Wednesday, January 6, 2016

நாளும் கைதே ஆகின்றான் –மீனவன் நடப்பது எதுவும் புரியவில்லை!


நாளும் கைதே ஆகின்றான் –மீனவன்
நடப்பது எதுவும் புரியவில்லை
ஆளும் அரசோ தவறாமல்-கடிதம்
அனுப்புதல் ஏனோ தெரியவில்லை

மத்தியில் ஆள்வோர் இதுபற்றி-சற்றும்
மதிப்பதாய் எதுவும் தெரியவில்லை
கத்திமேல் நடக்கிறான் மீனவனோ-அவன்
கண்ணீர் நிற்குமா புரியவில்லை

புலவர் சா இராமாநுசம்

Monday, January 4, 2016

முகநூல் பதிவுகள்





பெண்களுக்கென்று தனியாக மதுக்கடை திறக்கப் பட்டது இந்தியத் தலைநகர் டெல்லில்- செய்தி
காந்தியார் கண்டகனவு, சுதந்திரம் , பெண்ணுரிமை ஆகா!! மலர்ந்தது ! வாழ்க அகண்ட பாரதம்! பாரத மாதாவுக்கு ஜே ! பெண்ணடிமை ஒழிந்தது!

பொதுவாக சக்கரை என்பது இனிக்கும் என்றாலும் கூட அதிலேயும் வேறுபாடு உண்டு சில இனிப்பு குறைந்தும் சில இனிப்பக் கூடியும் இருக்குமல்லவா அதுபோல, வாழ்வில் நல்ல மனிதர்கள் என்று கருதப்படும் சிலரின் செயல் பாடுகளிலும் அவ்வப்போது சிறு சிறு வேறுபாடுகள் காணத்தான் செய்யும் அதையெல்லாம் பொருட் படுத்தக் கூடாது!

தனுஷ் பட கட்டவுட்டுக்கி 100 லிட்டர் பால் அபிஷேகம் -செய்தி! வெள்ளம் வந்த போது பாலுக்கு மக்கள் பட்ட அவதி!!!!!
கடவுளே! சினிமா மோகமும், மதுக்கடைகளும் உள்ளவரை இந்த நாடு உருப்படாது! அதில் துளியும் ஐயமில்லை!

பொதுவாக அனைவரும் பணத்தை சேமிக்க ஆசை படுவது இயல்பே! அப்படி சேர்த்த பணத்தை பாது காக்க , எந்த வங்கியில் போடலாம் ,அவ் வங்கி பாதுகாப்பானதா என்றும் யோசிப்பதும் இயல்பே! ஆனால் வள்ளுவன் சொல்லும் வங்கி எது வென்றால், பொருள் அற்றவனாக, தன்னை
அழிக்கின்ற கொடிய பசி நோயால் வாடுகின்றவன் வயிறே ,ஒருவன் பெற்ற பணத்தை வைக்கும் வங்கி என்பதாம் அதாவது ஏழையின் பசியைப் போக்குவதே
அற்றா ரழிபசி தீர்த லஃதெருவன்
பெற்றான் பொருள்வைப் புழி- குறள்

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 31, 2015

ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும் அனைவர்க்கும் ஆனந்தம் தருக



ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
தடையின்றிப் நிலையாக பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே


இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைந்ததிவ் வாண்டே
செயற்கையால் வந்ததே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே

உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – நீயும்
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே

இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, December 29, 2015

நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால் நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும்!



நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால்
நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும்
தோள்தட்டி மார்தட்டி நடந்ததென்ன முடிவில்-இதில்
தோற்றதெவர் வென்றதெவர்! ஆயவதென்ன! விடிவில்!


கோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்
கொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே
தேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று
தேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்

பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
பேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே
புரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்
புரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே

நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே

பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
அவலந்தான் முடியாத தொடராக நின்றும்

புலவர் சா இராமாநுசம்

Saturday, December 26, 2015

தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி, தையின் குளிரோ எமைவாட்டும்!



பொங்கிய வெள்ள போயிற்றே-கண்ணீர்
பொங்கும் நிலைதான் ஆயிற்றே!
திங்கள் ஒன்றும் ஆகிறதே-இங்கே
தினமும் நெஞ்சம் வேகிறதே!
எங்கள் வாழ்வும் நலமுறுமா-மழை
இழைத்த அழிவும் வளமுறுமா?
தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி,
தையின் குளிரோ எமைவாட்டும்!


புள்ளி விபரம் போடுகின்றார்-வந்து
போவதும் வருவதாய் ஒடுகின்றார்!
அள்ளிப் போடவும் மனமில்லை-ஐந்து
ஆயிரம் அளிப்பதால் பயனில்லை!
கொள்ளி வைக்கவே பயன்படுமே-எம்
குடும்பமே அதிலே எரிபடுமே!
வெள்ளம் வந்தால் வடிந்துவிடும்-துயர
வெள்ளத்தில் ஊரே மடிந்துவிடும்!

யானைப் பசிக்கு எதுவேண்டும்-அரசே
எமக்கு உதவ நி(ம)திவேண்டும்!
ஏனோ உடமைகள் இழந்திட்டோம்-வாழ
ஏதினி வழியின்றி அழிந்திட்டோம்!
விணே எம்மை வாட்டாதீர்-வெறும்
வார்த்தையால் திட்டம் தீட்டாதீர்!
தேனாய் இனித்திட வாழ்ந்தோமே-எட்டு
திசையும் இருண்டிட வீழ்ந்தோமே!

புலவர் சா இராமாநுசம்

Friday, December 25, 2015

ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில் எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால



ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்
எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால
தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே
திருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்
ஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது
ஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்
மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்

புலவர் சா இராமாநுசம்

Thursday, December 24, 2015

முகநூல் பதிவுகள்!




கெடுதலை செய்த மழை ஓய்ந்து விட்டது! இட்ட பயிர் அழிந்து விட்டது என்றாலும் வள்ளுவன் ஒரு குறளில் சொன்ன பாதி முடிந்தது! இனி மறுபாதி நடக்க வேண்டுமல்லவா! நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது ! விவசாயம் செழிக்க என்ன வழி!? உழவன் பாடுபட, வேண்டிய உதவிகளை மத்திய .மாநில அரசுகள் ஆவன உடனே செய்ய வேண்டும் அப்பணி விரைந்து நடந்தால்தான் விலைவாசி விலை குறையும் மக்கள் ஒரளவாது நிம்மதி காண்பர்!

குற்றம் ஏதும் இல்லாதவனாக மக்களுக்கு நன்மை செய்து முறையாக ஆளும் அரசனை அவன் நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகமே சுற்றமாக எண்ணி மகிழ்ந்து பாராட்டும் என்பது வள்ளுவர் வாக்கு!

கெடுதல் வருவதில் இரண்டு வகை ! ஒன்று செய்யக் கூடாத வேலைகளை செய்வதனாலும் வரும்! அடுத்தது செய்ய வேண்டிய செயல்களை உரிய காலத்தில் செய்யாமல் விடுவதாலும் வரும் இன்று சென்னை அழிவுகுக் காரணமே இவைதான் ! ஆக்கிரம்பை தடுக்காததோடு உரிய காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை செய்ய தவறியது தான்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...