Thursday, January 28, 2016

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர் போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!



அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!

பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
தொண்டுமே செய்து வாழ்வதும் நன்றே!

பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!

கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
மனித நேயத்தை மறவாது போற்றலாம்!

சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

புலவர் சா இராமாநுசம்

Monday, January 25, 2016

குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே!


குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை
குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே
வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர்
வற்றாத நதியாக தாண்டவக் கோனே
விடிவுவரும் நாளேதான் தாண்டவக் கோனே-மது
விலக்கு வேண்டுமடா தாண்டவக் கோனே
முடியரசே பாரதத்தில் தாண்டவக் கோனே-அதுவரை
முடிவெடுத்தால் உண்மைதானே! தாண்டவக் கோனே


காணுகின்ற இடமெல்லாம் தாண்டவக் கோனே-மதுக்
கடைகள்தான் காணுதடா தாண்டவக் கோனே
நாணமின்றி நங்கையரும் தாண்டவக் கோனே- குடித்தல்
நாகரீக மானதடா தாண்டவக் கோனே
கோணல்வழி போவதுவே தாண்டவக் கோனே- வாழும்
கொள்கையென ஆயிற்று தாண்டவக் கோனே
பூண வேண்டும் மக்களிதை தாண்டவக் கோனே-நாடு
பூராவும் மதுவிலக்கு தாண்டவக் கோனே

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...