ஊருக்கு ஒருபுறத்தில் ஒற்றை ஆலமரம்
வேருக்குத் துணையாக விழுதுபல தொங்கிடவும்
பேருக்குக் கடவுளென பிள்ளையார்
அமர்ந்திருக்க
யாருக்கும் அவர்மீது ஏனோ பாசமில்லை
ஏழைக் கடவுளவர் எண்ணையில்லை விளக்குமில்லை
பேழை வைத்துப்பணம் போடுபவர் ஒருவரில்லை
வாழை இலையில்லை வைக்கவில்லை வடைஎதுவும்
கோழை ஏழையென குடியிருந்தார் அவர்பாவம்
பிள்ளையார் பிறந்தநாள் ஊர்நடுவே பந்தலிட்டு
உள்ளமிக பக்தியொடு உருவான பிள்ளையாரின்
வெள்ளைநிற உருவத்தை வீதியெல்லாம் வலம்விட்டு
மெள்ளவரும் ஊர்வலமே மேளதாளம் சத்தமிட
மரத்தடி பிள்ளையாரோ மௌனமாய் பார்த்திருக்க
சிரத்தையெடு ஊர்வலமும் சென்றதுவே
குளம்நோக்கி
கரமெடுத்து வணங்கிவிட்டே கரைத்தார்கள்
நீரதிலே
வரசக்தி மரத்தடியார் வாய்விட்டு சிரித்தாரே!
புலவர் சா இராமாநுசம்

