Saturday, December 6, 2014

நல்லோரே செய்வேன் நயந்து!



நாட்டு நடப்புடனே நாளும் வருஞ்செய்தி
கேட்டே தானெடுத்தே கேடுகளை- தீட்டுமென
பல்லோரும் சொல்ல பணிவுடனே ஏற்றேனே
நல்லோரே செய்வேன் நயந்து

புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 5, 2014

வாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய!



வாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய!
சூழும் சுகம்தானே சொந்தமென!-ஏழுலகும்
போற்றிப் புகழ்ந்திடவே போகின்ற நாள்வரையில்
சாற்றித் தருமே அது!

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 4, 2014

பொன்றும் புகழென்றே போற்று !




விட்டுக் கொடுப்பதுடன் வீண்வாதம் செய்யாமல்
தட்டிக்  கொடுப்பதவும்   தக்கதன்றோ ! –கட்டியவர்
என்றும் இனித்திடவே இல்லறம் ! இருவருக்கும்
பொன்றும்  புகழென்றே  போற்று

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 2, 2014

சதமலவே இவ்வுலகில் எதுவும் என்றும்- கால சக்கரமே சுழல்கிறது அறிவோம் நன்றும்!


முதல்வர் என்ற பதவிக்கோர் தகுதியுண்டே –மக்கள்
முதல்வரே அக்கருத்தை மனதிற் கொண்டே
உதவிடவே வேண்டுகிறோம் ஆவன செய்ய-இங்கே
உள்ளவர்கள் உள்ளமதில் நாடும் உய்ய
பதவிதனைத் தந்துவிட்டால் போதா தென்றே-நாளும்
பல்வேறு விதமாக நினைக்க இன்றே!
சதமலவே இவ்வுலகில் எதுவும் என்றும்- கால
சக்கரமே சுழல்கிறது அறிவோம் நன்றும்!


புலவர்  சா  இராமாநுசம்

Monday, December 1, 2014

தீதுபல நீங்கும் தெளி !


நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடலாமே !-என்றேதான்
ஓதியநல் வள்ளுவரின் உண்மைதனை ஓர்ந்தாலே
தீதுபல நீங்கும் தெளி

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...