதுண்டு
அவ்வகையில் வந்த கவிதை இது!
ஊரில், என் நண்பன்! என் கவிதைப் பிரியன்,கோபித்துக் கொண்டு
இரவு வீட்டை விட்டு சென்னை வந்து விட்டான். இல்லமே
அழுது புலம்பியது. நண்பரிடம் தங்கியிருந்த அவனை,சென்னை வந்து
யார் அழைத்தும் வர மறுத்து விட்டான்
நான் பின் வரும் கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன்
அடுத்த நாளே வந்து விட்டான்!
அன்னையின் கண்ணீர் இங்கே
ஆறெனப் பெருகி ஓட
சென்னையும் சென்றாய் அங்கே
சென்றுநீ என்னக் கண்டாய்
உன்னுரு காட்டும் நிழலை
ஒழித்திட முயலல் மடமை
என்னுயிர் நண்பா இதனை
எண்ணிட மறந்தாய் ஏனோ
இடமிலை என்று நீயும்
இவ்வூரினைப் பிரிந்து செல்ல
திடமிகு உமதுத் தந்தை
தீதென்ன செய்தேன் என்றே
உடலுமே குலுங்க குலுங்க
உள்ளமே நொந்து அழுதார்
மடமையாம் நண்ப இந்த
மனநிலை பெற்றாய் ஏனோ
பெ ற்றவர் சுற்றம் நீங்கி
பிரிதொரு ஊரும் செல்ல
பற்றுமே அற்றார் போல
பறந்தனை இரவில் நன்றோ`
கற்றவர் செய்யும் செயலா
கண்ணீரோ வெள்ளம் புயலா
உற்றவன் நீதான் என்றால்
உடனடி விரைந்து வாவா!
புலவர் சா இராமாநுசம்

