மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
நாட்டுக்கே உரியதாம் அருமை!
உழுதிட உழவனின் துணையே!-என
உற்றது இரண்டவை இணையே-நாளும்
பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
பங்குமே பெற்றது ஐய்ய!
தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
உணவின்றி அனைவரும் வீழ்வார்
மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
அவ்வழகினைப் பாடவா கூடும்!
வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
விரைந்திட ஓட்டுவார் இல்லம்
ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
இறையென பார்த்துமே தொழுவார்-இப்
பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
பயிர்நன்கு செழித்துமே ஓங்க!
ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
சென்றுமே பெரியோரைப் பணிவார்
உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
தொழுதிட உரியவன் உழவன்!
புலவர் சா இராமாநுசம்

