Saturday 31 December 2011

வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!



இதயம் கனிந்த நல்லோரே—என்
   இதயத்தில் வாழும் பல்லோரே!
உதயம் ஆங்கிலப் புத்தாண்டே!-இன்று
   உளங்கனி வாழ்த்துகள் உங்களுக்கே!

இன்பம் எங்கும் பொங்கட்டும்!-உங்கள்
   இல்லம் செழுமையில் ஓங்கட்டும்!
துன்பம் முழுமையும் போகட்டும்!-நல்
   தூயவர் ஆட்சியே நிலைக்கட்டும்!

சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
   சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
நீதி நேர்மை  தவழட்டும்!-மக்கள்
   நிம்மதி யாக வாழட்டும்!

பாடே படுபவன் ஆளட்டும்!-இந்த
   பரம்பரை ஆட்சி மாளட்டும்
கேடே பெற்றோம் எதனாலே-மிக
   கேவல மான இதனாலே!

உழைப்பவன் வாழ வழியில்லை!-நன்கு
   ஊரை ஏய்ப்பவன் தரும்தொல்லை
பிழைப்பைத் தேடும் ஏழைகளே-பாபம்
   ஏதும் அறியாக் கோழைகளே!

ஊரில் இல்லை ஒருவாரம்-எனவே
   உம்வலை காண யிலைநேரம்!
வேரில் பழுத்த பழம்நீரே-உமை
   வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!

                         புலவர் சா இராமாநுசம்

Tuesday 27 December 2011

மாட்சிமை மிக்க மேயரய்யா!



 ஆட்சி மாறிப் போனாலும்!-குப்பை
அவலம் நீங்கா ? ஆனாலும்
காட்சி தருதே தெருவெங்கும்!-சாக்கடை
கழிவே ஊற்றாய் மிக பொங்கும்!
மாட்சிமை மிக்க மேயரய்யா!-சற்றே
மனமும் இரங்கி பாருமய்யா!
சாட்சியாய் காணும் தெருவய்யா-பெரும்
சகதியாய் ஆனததன் உருவய்யா!

எங்கு காணிலும் குப்பைதான்-நம்
எழில்மிகு சென்னை காட்சிதான்!
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியவர்!
தங்கும் சாக்கடைத் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்!
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை!

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
வேதனை தீரும் வழிகாண்பீர்!-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்!
சோதனைப் போலக் கொசுக்கடியே-எடுத்துச்
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தேப் படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணி
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை!
மற்றது பின்னர் ஆகட்டும்!-குப்பை
மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல-இது
குத்தும் கவிதை ஆக்கமல!
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல!

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே!
உண்மை எதுவோ வேண்டாமே!-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே!
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை!
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!
புலவர் சா இராமாநுசம்

 

Monday 26 December 2011

ஓடி உதைத்து விளையாடு!


ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு!
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல
பண்பை என்றும் நீநாடு!
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்க தயங்காதே!

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!

ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு!
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்
Related Posts Plugin for WordPress, Blogger...