இல்லற வாழ்கை இன்றாமே!-வெறும்
இய.ந்திரம் என்றால் நன்றாமே
அல்லல் நாளும் படுகின்றோம் -மேலும்
ஆசைகள் வளர்ந்திட கெடுகின்றோம்
நல்லவர் எங்கே ? காணவில்லை -மனதில்
நாணமோ ! அச்சமோ! பூணவில்லை
வல்லவர் என்பவர் பொய்சூதே – நாக்கில்
வாய்த்தவர் ஆனதும் மிகதீதே
அறவழி நடப்பவர் குறைந்துவிட –வீண்
அகந்தை குணமே நிறைந்துவிட
துறவரப் போலிகள் நாடெங்கும் –கொள்ளை
தொடர்கதை ஆகிட தெருவெங்கும்
புறவழிச் சென்றே பொருள்தேடும் –மனப்
போக்கால் வாழ்வே இருள்மூடும்
மறவழி வாழ்ந்தார் முன்னோரே –அதை
மறந்து தாழ்ந்தார் பின்னோரே
சுயநலம் ஒன்றே குறியாக – பொருள்
சேர்ப்பதே! இன்றும் நெறியாக
நயனில வழிமுறை நாடுகின்றார் -ஆனால்
நல்லவர் வேடம் போடுகின்றார்
அயலகம் தன்னில் பொருள்தேட – பெரும்
அலைகடல் தாண்டிப் பலரோட
பயனில ஆனதே நம்நாடே –எண்ணிப்
பாரா அரசெனில் வரும்கேடே!
புலவர் சா இராமாநுசம்

