Showing posts with label விழா. Show all posts
Showing posts with label விழா. Show all posts

Friday, August 15, 2014

நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த நாளில் வரமே தரவேண்டும்



பாருக் குள்ளே நம்நாடே-புகழ்
பாரதம்! உண்டா அதற்கீடே
ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று
ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
போற்றியே புகழ்ந்து மறுநாளே
யாருக்கும் நினைவில் வாராதே-இனி
என்றும் இந்நிலை மறாதே

வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
வந்தே மாதரம் ஊருக்காம்
தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
தன்னல மிக்கோர் ஈண்டுசில
சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
செப்பும் நிலையே ஆனதென
நிந்தனை செய்து என்னபலன்-இந்த
நிலையை மாற்ற எவருமிலன்

வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
வேதனை தீர்ந்தது என்றாலும்
கொள்ளையர் சிலர்கை அகப்பட்டோ-நாளும்
கொடுமை அந்தோ மிகப்பட்டே
தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
தொடர்கதை யாகப் போயிற்றே
எல்லை மீறின் தன்னாலே-நாம்
இழப்போம் அனைத்தும் பின்னாலே


கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
கள்ள வாணிகம் சுதந்திரமே-பொருள்
கலப்படம் செய்யவும் சுதந்திரமே
வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
விடுதலை நோக்கி நடைபோட
நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
நாளில் வரமே தரவேண்டும்




சா  இராமாநுசம்
 

Thursday, October 4, 2012

ஏன் சிரித்தார் பிள்ளையார் ! ! ! ? ? ?

ஊருக்கு ஒருபுறத்தில் ஒற்றை ஆலமரம்
வேருக்குத் துணையாக விழுதுபல தொங்கிடவும்
பேருக்குக் கடவுளென பிள்ளையார் அமர்ந்திருக்க
யாருக்கும் அவர்மீது ஏனோ பாசமில்லை

ஏழைக் கடவுளவர் எண்ணையில்லை விளக்குமில்லை
பேழை வைத்துப்பணம் போடுபவர் ஒருவரில்லை
வாழை இலையில்லை வைக்கவில்லை வடைஎதுவும்
கோழை ஏழையென குடியிருந்தார் அவர்பாவம்

பிள்ளையார் பிறந்தநாள் ஊர்நடுவே பந்தலிட்டு
உள்ளமிக பக்தியொடு உருவான பிள்ளையாரின்
வெள்ளைநிற உருவத்தை வீதியெல்லாம் வலம்விட்டு
மெள்ளவரும் ஊர்வலமே மேளதாளம் சத்தமிட

மரத்தடி பிள்ளையாரோ மௌனமாய் பார்த்திருக்க
சிரத்தையெடு ஊர்வலமும் சென்றதுவே குளம்நோக்கி
கரமெடுத்து வணங்கிவிட்டே கரைத்தார்கள் நீரதிலே
வரசக்தி  மரத்தடியார் வாய்விட்டு  சிரித்தாரே!

                            புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...