Wednesday, January 30, 2013

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை !


நேற்றே வந்திருக்க வேண்டிய கவிதை தாமதத்திற்கு மன்னிக்க

இன்று நினைவு நாள் அஞ்சலி

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை 

ஓயாத அழுகுரலே ஈழ மண்ணில்-தினம்
ஒலிக்கின்ற நிலைகண்டு அந்தோ கண்ணில்
காயாது வந்ததன்று கண்ணீர் ஊற்றே-அதைக்
காணாமல் மறைத்ததந்தோ தேர்தல் காற்றே
சாயாத மனத்திண்மை கொண்டோர் கூட-ஏனோ
சாயந்தார்கள் பதவிக்கே ஓட்டு தேட
வாயார சொல்லுகின்ற கொடுமை அன்றே-அது
வரலாற்றில் என்றென்றும் மறையா ஒன்றே

கொத்துமலர் வீழ்வதுபோல் வன்னிக காட்டில்-ஈழ
குடும்பங்கள் வீழ்வதனை கண்டு ஏட்டில்
முத்துகுமார் முதலாக பலரும் இங்கே-தீ
மூட்டியவர் உயிர்துறந்தும் பலன்தான் எங்கே
செத்துவிழு மவர்பிணத்தை எடுத்துக் காட்டி-ஓட்டு
சேகரிக்க முயன்றாராம் திட்டம் தீட்டி
எத்தர்களும் ஐயகோ கொடுமை அன்றோ-அது
எதிர்கால வரலாற்றில் மறையா தன்றோ

வீரத்தின் விளைநிலமே ஈழ மண்ணே-மீண்டும்
வீறுகொண்டே எழுவாய்நீ அதிர விண்ணே
தீரத்தில் மிக்கவராம் ஈழ மறவர்-எட்டு
திசையெங்கும் உலகத்தில் வலமே வருவார்
நேரத்தில் அனைவருமே ஒன்றாய் கூடி-தாம்
நினைத்தபடி தனிஈழப் பரணி பாடி
கூறத்தான் போகின்றார் வாழ்க என்றே-உள்ளம்
குமுறத்தான் சிங்களவர் வீழவார் அன்றே

இரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பர்
எழுதியநல் பாட்டுக்கே சான்றாய் இன்றே
அரக்கனவன் இராசபக்சே செய்யும் ஆட்சி-உலகில்
அனைவருமே அறிந்திட்ட அவலக் காட்சி
உறக்கமின்றி ஈழமக்கள் உலகில் எங்கும்-உள்ளம்
உருகியழ வெள்ளமென கண்ணீர் பொங்கும்
தருக்கரவர் சிங்களரின் ஆட்சி அழியும்-உரிய
தருணம்வரும் தனிஈழம் மலர்ந்தே தீரும்

அழித்திட்டோம தமிழர்களை என்றே கூறி-சிங்கள்

ஆலவட்ட மாடினாலும் அதையும் மீறி       கழித்திட்ட காலமெல்லாம் துன்பப் படவும்-சில
கயவர்களாம் நம்மவர்கை காட்டி விடவும்
விழித்திட்டார் உலகுள்ள ஈழ மறவர்-அதன்
விளைவாக அணிதிரள விரைந்தே வருவார்
செழித்திட்ட வளநாடாய் ஈழம் மாறும்-இரத்தம்
சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்

புலவர் சா இராமாநுசம்      


           மீள்பதிவு

Tuesday, January 29, 2013

ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!




ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது ஒன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி  முடிப்பதற்கா-வீண்
   தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்குமே-எதையும்
    ஆய்வதும் இல்லை பேருக்குமே
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
              
                    புலவர் சா இராமாநுசம்
      
       

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...