Showing posts with label கவிதை புனைவு வேண்டியன வாழும் முறை. Show all posts
Showing posts with label கவிதை புனைவு வேண்டியன வாழும் முறை. Show all posts

Monday, April 23, 2012

ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்!


ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்
   உறவல்ல என்றாலும் உதவ வேண்டும்!
சாயாத நீதிவழி என்றும் வேண்டும்
   சாதிமதம் பார்க்காத மனமே வேண்டும்!
காயாகிக் கனியாகக் காக்க வேண்டும்
   காலத்தை பயனாகக் கழிக்க வேண்டும்!
ஆயாத செயல்தன்னை நீக்க வேண்டும்
   ஆணவத்தை அடியோடு அகற்ற வேண்டும்!


கோபத்தைக் கொடிதென்று எண்ண வேண்டும்
    குடிகெடுக்கும் குடிதன்னை ஒழிக்க வேண்டும்!
ஆபத்தை முன்கூட்டி அறிதல் வேண்டும்
    அழுக்காறு ஆசைகளை அடக்க வேண்டும்!
பாபத்தை செய்யாது இருக்க வேண்டும்
   பண்பதனைப் பாடறிந்து ஒழுக வேண்டும்!
தீபத்தைப் போல்தியாகம்  செய்ய வேண்டும்
    திட்டமிட்டே தினந்தோறும் நடக்க வேண்டும்!


முன்னோரின் மூதுரையை ஏற்க வேண்டும்
    முறையாகக் கல்விதன்னைக் கற்க வேண்டும்!
பின்னோரின் நலந்தன்னைப் பேண வேண்டும்
    பிழைசெய்யின் மன்னிப்புக் கோர வேண்டும்!
தன்னேர் இல்லாத தகமை வேண்டும்
   தாய்போல தாய்மெழியைப் போற்ற வேண்டும்!
இன்னாரே என்றாலும் மதிக்க வேண்டும்
   இனியசொல் பேசலே என்றும் வேண்டும்!

                                            புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...