Thursday, May 16, 2013

பூண்டும் கருகிப் போனதுவே –எரியும் புகையில் நெருப்பென ஆனதுவே!





தாங்கிட  இயலா  கொடுமையிதே –காற்றும்
   தகித்திட  முடியா  அனலேயிதே!
தூங்கிட ஏதும் வழியில்லை-இரவும்
   தொடர்ந்து  வேர்வை தரும்தொல்லை!
ஓங்கிட நாளும் என்செய்வோம் –எப்படி
    உறக்க மின்றியே நாமுய்வோம்!
நீங்கிட வேண்டும் இந்நிலையே –உடன்
    நிம்மதி அதுவரை நமக்கிலையே!


வீதியில் நடப்பவர் பரிதாபம் –படும்
    வேதனைத்  தருமே கடுங்கோபம்!
பீதியால் நிழலைத் தேடுகின்றார் –காணின்
    பிழைத்திட  அங்கே  ஓடுகின்றார்!
காதில் புகுவதும் வெங்காற்றே-உச்சிக்
   கதிரவன  வெம்மையால் உடன்மாற்றே!
நீதியில்  செயலிதாம் மாற்றிடவாய்
    நிம்மதி பெற்றிட  ஆற்றிடுவாய்!

ஆண்டுக்கு ஆண்டு  இவ்வாறே –அனலை
   அள்ளித்  தந்தால்  எவ்வாறே!?
ஈண்டே நாங்கள்  வாழ்ந்திடவா –இல்லை
    இன்னல் பட்டே  மாயந்திடவா!
பூண்டும்  கருகிப்  போனதுவே –எரியும்
    புகையில் நெருப்பென  ஆனதுவே!
வேண்டுவன் தினமும்  கதிரோனே-இவ்
    வேதனை  தாங்காயிம் முதியோனே!

             புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, May 14, 2013

அன்னையர் தினத்தில், என் அன்னைக்கு நினைவஞ்சலி!



அன்னையர் தினத்தில், என் அன்னைக்கு
நினைவஞ்சலி
----------------------------

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கநீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

வருகையும் , நன்றி அறிவிப்பும் !


அன்பின் இனிய  உறவுகளே!
                காலை வணக்கம்!

                 முன்னரே, நான் குறிப்பிட்ட வாறு என்னுடைய  மலேசிய  சுற்றுப்  பயணத்தில் இலங்காவி, பினாங்கு,கோலாலம்பூர் ஆகிய  இடங்களைப்  பார்த்து விட்டு திரும்பி நேற்று இரவு சென்னை நலமுடன் வந்து  சேர்ந்தேன்.
                      என்னை வாழ்த்தி அனுப்பிய உங்களது அன்பும், ஆதரவுமே
என்  பயணத்தை எவ்வித  இடையூறுமின்றி நடை பெற துணை நின்றது
என்பதை  மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி யினை காணிக்கை  ஆக்குகிறேன்

            பயண குறிப்புகளை  பின்னர்  எழுதுகிறேன்.

                                        புலவர் சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...