Friday, September 23, 2011

வேங்கடவன் துதி.......




சூழும்  இடர்தன்னை  சுடர்கண்ட  பனியாக்கும்
     ஏழுமலை  யானே  எனையாளும்  பெருமாளே
வாழும்  நாளெல்லாம்  உனைவணங்கி  நான்வாழ
     பாழும்  மனந்தன்னை  பதப்படுத்த  வேண்டுகிறேன்

அன்னை  அலர்மேலு  அகிலாண்ட  நாயகியே
     பொன்னை  வேண்டியல்ல  பொருளை  வேண்டியல்ல
உன்னை  வணங்குதற்கே  உயிர்வாழ  விரும்புகின்றேன்
     என்னை  ஆட்கொள்வாய்  எனையாளும்  தாயேநீ

பஞ்சுப்  பொதிபோல  பரவி  வருகின்ற
     மஞ்சு  தவழ்ஏழு  மலையானே  கோவிந்தா
தஞ்சம்  நீயென்றே  தலைவணங்கும்  என்போன்றார்
     நெஞ்சில்  நீங்காது  நிலைத்திருக்க  வேண்டுகிறேன்

வாழிவாழி  யென  வானோர்கள்  கூத்தாட
     ஆழிகடைந்  தமுது  அளித்தவனே  மங்கையர்கள்
தாழிகடைந்  தெடுத்த  தயிர்வெண்ணை  திருடியவர்
      தோழி  பலர்துரத்த  தொடர்ந்தோடி  ஒளிந்தவனே

தத்தம்  குறையெல்லாம்  தடையின்றி  நீங்குமென
     நித்தம்  உனைநாடி  நீள்வரிசை  தனில்நின்று
சித்தம்  மகிழ்வுடனே  செப்புகின்ற  கோவிந்தா
     சத்தம்  உன்செவியில்  சங்கொலியாய்  கேட்கிறதா

வெண்ணை  உண்டவாய்  விரிய  வியனுலகு
     தன்னைக்  கண்டதாய்  தடுமாறி  மகிழ்ந்தாட
மண்ணை  அளந்தவனே  மாபலியின்  தலையோடு
     விண்ணை  அளந்தவனே  விமலனே  வணங்குகிறேன்

மலையில்  வாழ்பவனே  மலையை  நீதூக்கி
     தலையின்  மேல்வைத்தே  ஆவினத்தை  காத்தவனே
அலையில்  கடல்மீது  ஆனந்தப்  பள்ளியென
     இலையில்  துயின்றவனே  இறைவாநான்  தொழுகின்றேன்

ஆதிமூல  மென்ற  அபயக்குரல்  வந்துன்
     காதில்  விழச்சென்று  காத்தவனே  கோவிந்தா
வீதிதனில்  வருவாய்  வீழ்ந்து  வணங்கிடுவார்
     தீதுதனை  முற்றும்  தீர்த்திடுவாய்  கோவிந்தா

எங்கும்  உன்நாமம்  எதிலும்  உன் நாமம்
     பொங்கும்  உணர்வெல்லாம்  போற்றும்  திருநாமம்
தங்கும்  மனதினிலே  தடையின்றி  உன்நாமம்
     பங்கம்  அடையாமல்  பாஞ்சாலி  காத்ததன்றோ

அம்மை  அலர்மேலு  அப்பன்  திருமலையான்
     தம்மை  நாள்தோறும்  தவறாமல்  வணங்கிவரின்
இம்மை  மறுமையென  எழுபிறவி  எடுத்தாலும்
     உம்மை  மறந்தென்றும்  உயிர்வாழ  இயலாதே

 பாடி  முடித்திவிட  பரந்தாமா  உன்அருளை
     நாடி  வருகின்றேன்  நாயகனே  வேங்கடவ
 தேடி  வருவார்கு  திருமலையில்  உனைக்காண
     கோடிக்  கண்வேண்டும்  கொடுப்பாயா  பரந்தாமா

 முற்றும்  உன்புகழை  முறையாக  நான்பாட
     கற்றும்  பல்லாண்டு  காணாது  தவிக்கின்றேன்
 பற்றும்  அற்றவரும்  படைக்கின்ற  பிரம்மாவும்
     சற்றும்  அறியாருன்  திருவடியும்  திருமுடியும்

 வேதத்தின்  வித்தேயுன்  விளையாட்டை  யாரறிவார்
     நாதத்தின்  சத்தேயுன்  நாடகத்தை  யாரறிவார்
 பேதத்தை  கொண்டவுள்ளம்  பெருமாளே  என்போன்றார்
     சோகத்தை  நீக்குமென  சொல்லியிதை  முடிக்கின்றேன்

  தாங்கும்  நிலையில்லா  தடைபலவே  வந்தாலும்
      நீங்கும்  படிசெய்யும்  நிமலனே  நாள்தோறும்
  தூங்கும்  முன்வணங்கி  தூங்கி  எழவணங்கும்
      வேங்கி  தாசன்நான்  விடுக்கின்ற  விண்ணப்பம் 

  செல்லும்  திசைமாறி  சென்றுவிடும்  கப்பலென
      அல்லும்  பகலுமென்  அலைகின்ற  உள்ளத்தை
  கொல்லும்  அரவின்மேல்  கொலுவிருக்கும்  கோவிந்தா
      ஒல்லும்  வழியெல்லாம்  உனைவணங்கச்  செய்திடுவாய்


                             புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 21, 2011

இந்திய நாட்டை ஆள்வோரே


 இந்திய  நாட்டை  ஆள்வோரே-ஏக
     இந்திய என்றே  மகிழ்வோரே
தந்தேன்  கடிதம்  என்றிங்கே-எம்
    தமிழக அரசு சொலவ‍ங்கே
வந்தேன்  கண்டேன்  எனநன்றே-தம்
    வருகையை  மத்திய  அரசின்றே
செந்தமிழ்  நாட்டில்  உள்ளோரே-செய்தி
    செப்பிட  மனதில்  கொள்வீரே

அஞ்சிய  மக்கள் போராட்டம்-மகளிர்
    அளவிட இயலா பெருங்கூட்டம்
நஞ்சென  அறிந்தும் உண்பாரா-தம்
    நல்லுயிர்  போகக்  காண்பாரா
நெஞ்சில்  ஈரம்  இல்லோரே-உள்ள
     நிலைமைப்  புரிந்து  கொள்ளாரே
பஞ்சில்  பட்ட  நெருப்பாகும்-அவை
     பற்றினால்  ஆள்வோர்  பொறுப்பாகும்

வெந்தப்  புண்ணில்  வேல்கொண்டே-குத்தி
     விடுவது  போலும் செயல்கண்டே
நொந்து  நூலாய்க்  கிடக்கின்றார்-உண்ணா
     நோன்பும் உறுதியாய்  இருக்கின்றார்
வந்துப்  போனால் ஆகாதே-வாய்
      வார்த்தையும்  நம்பிட ஆகாதே
எந்தப்  புற்றில்  பாம்பென்றே-மக்கள்
    எண்ணிட  இயலா  நிலையின்றே  

       புலவர் சா இராமாநுசம்


Tuesday, September 20, 2011

படமும் பாடலும்.



            மீள் பதிவு- தொடக்கத்தில் வந்தது


சின்னக் குழைந்தாய் ஏன்வந்தே-இங்கு
சிலைபோல் காணும் நிலைதந்தே
கன்னம் பாதி மறைந்திடவும்-சோகம்
கண்களில் நன்கே நிறைந்திடவும்
தன்னம் தனியே உனைக்காண-மேலும்
தவிப்பும் பயமும் முகம்பூண
என்னுள் நினைவுகள் தாக்கியதே-இதயம்
ஈழம் தன்னை நோக்கியதே

காலில் உனக்கோ செருப்பில்லை-அங்கே
காலொடு கையும் தோளுமில்லை
நாளும் அழிந்தது நமினமே-இங்கே
நம்மைப் பழித்திட நம்மனமே
தோலில் சுரணை வரவில்லை-இந்திய
தேசப் பற்றாம் புரியவில்லை
பாலில் வற்றிய அன்னைதான்-உலகு
பார்க்கும் பாவச் சின்னந்தான்

தலைமேல் உனக்கு முக்காடே-ஈழத்
தமிழர் வாழிடம் சுடுகாடே
அலைபோல் அலைந்து உதைபட்டும்-அவன்
அழிய சதைகள் கிழிபட்டும்
கலையாத் தூக்கம் இந்நாட்டில்-கண்டு
காறித் துப்ப வெளிநாட்டில்
நிலையாய் பெற்றோம் பழியேதான்-அது
நீங்கக் காணபோம் வழியேதான்

மடிந்தவர் போக மற்றவரும்-தம்
மனதில் அமைதி அற்றவராய்
விடிந்தால் என்ன நடக்குமெனும்-பெரும்
வேதனை தன்னில் மூழகிமனம்
முள்ளின் வேலி தனிலுள்ளே-அந்தோ
முடங்கிக் கிடப்பார் நிலைசொல்ல
சொல்லில் அடங்கும் ஒன்றல்ல-எடுத்துச்
சொல்ல நடந்ததுநடப்பது ஒன்றல்ல

கதறி அழுதும் வரவில்லை-ஏன்
கண்ணீர் அவரக்கே கண்ணில்லை
பதறி துடித்தும் ஒலியில்லை-ஈனப்
படைகள் கேட்பின் வரும்தொல்லை
சிதறி ஓடிமறைந் தாலும்-அதை
சிங்கள வெறியர் அறிந்தாலும்
குதறி அழிக்க வருவாரே-இந்த
கொடுமை தீர்பார் இனியாரே

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...