Friday, December 7, 2012

பல்லார் மாட்டும் பண்பாலே பழகிட வேண்டும் அன்பாலே !




திரைகடல் ஓடு  எனறாரே
   திரவியம் தேடு  என்றாரே
குறையிலா வழியில்  அதைப்பெற்றே
   கொள்கையாய் அறவழி  தனைக்கற்றே
நிறைவுற அளவுடன்  நீதிசேர்ப்பீர்
   நிம்மதி அதனால்  வரும்பார்ப்பீர்
கறையிலா கரமென  புகழ்ப்பெறுவீர்
   கண்ணியம் கடமை  எனவாழ்வீர்

வையம் தன்னில்  வாழ்வாங்கும்
   வாழின்! வாழ்வில்  பெயரோங்கும்
செய்யும் எதையும்  தெளிவாகச்
   செய்யின் வருவது களிவாகப்
பொய்யோ புரட்டோ செய்யாமல்
   போலியாய் வேடம்  போடாமல்
ஐயன் வழிதனில்  செல்வீரே
   அன்பால் உலகை  வெல்வீரே!

தீதும் நன்றும்  பிறர்தம்மால்
   தேடிவாரா! வருவதும்  நம்மாலே!
நோதலும் தணிதலும் அவ்வாறே
   நவின்றனர் முன்னோர் இவ்வாறே
சாதலின் இன்னா திலையென்றே
   சாற்றிய வள்ளுவர் சொல்லொன்றே
ஈதல் இயலா நிலைஎன்றால்
  இனிதாம் அதுவும் மிகஎன்றார்!

எல்லார்   தமக்கும்  நலமாமே 
   என்றும் பணிவாம் குணந்தாமே
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
   செப்பிடும் குறளாம் திருச்செல்வம்
நல்லா ரவரென புகழ்பெற்றே
   நாளும் நாளும் வளமுற்றே
பல்லார் மாட்டும் பண்பாலே
  பழகிட வேண்டும் அன்பாலே

                              புலவர்  சா இராமாநுசம்

Wednesday, December 5, 2012

இதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே



இதுவென்  பதிவே  மூன்னூற்று  ஐம்பதே
புதுமலர்  போன்றே  பூத்திட  காத்திட
மதுநிகர்  மறுமொழி தந்தெனை  வாழ்த்திட
நிதியெனத்  தந்த  நீங்களே ஆகும் !

என்னிரு  கரங்களை  என்றும்  கூப்பியே
மன்னிய  உலகில்  மன்னும்  வரையில்
எண்ணியே  தொழுவேன்   இணையில்  உறவுமை
கண்ணின்  மணியெனக்  கருதியே வாழ்வேன்  !

சுயநலம்  கருதா  சொந்தங்கள்  நீரே
பயனெதிர்  பாரா  பண்பினர்  நீரே
நயமது மிக்க நண்பினர்  நீரே
செயல்பட  என்னைச்  செய்தவர்  நீரே !

எண்பது  வயதைத்  தாண்டியே  இருப்பதும்
உண்பதும்  உறங்கலும்  உம்மிடை இருப்பதும்
என்புடை தோலென  என்னெடு  இருப்பதும்
அன்புடை  உம்மோர்  ஆதர   வன்றோ !

இனியும்  வாழந்திட  என்வலை  வருவீர்
கனியென  இனித்திடக்  கருத்தினைத் தருவீர்
பனிமலர்  போன்றே  குளுமையும்  தோன்ற
நனிமிகு  நாட்களும்! வாழ்வேன்  நன்றி!நன்றி!
                        புலவர் சா இராமாநுசம்

Sunday, December 2, 2012

இன்னுமா வாழ்கிறது ஒருமைப் பாடே! –அதை எண்ணியே ஏமாந்து அடைந்தோம் கேடே!





இன்னுமா வாழ்கிறது  ஒருமைப் பாடே! அதை
     எண்ணியே  ஏமாந்து  அடைந்தோம்  கேடே!
மின்னுமா  மின்னலென  வானம்  நோக்க கலையும்
     மேகத்தால்  கண்ணிரண்டும்  நீரைத்  தேக்க
மன்னுமா  வாழ்க்கையென  தேம்பு  கின்றான் துயர்
    மண்டியதால்  வெதும்பிமனம்  கூம்பு  கின்றான்!
தன்னுயிரை  விடுவதற்கும்  துணிந்து  விட்டார்கன்னடர்
     தருவார்கள்  நீரென்றே நம்பிக்  கெட்டார்!

வயலெல்லாம்  வெடித்துவிடக்  காணும் காட்சி உழவன்
     வாய்விட்டு  அழுகின்றான் ! உண்டா ? மீட்சி!
பெயலின்றி  போயிற்றே  பருவக்  காலம் எதிர்
    பேயாக  விரட்டுமே  வறுமைக்  கோலம்!
தயவின்றி  ஒருதலையாய்   மத்திய  அரசேவழக்கை
    தள்ளிவைக்க  பயிர்கருகி  ஆகும் தருசே!
பயனின்றி  தமிழகமே வாளாய்க்  காண என்றும்
    பழிக்குமே  எதிர்காலம்  நாமும்  நாண!

கொட்டிவிட்ட  நெல்லிக்காய்  மூட்டை  ஆனோம் ஒன்று
      கூடிவிட வழியின்றி சிதறிப் போனோம்!
கட்டிவிட்ட  வேலியது  கம்பிபோல  இங்கே மின்
      கம்பங்கள் !காணுகின்றோம்  சாரம் எங்கே ?
திட்டமில்லை  நம்மிடையே  கூடிப்  பேச நல்
      திறனிருந்தும்  போட்டியிட்டு  வீணில்  ஏச!
எட்டியென  நம்வாழ்வு கசந்து  போகும்  -வரும்
      எதிர்கால  நிலையெண்ணில்  உள்ளம்  வேகும்!

நெய்வேலி  மின்சாரம்  மட்டும்  வேண்டும்  -சொட்டு
       நீர்கூட  இல்லையென  மறுத்தார்  மீண்டும்!
பொய்வேலி   ஏகமெனல்  புரிந்து  கொள்வோம் மேலும்
       பொறுமைக்கும்  எல்லையுண்டு  பொங்கி  எழுவோம்!
செய்வீரா !? இனியேனும்  ஒன்று  படுவீர் -உடன்
      சிந்தித்து  செயல்பட  ஈகோ  விடுவீர்
உய்வீராம் அதன்பின்னே  எண்ணிப்  பாரீர்  -நம்
       உரிமையைக்  காத்திடத்  திரண்டு  வாரீர்

                                  
                            புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...