Thursday, January 30, 2014

எள்ளுகின்ற நிலைதானே முடிவில்வருமே-மக்கள் எண்ணியிதை ஆய்ந்தாலோர் விடிவுவருமே!



ஆன்றோரே பெரியோரே வாருமய்யா –பதவி
   அடைவதற்குக் கூட்டணியா !?  பாருமய்யா!
சான்றோரே நாள்தோறும் செய்திவருதே –அரசியல்
   சாக்கடையா !?  ஐயகோ!  துயரம்தருதே! 
கொள்கையென ஏதொன்றும்  தெரியவில்லை-என்ன
   கூட்டணியோ ! கடவுளே!  புரியவில்லை!
எள்ளுகின்ற  நிலைதானே  முடிவில்வருமே-மக்கள்
   எண்ணியிதை ஆய்ந்தாலோர் விடிவுவருமே!

நேற்றுவரை  பகைவராம்! காணயின்றே –அந்த
    நினைவின்றி சேர்வதா நாணமின்றே!
போற்றுவதா!? இச்செயலும் எண்ணவேண்டும்-நாளும்
    புலம்புவதால் தீராது   திண்ணமீண்டும்!
தூற்றுவதும்  மாற்றுவதும்  வழக்கமாக-மெகாத்
    தொடராக ஆற்றுவதும்  பழக்கமாக!
சாற்றுவதா!? இக்கொடுமை ஆயவேண்டும் –உடன்
    சரிசெய்த பின்பேநாம்  ஓயவேண்டும் !

           புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, January 29, 2014

என் முகநூல் பதிவுகள்-10






ஒருவன் தான் மேற்கொள்ளும் செயலின் வலிமை, தன்னுடைய வலிமை , பகைவரின் வலிமை , இருவருக்கும்
துணையாக வருபவரின் வலிமை ஆகிய வற்றை நன்கு ஆராய்ந்தே செய்ய முற்பட வேண்டும்!

வினைவலியும் தன்வரியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.-குறள்


யாருக்கும் , நல்லது செய்வது என்ற குணம் ,பொதுவா தேவைதான்! ஆனாலும் நாம் அப்படிச் செய்யும் போது யாருக்கு செய்கிறோமோ , அவர்களுடைய , குணத்தினை
அறிந்து , செய்ய வேண்டும்! இல்லையென்றால் , அதனாலும்
துன்பம் நமக்கு வரும்!

எடுத்துக் காட்டாக , ஒரு, தேள் தண்ணீரில் வீழுந்து தவிப்பதைப் பார்த்து , இரக்கத்தோடு வெளியே எடுத்துவிட்டா,
அது நம்மைக் கொட்டத்தானே செய்யும்! தேளின் குணம் கொட்டுவதுதானே!

நன்றாற்ற லூள்ளும் நவறுண் டவரவர்
பண்பறுந் தாற்றாக் கடை! (குறள்)


புத்தாண்டு பிறந்து விட்டது! தினசரி நாள்காட்டி ஒன்றை வாங்கி வீட்லே தொங்க விட்டிருப்போம்! இன்று, தேதி , இரண்டு ! காலையிலேயே நாள் காட்டியில் ஒரு,தாளை
கிழிச்சிருப்போம்! பொதுவா நாம் கிழிச்சது ஒரு தாளென
நினைச்சிருப்போம்! ஆனா , நாம் கிழிச்சது ஒரு தாளை
மட்டுமல்ல! நம் வாழ்கையின் , ஒரு நாளையும் கிழிச்சோம்
என்பது எத்தனை பேருக்குத் தெரியும்! அதை, வள்ளுவர் தெளிவா உணர்ந்து சொல்வார்!

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள்அது உணர்வார் பெறின்.( குறள்)


ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றால் அவர். நோய் நீக்க என்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதுபற்றி கூட
வள்ளுவர் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார்

முதலில், மருத்துவர் , வந்த நோயாளியிடம் என்ன நோய் என்பதை விரிவாக விசாரித்து
அறிந்து, அதன் பின் நோய்வந்த காரணத்தையும் தெளிவாக அறிய வேண்டும். பின்னர், அதனைப் போக்கும் ,உரிய மருந்து
எது, என்பதையும் கண்டறிந்து, பிறகு, அதனை எந்த வகையில் நோயாளிக்குத் தருவதெனவும் முடிவு செய்ய வேண்டும்

நோய்நாடிநோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.-குறள்

தரையிலும் தண்ணீரிலும் வாழ்வது தவளைக்கு வேண்டுமானால் இயல்பாகலாம்! ஆனால் !? மீனுக்கு! வாழ்விடம் தண்ணீர்தானே! இப்படித்தான் வாழ்க்கையில் மனிதனும் தன்னிலை அறிந்து வாழ வேண்டும்

                  புலவர்  சா  இராமாநுசம்

Sunday, January 26, 2014

குடியரசு தின வாழத்துக் கவிதை !




குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான்  ஒன்றே –உண்மைக்
    குடியரசாய்  கொண்டாடி  மகிழ்வோம்  நன்றே -மேகம்
இடியிடித்தும்  மழையின்றி  போதல்  போல – வீணே
     எண்ணற்ற தியாகிகளின்  தியாகம்  சால -அழிந்து
தடியெடுத்தோர் ஆளுகின்ற நிலைதான்  கண்டோம்- நாளும்
     தாங்கிடவே  இயலாத்  துயரே!  கொண்டோம் –நல்ல
முடிவெடுத்து  வாக்குகளைப்  போட  வேண்டும் –என்ற
    முடிவொன்றே குடியரசு  வாழ்த்தாம்  ஈண்டும்

                    புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...