சினமது சேர்ந்தாரைக் கொல்லி!-என
செப்பிய குறள்தன்னை உள்ளி!
இனமது காத்திட வேண்டும்-நல்
இன்பமேப் பூத்திட யாண்டும்!
மனமது வைத்தாலே போதும்-பொது
மறையது சொல்வது யாதும்!
தினமது எண்ணியே வாழ்வீர்-சினம்
தேவையா?ஆய்வாக சூழ்வீர்!
செல்லிடம் காப்பதே! சினமும்-என
சிந்தித்துச் செயல்பட! மனமும்!
அல்லிடம் காப்பதா!? அன்றே!-இதை
அறிவது அனைவரும் நன்றே!
பல்லிடம் நஞ்சினை வைத்தே-நல்
பாம்பென பகைகொண்டுக் கொத்த!
இல்லிடம் நெஞ்சிலே! சினமே-முடிவு
எடுத்தாலே வாழ்வீரக் கணமே!
தன்னையே தான்காக்க எவரும்-சினம்
தன்னையே காத்திடின் அவரும்!
நன்னலம் காண்பரே என்றும்-வாழ்வில்
நடந்திடின் அறிவரே இன்றும்!
பொன்நிகர் வள்ளுவன் குறளே-எடுத்து
போதிக்கும் வழிதேடி வரலே!
உன்னெழில் வாழ்வுக்கு உரமே-என
உணர்தலே நாம்பெற்ற வரமே!
புலவர் சா இராமாநுசம்

