ஓடு மனிதா நீஓடு-இவ்
உலகம் அழியா வழிநாடு!
தேடு மனிதா நீதேடு-உன்
தேவை எதுவோ அதைநாடு!
சுயமாய் சிந்தனை செய்வாயா-உன்
சொந்தக் காலில் நிற்பாயா?
பயமே இன்றி செயலேற்று-நல்
பயன்தரக் காண்பாய் நீயாற்று!
தோல்வி வரினும் துவளாதே-உடன்
தொடர்ந்து முயலத் தயங்காதே!
வேள்வி என்றே பாடுபட- வரும்
வேதனை முற்றும் தவிடுபட!
முயற்சி ஒன்றே உருவாக்கும்-நம்
முன்னோர் மொழிந்தத் திருவாக்கும்!
அயற்சி போக்கும் அறிவாயா-நாளும்
அவ்வழி செயலும் புரிவாயா!
இன்னார் இனியர் பாராதே-ஏதும்
இல்லை என்றே கூறாதே!
உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
உதவின் அதுவே பேரளவே!
அன்பின் வழியது உயிர்நிலையே-நம்
ஐயன் சொன்னது பொய்யிலையே!
என்பும் தோலைப் போர்த்தியதே-அன்பு
இல்லா உடம்பு ஆகியதே!
காலமும் இடமும் கருதிடுவாய்-ஏற்றக்
காரிய மாற்ற முனைந்திடுவாய்!
ஞாலம் போற்ற வாழ்ந்திடுவாய்-நாடு
நலம்பெற பல்வழி சூழ்ந்திடுவாய்!
புலவர் சா இராமாநுசம்

