Friday, August 17, 2012

அன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது.!



அன்பின் இனிய உறவுகளே!

                     வணக்கம்!

        அன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது.
நேற்று,பதிவர் சந்திப்புக்கான விழாவிற்கு காவல் துறையின் ஒப்புதல் பெற,
நானும் கவிஞர் மதுமதியும்,நண்பர் செயக்குமார் அவர்களும் சென்று
ஒப்புதல் பெற்றோம்!
         இதில், மிகவும் மகிழ்ச்சியான செய்தி, நாங்கள் கொடுத்த
மனுவில், தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம் என்ற அமைப்பின் சார்பாக
என்றே குறிப்பிட்டு, கையொப்பமிட்டுக் கொடுத்தோம்
           ஆக, முதற்கண் நமக்கென ஓர் அமைப்பு காவல் துறையில்
தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம் என்ற பெயரில் பதிவாகி விட்டது.
         இனி, இதனை முறைப்படுத்துவதும், செயல்படுத்துவதும்
வருகைதருகின்ற உங்கள்  கையில்.....!!!
            இதுபற்றி நான் எட்டு திங்களுக்கு முன் எழுதிய பதிவினை
மீள்பதிவாக கீழே வெளியிட்டுள்ளேன் அதுபோது, ஐம்பதிற்கும் மேற்பட்டோர்
ஆதரவு தெரிவித்திருந்தனர்
                                             அன்புடன்
                                           சா இராமாநுசம்

பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?

          அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
வணக்கம்!
          விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல
வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில்
அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது
        அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை
சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்
முற்படலாம். அதனால்  சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை
எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும்.
 
    இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி
சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில்
பதிவு செய்யவேண்டும்
        தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும்
என்று சொல்வார்கள்
       நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும்
தலைவனாகவும்  நான் பணியாற்றி உள்ளதால்
இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை
எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்
 
       உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்
         -----------------------------------------------------------------------------
 என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)
  பெயரிலோ செயல்படலாம்
  
          முதற்கண், இக்கருத்தை ஏற்றுச் செயல்படலாம்,
அமைப்பை உருவாக்கலாம் என்று கருதுகின்றவர்கள்  இப் பதிவின்
கீழ் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
         நிறைவாக நீங்கள் ஆதரவு தெரிவித்தால் எப்படி
அமைக்கலாம் என்பதை விரிவாக ஆராயலாம்
        முதலில், அமைப்பு  வேண்டுமா வேண்டாம
 என்பதைத் தெளிவுப் படுத்துங்கள்
            
                           பிற பின்னர்
 





Wednesday, August 15, 2012

பாரதியார் மன்னிக்க வேண்டுகிறேன்




ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே-மீண்டும்
   ஆனந்த சுதந்திம் தேடு வோமே
எங்கும் சுதந்திரம் என்பது போச்சே-ஆனால்
  எதிலும் சுயநலம் என்பதே ஆச்சே
                 
                                      (ஆடுவோமே)

சங்கு கொண்டே இதனை ஊதுவோமே-நம்
   சமுதாயர்ம் அறிய எடுத்து ஓதுவோமே
இங்குக் காணும் அரிய காட்சியாமே-ஏக
  இந்திய நாடே நல்ல சாட்சியாமே

                                     (ஆடுவோமே)

ஏழையின்  வாழ்விலே ஏற்ற மில்லை-சாதி
   ஏற்றத் தாழ்விலே மாற்ற மில்லை
பேழையுள் உறங்கும் நோட்டுக் கட்டே-விலைப்
    பேசியே வாங்கும் ஓட்டு சீட்டே

                                         (ஆடுவோமே)

ஊற்றாக ஓடுதாம் ஊழல் இங்கே-அதை
   ஒழிப்பதாய் சொல்வாரும் பெறுவார் பங்கே
மாற்றமே இல்லாது இன்றும் என்றும்-இதை
    மாற்றிட வழிதானே  இல்லை ஒன்றும்

                                      (ஆடுவோமே)

  
                  புலவர் சா இராமாநுசம்



Saturday, August 11, 2012

ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே!



    ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும்
    எழுதிட நாளும் களைப் பாவே
    தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத் தில்
    தானாய் வந்தது அலை போல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலை போல
    வானாய் விரிந்திட சிந்தனை கள்-கவிதை
    வடித்தால் வருஞ்சில நிந்தனை கள்  

    உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந் தாச்சே
    எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்  பூவே
    போதை கொண்டவன் நிலை யுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய  நிலை பெற்றேன்
    பொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்த துவே

    பாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்
    பரக்க பரக்க எழுதி டுவேன்
    வீதியில் ஒசைவந்த வுடன்-அடடா
    விடிந்த உணரவும் வந்தி டிமே
    தேதி கேட்டால தெரி யாதே-அன்றைய
    தினத்தின் பெயரும் தெரி யாதே
    காதில் அழைப்பது விழுந் தாலும-என்
    கவன மதிலே செல்வ தில்லை

    படுத்த படிய சிந்திப் பேன்-என்
    பக்கத் தில் பேனா தாளுமே
    தொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறை  வில்லை
    அடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணா தாம்
    எடுத்த பாடல் முடியா தாம்- எனினும்
    ஏனோ  இதயம் ஒயா தாம்

    அப்பா  வேதனை ஆம்  அப்பா-தினம்
    ஆனது என் நிலை பாரப்பா
    தப்பா-?  தொடங்கின வலைப் பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப் பாவே
    ஒப்பா யிருந்ததே என் னுள்ளம்-தேடி
    ஓடுமா சிந்தனை பெரு வெள்ளம்
    இப்பா போதும் முடி யப்பா-சோர்வு
    எழவே தொடரா படி யப்பா

              புலவர் சா இராமாநுசம்



Related Posts Plugin for WordPress, Blogger...
 

Thursday, August 9, 2012

அன்பின் இனிய உறவுகளே அலையெனத் திரண்டு வருவீரே!

   அன்பு நெஞ்சங்களே!

                        நம், நீண்டகால கனவு நினைவாகும் நாள் , இதோ வந்துவிட்டது         சென்னை பதிவர்களின் உழைப்பிற்கு நீங்கள் தரும் ஊதியம் உங்கள் வருகை     மட்டுமே!  வருக! வருக! மகிழ்வைத் தருக!


             
                                                                                      அன்புடன்
                                                                                  சா இராமாநுசம்

Tuesday, August 7, 2012

முதுமையிலே மூன்றுநாடுகள் சுற்றி வந்தேன்!


முதுமையிலே மூன்றுநாடுகள் சுற்றி வந்தேன்-ஆனால்
    முதுகுவலி, கால்வலியும் பெற்று நொந்தேன்
மதுவருந்தி விட்டவன்போல் கால்கள் தள்ள-எனினும்
     மனதினிலே உற்சாகம் மிகவும் கொள்ள
புதுமைமிகு காட்சிபல கண்டும் வந்தேன்-நல்
    புத்துணர்வும் புதுத்தெம்பும் என்னுள் தந்தேன்
இதுவரையில் இப்படியோர்  இன்பம் துன்பம்-வாழ்வில்
    இணைந்துவரும் சூழ்நிலையை பெற்ற தில்லை

விண்முட்ட முகில்தவழ அடுக்கு வீடே-மேலும்
    விரிவாக,ஆங்காங்கே பசுமைக்  காடே
கண்கொட்ட இயலாத காணும் காட்சி-மனக்
     கற்பனைக்கும் எட்டாத மிகுந்த மாட்சி
பண்பட்ட மக்களென பழக்க வழக்கம்-அதைப்
    பார்போரின் கவனத்தை தன்பால் ஈர்க்கும்
புண்பட்டேன்! நம்நாட்டை எண்ணிப் பார்த்தேன்-ஏனோ
   புலம்பத்தான் இயன்றது! நெஞ்சம் வேர்த்தேன்


சாலைகளோ தூய்மைதனை எடுத்துச் சொல்ல-ஏதும்
   சத்தமின்றி வாகனங்கள் நின்றுச் செல்ல
ஆலைகளும் மாசின்றி இயங்கக் கண்டேன்-அந்த
    அழகுதனை மனக்கண்ணில் படமாய்க் கொண்டேன்
காலையிலே, பரபரப்பு! பணிக்குச் செல்வோர்-மிக
    கண்ணியமாய் வரிசையிலே நின்று கொள்வர்
வேலையின்றி இருப்பாரைக் காணல் அரிதே-சாலை
   விதிகளையே மதிக்கின்ற பண்புப் பெரிதே

                                   ( தொடரும் )

அன்பின் இனிய உறவுகளே!
                           வணக்கம்.
சென்னையில் பதிவர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள்
சிறப்பாக நடைபெற, ஆயத்தப் பணிகள் செய்யவேண்டி
இருப்பதால், இனி, என் வலையில், என்னுடைய பதிவுகள்,
பதிவர்கள் சந்திப்பு முடிந்த பிறகே வெளிவரும் என்பதை
அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்

    
         பதிவர் சந்திப்புக்கு அனைவரும் வருகை தருமாறும், ஒத்துழைப்பு நல்குமாறும், விரும்பி வேண்டிக்
கேட்டுக்கொள்கிறேன்

                                    

                            புலவர் சா இராமாநுசம்

Thursday, July 19, 2012

தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத் தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றே


தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத்

     தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl

இனிஈழம் வாழ்நாளின் நோக்கம் என்றே-மேலும்

    இயம்பாதீர்! கலைந்தது வேடம் நன்றே


கனிகேட்டு காய்கவர நினைத்தல் தீதே-உரிய

    காரணம்தான் யாமறியோம் சொல்வீர் யாதே

பனிபட்டு பூக்கருகி உதிரல் போல-ஏனோ

    பதில்சொல்ல இயலாது விழித்தல் சால


உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்

    ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!

வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக

     வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!


வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்

    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!

நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்

     நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!


அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை

    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!

கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்

    குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!


உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்

   உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!

திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி

    தேவதையும்  தேடிவர வழிதான்! விண்டோம்!



ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்

    உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்

கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு

    கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!


எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த

    எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!

புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது

    பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!


                         புலவர் சா இராமாநுசம்









Wednesday, July 18, 2012

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்)

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்
          அதன் விளைவே, நினைவே இக் கவிதை

பொறுப்பே அறியா பொறுக்கி சிங்களர்
வெறுப்பே உருவாய் வஞ்சமே கருவாய்
கறுப்பு ஜூலை என்பத்தி மூன்றாம்
பிறப்பில் தமிழனா-?ஒழித்திடு என்றே
அழிக்கத் தொடங்கிய அந்நா ளாகும்
செழிக்க வாழ்ந்த ஈழத் தமிழன்
செத்தனர் மூன்று ஆயிரம் ஆமே
எரிந்தன எங்கும் எரிந்திட நெஞ்சம்
விரிந்தன கலவரம் இரண்டு மாதம்
அன்றுத் தொடங்கி இன்று வரையில்
கொன்று அழிப்பதேக் கொள்கை யாக
அகதிக ளாக ஈழரின் இரத்தம்
சகதிக ளாக வாழ்வதா நித்தம்
ஓடினார் ஓடினார் உலகு எங்கும்
தேடினார் பிழைக்க வழிதனை அங்கும்
பஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்
நெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா
பிறந்த நாடும் பிரிந்த உறவும்
மறந்து போகும் ஒன்றா சொல்வீர்
மண்ணின் மறவரே நீரே வெல்வீர்
இன்று இல்லை! எனினும் வருநாள்
நன்று வருமே ஈழத் திருநாள்
சித்தம் கலங்க வேண்டாம்! உறுதியே
சிங்களர் அழிந்து பெறுவார் இறுதியே

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...