Showing posts with label அறப்போர் கவிதை. Show all posts
Showing posts with label அறப்போர் கவிதை. Show all posts

Thursday, December 27, 2012

கற்சிலையும் கண்ணீரை வடிக்குமன்றோ –அட காமுகரே உணர்வீரா ? திருந்தலென்றோ




பச்சிளம்  பாவையவள்  நாசமாக ஒரு
    பாவிமகன்  வனபுணர்வால்  உயிரும்போக !
எச்சிலை   தேடுகின்ற   நாயும்கூட-தெருவில்
    இலைமறவாய் காய்மறவாய்  உறவைநாட !
பொற்சிலையாள்   பேருந்தில்   தில்லிதன்னில் ஒருத்தி
    பிணமுண்ணும்  கழுகுகளால்  அழிந்ததெண்ணில் !
கற்சிலையும்   கண்ணீரை  வடிக்குமன்றோ அட
    காமுகரே   உணர்வீரா ? திருந்தலென்றோ ?

தாயுண்டு,  தங்கையக்க உமக்கமுண்டா ஏன்!
    தாரமெனச்   சொல்லுதற்கோர்   மங்கையுண்டா
பேயுண்டு  என்பதற்கா  பிறந்தீர்நீரும் காமப்
      பேய்களே  தாங்காது   எந்தவூரும் !
வாயுண்டு   கதறியழ   வலிமையில்லை இளம்
    வஞ்சியர்கள்  வாழ்வதற்குக்  காப்புமில்லை!
நோயுண்ட  மனங்கொண்டார்  பெருகலானார்-எங்கு
     நோக்கினும்  பெண்னினமே   கருகலானார்!

வடநாடு   பொங்கியெழ  அங்கேயேனோ தம்
    வாயடைத்துக்  கிடக்கின்றார்  இங்கேயேனோ !
முடமாகிப்  போனாயோ  தமிழர்நாடே  -கட்சி
    முரண்பாடால்  வந்ததாம்  இந்தக்கேடே!
நடமாடும்  தெய்வந்தான்  பெண்களன்றோ-நாளும்
      நடப்பதனைக்  காணாகண்   புண்களன்றோ!
திடமான  முடிவெடுத்து  பெண்மைகாப்பீர் எனில்
    தேவையில்லை  பெண்னினமே  அழித்துவிடுவீர் !

                        புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...