Saturday, March 16, 2013

ஒன்றே குரலாய் தமிழினமே-இங்கே ஒலிக்கும் ஒலியும் கேட்கலையா




மீண்டும் இங்கே பாடுகின்றேன்-கருணை
     மத்தியில்  எங்கே? தேடுகின்றேன்
வேண்டும் மௌனம் கலைந்திடவே-உடன்
     விரைவில் முடிவு எடுத்திடவே
மாண்டவர் எம்மவர் நடந்தகதை-அதை
     மாற்றிட செய்வீர் இன்றேயிதை
சீண்டிட வேண்டாம் மேன்மேலும்-தீய
     சிங்களர் வாழந்திட வருநாளும்!

அச்சம் கொள்ள கேட்டவரும்-அந்தோ
     அழுது அலற பார்த்தவரும்
பச்சிளம் பாலகன் படுகொலையை-இன்று 
     பார்த்தன உலகமே கொலைவெறியை
துச்சமா? எம்மினம் எண்ணாதீர்-சிறு
     துரும்பும் தூணாம்! பண்ணாதீர்
மிச்சம் உள்ளவர் வாழட்டும்-ஈழம்
     மேன்மை கொண்டே மலரட்டும்

இமயம் வரையில் வென்றானே-இன்று
     இதயம் வெடிக்க நின்றானே
சமயம் இதுதான் ஆள்வோரே-பெற்ற
     சாபம் நீங்கிடும் மீள்வீரே!
அமையும் ஈழத்தில் நல்வாழ்வே-சிங்கள
     அரசுக்கு எதிராய் ஓட்டளிப்பின்
உமையும் வாழ்த்திப் புகழ்வாரே-எனில்
    உலகில் தாழ்த்தி இகழ்வாரே

கன்றின் வாழ்வும் பட்டதென-தேர்
    காலில் மகனை இட்டவனை
இன்றும் போற்றும் எம்மினமே-என
    எண்ணிப் பாரீர் இத்தினமே
நன்றே செய்வீர் நம்புகிறோம்-ஆனால்
    நடந்ததை நினைப்பின் விம்முகிறோம்
ஒன்றே குரலாய் தமிழினமே-இங்கே
   ஒலிக்கும் ஒலியும் கேட்கலையா ?

              புலவர்  சா  இராமாநுசம்




Thursday, March 14, 2013

அவலம் அவலம்! அவலம் தானே!-இங்கே அரசியல் கட்சிகள்! காட்சிகள்! தானே!




அவலம் அவலம்! அவலம் தானே!-இங்கே
  அரசியல் கட்சிகள்! காட்சிகள்! தானே!
கவலை கவலை! கவலை தானே!-நாம்
  காண்பது இன்றே கவலை தானே!

மத்தியில் கூட்டாம் பொரியல் தானே-இங்கே
   மக்கள் மத்தியில் மறியல் தானே!
புத்தியில் மக்களாய்  ஆனோம் தானே-நாம்
   புரிந்தும் மறந்து போவோம் தானே!

அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
    அடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
சும்மா பலரும் நடத்து கின்றார்-நமக்கு
   சுரணை இலையெனக் காட்டு கின்றார்!

பேருந்து கட்டணம் குறைய வில்லை-அதைப்
    பேசிட கேட்கவும் நாதி இல்லை!
சீரின்றி மின்கட்டணம் உயர்ந் ஒல்லை-அதைச்
   செப்பிடின் வருவதோ பீதி எல்லை!
   

போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
   போடும் இங்குள ஊடகம் தானே!
கேலிக்கே உரியன இப்போ ராட்டம்-ஓட்டு
   கேட்கவா இத்தகைஆர் பாட்டம்!

மருமகள் உடைத்ததும் மண்கு டமாம்!-அங்கே
   மாமியார் உடைத்ததும் மண்கு டமாம்!
அருகதை இல்லையே இருவ ருக்கும்-வீண்
   ஆர்பாட்டம் செய்வது அறுவ ருக்கும்!

இரட்டை  வேடமே போடு கின்றார்-இங்கே
   ஏழைக்குக் கேடே தேடு கின்றார்!
அரட்டை அரங்கமே ஆகின் றதாம்-நமை
   ஆளவோர் செயலும் போகின் றதாம்!

மௌனம்  சம்மதம் என்ப தல்ல-மக்கள்
   மனதில் இருப்பது மறதி யல்ல!
கவனத்தி கொண்டால் மீள்வ துண்டே-மேலும்
   கனிவுடன் செயல்படின் ஆள்வ துண்டே!

                 புலவர் சா இராமாநுசம்


Tuesday, March 12, 2013

மனித நேயம் இல்லையா மத்திய அரசே சொல்லையா?



மனித நேயம் இல்லையா
      மத்திய  அரசே  சொல்லையா?

தினமேத்  தொல்லைப்  படுகின்றான்
      தேம்பியே  மீனவன்  கெடுகின்றன்
மனமே  இரங்க  வில்லையா
       மனதில்  அரக்கனா சொல்லையா!

சுண்டைக்  காய்போல்  அந்நாடே
    சொன்னால் வெட்கம்  பெருங்கேடே
அண்டையில்  இருந்தேத்  தரும்தொல்லை
    அளவா?  அந்தோ  துயரெல்லை!

கச்சத்  தீவைக்  கொடுத்தீரே
      காரணம்  எதுவோ  ?கெடுத்தீரே
அச்சப்  பட்டே மீனவனும்
       அல்லல்  படுவதைக்  காண்பீரே!

படகொடுப்  பிடித்தே  மீனவரைப்
      பாழும்  சிறையில்  தள்ளுகின்றான்!
இடமிலை  மீனவர்  உயிர்வாழ
     எண்ணமும்  உமக்கிலை  அவர்வாழ!

மாநில  அரசையும்  மதிப்பதில்லை!
    மத்திய  அரசுக்கோ  செவியில்லை!
நாமினி  செய்வதை  ஆய்வோமா?
      நல்லது  நடப்பின்  உய்வோமா?

கடிதம் எழுதினால் போதாதே
    காரியம் அதனால் ஆகாதே!
முடிவது எதுவென எடுப்பீரா
     முடங்கிட மீனவர் விடுப்பீரா?

அலைகடல் தானே அவன்வீடாம்
     அந்தோ! இன்றது சுடுகாடாம்!
நிலைமை அப்படிப் போகுமன்றோ
    நிம்மதி, அமைதி ஏகுமன்றோ?
 
                  புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 11, 2013

நினைவேநான் உனக்கென்ன தீங்கா செய்தேன்-சுடும் நெருப்பாகி நாள்தோறும் வாட்டு கின்றாய்

            புலவர் கல்லூரியில்  படித்த போது
                                    எழுதியது


      தனவானாய்  ஆவதற்குப்  பொருளை  ஈட்ட-இங்கே
          தனிமையெனும்  பெரும்கொடுமை  என்னை  வாட்ட
      கனமான  மனத்துடனே  அவரும்  சென்றார்-என்ன
          காரணமோ  இதுவரையில்  வாரா  நின்றார்
      தினம்தோறும்  நான்பெற்ற  இன்பம்  தன்னை-நல்
          திரைகாட்டும்  படம்போல  காட்டி  என்னை
      நினைவேநான்  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-சுடும்
          நெருப்பாகி  நாள்தோறும்  வாட்டு  கின்றாய்
      
      கொம்பில்லா  கொடியாக  என்னை  விட்டே-அந்த
          கோமகனும்  பொருள்தேடி  சென்ற  தொட்டே
      வெம்பியழும்  வேதனையைக்  கண்ட  பின்பா-மேலும்
          வேதனையை  தருவதென்ன  நல்லப்  பண்பா
      கம்பமில்லா  மின்விளக்காய்  விண்ணில்  தொங்கி-இரவின்
          காரிருளை  விரட்டிடுவாய்  ஒளியும்  பொங்கி
      அம்புலியே  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-நீயும்
          அனலாகி  எனையேனோ  வருத்து  கின்றாய்
      
      அன்றன்று  பூத்தமலர்  பறித்து  வந்தே-தீரா
          ஆசையுடன்  கூந்தலிலே  சூடத்  தந்தே
      என்றும்நான்  பிரியேனென  சொல்லி  சொல்லி-தினம்
          எனகன்னம்  சிவந்துவிட  கிள்ளி  கிள்ளி
      சென்றவர்தான்  இன்றுவரை  வரவே  யில்லை-ஏதும்
          செய்யவழி  தெரியாமல்  திகைப்பின்  எல்லை
      தென்றலே  நானிருத்தல்  அறிந்த  பின்னும்-ஏன்
          தீயாக  தீண்டியெனை  வருத்து  கின்றாய்
           
              புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...