Showing posts with label மீனவன் துயரம் தீரா தொடர கதை. Show all posts
Showing posts with label மீனவன் துயரம் தீரா தொடர கதை. Show all posts

Thursday, September 6, 2012

எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்




மீண்டும்  மீண்டும்  வருகின்றான்-நம்
     மீனவர் வலையை அறுக்கின்றான்
 தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
     துயரக் கண்ணீர் வடிக்கின்றார்
 ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
    எனினும் பழைய காட்சியதே
 வேண்டும் துணிவு அதுவொன்றே-அவர்
    வேதனை போக்கும்  வழியின்றே


எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
    எடுபிடி யாக  ஆவார்கள்
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
    மேலும் போவது அவமானம்
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
     புத்தரே சொல்லினும் கேளாரே
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
    எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்


ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
   அம்மா   அவர்கே   கதியாரே
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
   கொடுப்பீர் மத்திக்கு இதுபோதே
மீறினால் வருமே போராட்டம்-என
    மத்தியில் ஆள்வோர் உணரட்டும்
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
    மக்களை அரசே திரட்டட்டும்

பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
  பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்
அடித்தான் இன்றும் தொடர்கதையா-இந்த
  அவலம் மீனவன்  தலைவிதியா
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
  தமிழக அரசே உடன்ஒல்லை
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
  எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை

                   புலவர் சா இராமாநுசம்  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...