Showing posts with label மீள் பதிவு ஈழப் படுகொலை நினைவு நாள். Show all posts
Showing posts with label மீள் பதிவு ஈழப் படுகொலை நினைவு நாள். Show all posts

Friday, May 18, 2012

மே- பதினெட்டே!


              மேதினி போற்றும் மேதினமே-உன்
                 மேன்மைக்கே களங்கம் இத்தினமே!
              தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர்
                  தேம்பி அலற திசையெட்டே!
               வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
                   வாய்கால் முற்றும சேறாக!
               நீதியில் முறையில் கொன்றானே-அந்த
                   நினைவு நாளே துக்கதினம்!

               உலகில் உள்ளத் தமிழரெங்கும்-இன்று
                   ஒன்றாய்க் கூடி அங்கங்கும்!
               அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
                   அமைதியாய்  நெஞ்சில் துயரேந்தி!
                வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
                    வருந்த மக்கள் வழியெங்கும்!
                திலகம் வீரத் திலகமவர்-உயிர்
                    துறந்த தியாக மறவர்!

               முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
                   முடிந்த கதையா அதுவல்ல!
               கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
                   குடும்பமே அழிந்த நாளன்றோ!?
               புள்ளி விவரம் ஐ.நாவே!-அறிக்கை
                   புகன்றதே நாற்பது ஆயிரமே!
               உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
                   உலகத் தமிழர் தொழுகின்றார்!

              அகிலம் காணாக் கொடுமையிதே-நாம்
                  அறிந்தும் அமைதியா-? மடமையதே!
              வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
                  வீரம் விளையாக் களர்நிலமே!
              நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
                  நம்தலை தாழும் நிலையுண்டே!
              தகுமா நமக்கும் அந்நிலையே-மாறும்
                  தமிழகம் பொங்கின் சூழ்நிலையே!

                                                புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...