ஐயாமாரே அம்மாமா ரேபாருங்க-எங்கும்
அமர்க்களமே ஆகிவிட ஊருங்க
பொய்யான வாக்குறதி ஏனுங்க- நம்மைப்
போடச்சொல்லி வாக்குசீட்டு தானுங்க
ஊழலென்ற வார்த்தைமிக பாவங்க!- அதை
உச்சரிக்க, அனைவருமே! கோவங்க!
சூழலென்ன! செய்யாதெவர்! கேளுங்க!-எடுத்து
சொல்லுதற்கு யாருமில்லா நாளுங்க!
ஓட்டுக்காக ஊரெல்லாம் வருவாங்க - அவர்
உருப்படியா அவங்களென்ன செய்தாங்க!
கேட்டுபலன் ஏதுமிங்கே இல்லிங்க- நம்ம
கேடுகெட்ட அரசியலே தொல்லைங்க!
போட்டுபோட்டு கண்டபலன் ஏதுங்க! ஓட்டு
போட்டபின்னர் பெற்றதெலாம் தீதுங்க
நாட்டுநிலை! இதுதானே! நம்புங்க! -தேர்தல்
நாளன்று இதையெண்ணில் தெம்புங்க!
புலவர் சா இராமாநுசம்

