Showing posts with label மக்களு. Show all posts
Showing posts with label மக்களு. Show all posts
Saturday, December 15, 2012
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில் சென்றதும் என்ன செய்கின்றீர்
அள்ளும் நெஞ்சைச் சிலம்பென்றே-அன்று
அறைந்தார் பாரதி மிகநன்றே
வள்ளுவன் தன்னை உலகிற்கே-வாரி
வழங்கிய வான்புழ் தமிழ்நாடாம்
தெள்ளிய தேனாய்க் கனிச்சாராய்-நன்கு
தேர்ந்துத் தெளித்தப் பன்னீராய்
உள்ளியே எடுத்துச் சொன்னாரே-முற்றும்
உணர்ந்த ஞானி அன்னாரே
ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
சண்டைகள் தேவையா இனிமேலும்
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
பாவம் மக்கள் ஊர்தோறும்
நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!
புலவர் சா இராமாநுசம்
Subscribe to:
Posts
(
Atom
)

