Saturday, May 12, 2012

அன்னையர் தினம்!



சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

Friday, May 11, 2012

பணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும் பாரா முகமேன் ஆள்வோரே!


தனியார் பள்ளிக் கொள்ளைகளே-மீண்டும்
   தாங்கிட இயலாத் தொல்லைகளே!
இனியார் எம்மைக் கேட்பாரே-இன்று
   எமக்கே உரிமையும் தந்தாரே!
அணியாய்த் திரண்டு வழக்கிட்டார்-நீதி 
    அவர்கே வெற்றி! முழக்கிட்டார்!
பணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும்
   பாரா முகமேன் ஆள்வோரே!


கொண்டதே கொள்கை என்கின்றார்-தாம்
    கூறுதல் வேதம் என்கின்றார்!
விண்டதேக் கட்டணம் என்கின்றார்-கேட்டால்
    விரட்டியே வெளியே தள்ளுகின்றார்!
தண்டமும் வேறு விதிப்பாரே-இதைத்
   தடுத்திட இயலா! பெற்றோரே!
கண்டிட வேண்டும் ஆள்வோரே-உடன்
   கண்டிக்க வேண்டும் ஆள்வோரே!


சேவையாய் கல்வியை பள்ளிகளே-எண்ணி
   செய்திட வேண்டும் பள்ளிகளே!
தேவையாம் பொருளென வழிதேடி-இப்படி
    தேடினால் வருமே பழிநாடி!
எழுத்தே தருபவன் இறைவன்தான்-என
   எழுதினர் நமது முன்னோர்தான்!
கழுத்தை நெறிப்பதா பள்ளிகளே-மேலும்
   கட்டணம் எரியும் கொள்ளிகளே!

                          புலவர் சா இராமாநுசம்
  

  

Thursday, May 10, 2012

தலைமீது கூடையிலே கீரைக் கட்டே!


தலைமீது கூடையிலே கீரைக் கட்டே-தன்
   தலைவிதியை நினத்தபடி துன்பப் பட்டே!
விலைகூறி முடிந்தவரை சத்த மிட்டே-இந்த
    வீதிவழி போகின்றான் நாளுந் தொட்டே!
நிலைகெட்டுத் தடுமாறி நடையும் தளர-சற்று
    நின்றபடிக் கத்துவான் நாக்கு முலர!
விலைகேட்டு அதிகமென விலகிச் செல்ல-படும்
    வேதனையை விளக்கிடலோ! எளிதே யல்ல!

இப்படியே வாழ்கின்றார் எத்தனை பேரே-இந்த
   ஏழைகளின் துயர்தன்னை தீர்ப்போர் யாரே!
தப்படியே வைக்கின்றார் ஆள்வோர் யாரும்-இதை
   தடுத்திடவே முனைவோரும் உண்டா கூறும்!
எப்படியோ போகட்டும்! வேண்டும் நன்மை-என
   எண்ணுகின்ற நிலைதானே நமதுத் தன்மை!
செப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு
   சினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே!

கோபுரமாய் வீடெல்லாம் மாறக் கண்டோம்-ஆட்சிக்
    கோட்டையிலே மாறிமாறி ஏறக் கண்டோம்!
ஆபரண துணிமணிகள் மாற்றம் கண்டோம்-வெட்டி
    அரசியலும் பேசுவதில் இன்பம் கண்டோம்!
பாபிகளாய் ஏழைகளைத் தினமும் கண்டோம்-சற்று
    பரிதாபம் பட்டதுடன் முடித்துக் கொண்டோம்!
ஹாபியென ஆங்கிலத்தில் சொல்லைக் கண்டோம்-மன
   ஆறுதலாய்ச் சொல்வதற்கும் கற்றுக் கொண்டோம்!

                  புலவர் சா இராமாநுசம்


Monday, May 7, 2012

என்னவள் மறைந்ததும் இந்நாளே


ஓடின மூன்று ஆண்டுகளே-என்
  உயிரென வாழ்ந்து மாண்டவளே!
தேடியே காணும் இடமன்றே-அன்புத்
   தேவதை மறைந்த இடமொன்றே!
வாடிய மலராய் நானாக –அதன்
   வாசனை, அவளோ விண்னேக!
பாடிய பாடல் அன்றிங்கே-இன்று
   படைத்தேன் படித்திட நீரிங்கே!

தன்னலம் காணாத் தகவுடையாள்-எதிலும்
       தனக்கென நற்குணம் மிகவுடையாள்!
 இன்னவர் இனியவர் பாராமல்-உதவ
        எவருக்கும் மறுப்பு கூறாமல்!
 என்னவள் இவளே செய்திடுவாள்-வரும்
       ஏழைக்கே மருந்தும் தந்திடுவாள்!
 அன்னவள் மருத்துவ மாமணியே-புகழ்
       அறிந்திட இயலாப் பாவழியே!


என்றும் அன்புடன் இருப்பாயா
என்னை விட்டுப் பிரிவாயா!
அன்று உன்னைக் கேட்டேனே
அதற்கு என்ன சொன்னாய்நீ!
நன்று அன்று இக்கேள்வி
நமது காதல் பெருவேள்வி!
என்று சொன்ன தேன்கனியே
எங்கே போனாய் நீதனியே!

கட்டிய கணவன் கண்முன்னே
காலன் அழைக்க என்கண்ணே!
விட்டுப் போனது சரிதானா
விதியே என்பது இதுதானா!
மெட்டியைக் காலில் நான்போட
மெல்லியப் புன்னகை இதழோட!
தொட்டுத் தாலி கட்டியன்
துடிக்க வெடிக்கப் போனாயே!

பட்டு மேனியில் தீவைக்க
பதறும் நெஞ்சில் முள்தைக்க!
கொட்டும் தேளாய் கணந்தோறும்
கொட்ட விடமாய் மனமேறு்ம்!
எவ்வண் இனிமேல் வாழ்வதடி
என்று உன்னைக காண்பதடி
செவ்வண் வாழ்ந்தோம் ஒன்றாக
சென்றது ஏனோத் தனியாக!

எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
என்னையும அழைத்துச் சென்றுவிடு!
அங்கே ஆகிலும் ஒன்றாக
அன்புடன் வாழ்வோம் நன்றாக!
இங்கே நானும் தனியாக
இருத்தல் என்பது இனியாக!
பங்கே என்னில் சரிபாதி
பரமன் காட்டிய வழிநீதி!
செய்வாயா--?

                       புலவர் சா இராமாநுசம் 


Saturday, May 5, 2012

ஈழம் ஒன்றே என்னாசை-என் இதயம் முழங்கும் நல்லோசை


ஈழம் ஒன்றே என்னாசை-என்
   இதயம் முழங்கும் நல்லோசை!
வாழும் என்நாள் முடிவுக்குள்-அது
   வந்திடுட வேண்டும் விடிவுக்கே!
சூழல் விரைவில் வந்திடுமா-ஈழம்
   சுதந்திரம் பெற்றுத் தந்திடுமா?
பாழும் மனமே! கலங்காதே!-சிங்கள,
   பாவியின் குலமும் விளங்காதே!

கண்டனம் செய்தால் போதாது-அந்த
   கயவர்கள் திருந்துதல் ஆகாது!
தண்டணைத் தருவதே சரியாகும்-எனில்,
   தமிழரின் வாழ்வே எரியாகும்!
சண்டை முடிந்தும் மூன்றாண்டே-அங்கே
    சாவாதே மேலென மனந்தூண்ட
குண்டர்கள் ஆடசி மாறாதே-அவர்
   கொடுமைக்கு இன்றும் அளவேதே!

முள்ளின் வேலிக்குள் கிடக்கின்றார்-அவர்
   முடங்கி அடங்கியே நடக்கின்றார்!
உள்ளிட வேண்டும் ஐ.நா வே-உடன்
   உலகம் உணர்ந்திடச் செய்வாயே!
கள்ளிப் பாலும் பசும்பாலாய்-பக்சே
   கள்ளனின் நாடகம் சிலநாளே!
வெள்ளி முளைக்கும்! விடிந்திடுமே-ஈழ
   வெற்றிச் சங்கும் ஊதிடுமே!

                                 புலவர் சா இராமாநுசம்
 

   
  

Thursday, May 3, 2012

பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!



உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்
    ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!
வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக
     வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!

வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்
    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!
நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்
     நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!

அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை
    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!
கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்
    குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!

உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்
   உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!
திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி
    தேவதையும்  தேடிவர வழிதான்! விண்டோம்!

ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்
    உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்
கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு
    கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!

எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த
    எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!
புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது
    பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!

                         புலவர் சா இராமாநுசம்
  



Wednesday, May 2, 2012

இரத்தம் சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!


ஒலிக்கிறது தனிஈழம்  தீர்வா மென்றே-ஆனால்
   ஒற்றுமையோ வரவில்லை இதுவா நன்றே!
களிக்கிறது மனமெல்லாம் சொல்வேன் ஒன்றே-யாரும்
   கடந்ததைப் பேசாமல் சேர்வீர் இன்றே!

சொல்வது யாரெனும் ஆய்வு வேண்டாம்-அவர்
    சொற்பொருள் யாதென ஆய்த லீண்டாம்!
வெல்வது தனிஈழம் வருமே ஒருநாள்-நாம்
    வீறுகொள்ள விரைந்திடுமே அந்தத் திருநாள்!

உலகெங்கும் வாழ்கின்ற தமிழ ரினமே-உன்
   உணர்வாலே ஒன்றுபடின் ஈழம் வருமே!
கலகங்கள் நமக்குள்ளே வேண்டா மினியும்-உள்ள
    கழகங்கள் ஒன்றாயின் காலங் கனியும்!

நடந்ததை மறப்பதே நமக்குத் தேவை!-ஈழம்
   நல்கிட அனைவரும் செய்யும் சேவை!
திடமதை மனதிலே கொள்ள வேண்டும்-போர்
   திட்டத்தை அறவழி தீட்ட வேண்டும்!

ஓரணி திரண்டாலே உடனே வெல்வோம்-குரல்
   ஓங்கிட உலகுக்கு எடுத்துச் சொல்வோம்!
பேரணி ஆர்பாட்டம் ஊரில் எங்கும்-பேசும்
   பேச்சிலே மூச்சிலே ஈழம் பொங்கும்!

குற்றமே பார்ப்பார்கும் சுற்றம் இல்லை-வெறும்
    குறைசொல்லி வந்தாலே மேலும் தொல்லை!
செற்றமே நமக்குள்ளே வேண்டாம்! கெடுக்கும்-இரத்தம்
    சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!

                   புலவர் சா இராமாநுசம்


  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...