ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும்
எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும்
திசைகாணா துயர்தன்னில் வீழுகின்றோம்-மேலும்
போதாதா விலைவாசி விண்ணைமுட்ட –தினம்
புலம்பிட மக்களும் கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட இயலவில்லை-ஏதோ
உள்ளத்தை வருத்திட இந்ததொல்லை
பகல்கொள்ளை படுகொலை பெருகிப் போச்சே-நாளும்
பயத்துடன் வாழ்கின்ற நிலையு மாச்சே!-வேறு,
புகலென்ன ! வழியின்றி! வருந்த லாச்சே-நாடும்
போவதோ காடாக! மாற லாச்சே!-மேலும்
மழையில்லை! இட்டபயிர் அழிந்து போக-கண்டே
மனம்குமுற, விவசாயி நொந்து சாக!-நீதியில்,
பிழையன்றோ ? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப்
பேதையர் அன்னாரைக் காக்க வாரீர்!
புலவர் சா இராமாநுசம்

