Showing posts with label கவிதை புனைவு சமுதாயம் அரிது பெரிது. Show all posts
Showing posts with label கவிதை புனைவு சமுதாயம் அரிது பெரிது. Show all posts

Tuesday, April 10, 2012

செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது!



செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது
    சினமின்றி இருப்பாரைக் காணல் அரிது
பெய்யாமல் பெய்திட்ட மழையும் பெரிது
    பிழையின்றி நடப்பதும் மிகவும் அரிது

அறம்செய்து வாழுதல் என்றும் பெரிது
    அழுக்காறு அவாவின்றி இருத்தல் அரிது
புறங்கூறல் இல்லாத குணமே பெரிது
    பிறர்குற்றம் பேசாமல் இருத்தல் அரிது

குற்றமெனில் ஏற்கின்ற தன்மை பெரிது
    கொள்கையிலே மாறாத ஆட்சி அரிது
சுற்றமதை வெறுக்காமல் காத்தல் பெரிது
    சுயநலமே இல்லாதார் அரிது! அரிது

சட்டத்தை மதிக்கின்ற பண்பே பெரிது
    சமுதாய ஒற்றுமை காணல் அரிது
திட்டமிட்டு வாழுதல் என்றும் பெரிது
   தேவைக்கே உரியபொருள் தேடல் அரிது

நன்றல்ல செய்தாலும் பொறுத்தல் பெரிது
    நலமிக்க நல்லோரின் நட்பே அரிது
குன்றன்ன தடைவரினும் நேர்மை பெரிது
    கோடாத நீதிவழி நடப்போர் அரிது

வழியிலா வழிநீக்கி வாழல் பெரிது
   வையத்து வாழ்வாங்கு வாழ்வார் அரிது!
பழியிலார் ஆவதே பெரிது பெரிது
    பயிலாது கல்விவரல் அரிது! அரிது

                                       புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...