Showing posts with label கவிதை புனைவு உலகியல். Show all posts
Showing posts with label கவிதை புனைவு உலகியல். Show all posts

Wednesday, May 30, 2012

ஓடு மனிதா நீஓடு-இவ், உலகம் அழியா வழிநாடு!


ஓடு மனிதா நீஓடு-இவ்     
  உலகம் அழியா வழிநாடு!
தேடு மனிதா நீதேடு-உன்
  தேவை எதுவோ அதைநாடு!

சுயமாய் சிந்தனை செய்வாயா-உன் 
  சொந்தக் காலில் நிற்பாயா?
பயமே இன்றி செயலேற்று-நல்
  பயன்தரக் காண்பாய் நீயாற்று!

தோல்வி வரினும் துவளாதே-உடன்   
   தொடர்ந்து முயலத் தயங்காதே!
வேள்வி என்றே பாடுபட- வரும்
   வேதனை முற்றும் தவிடுபட!

முயற்சி ஒன்றே உருவாக்கும்-நம்    
   முன்னோர் மொழிந்தத் திருவாக்கும்!
அயற்சி போக்கும் அறிவாயா-நாளும்
  அவ்வழி செயலும் புரிவாயா!

இன்னார் இனியர் பாராதே-ஏதும்     
   இல்லை என்றே கூறாதே!
உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
  உதவின் அதுவே பேரளவே!

அன்பின் வழியது உயிர்நிலையே-நம்    
   ஐயன் சொன்னது பொய்யிலையே!
என்பும் தோலைப் போர்த்தியதே-அன்பு
   இல்லா உடம்பு ஆகியதே!

காலமும் இடமும் கருதிடுவாய்-ஏற்றக்    
  காரிய மாற்ற முனைந்திடுவாய்!
ஞாலம் போற்ற வாழ்ந்திடுவாய்-நாடு
   நலம்பெற பல்வழி சூழ்ந்திடுவாய்!


                   புலவர் சா இராமாநுசம்

 


 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...