கொலைகொள்ளை நடக்காத  நாளே  இல்லை –இந்த
     கொடுமைக்கு,  விடிவுவர  உண்டா  எல்லை!
 கலையெனவே  கொலைகூட ஆயிற்  றிங்கே –கயவர்
      கைக்கூலி, பெறுகின்றார் கருணை  எங்கே!?
 நிலைகுலைந்து  வாழ்கின்றார்  மக்கள்  நாளும்-சற்றும்
      நிம்மதியே  இல்லாமல் அச்சம்  மூளும்
 வலைவீசி தேடுவதாய்  காவல்  துறையும் –செய்தி
      வருகிறது! என்னபயன்! எப்படிக்  குறையும்!?
 
 பொதுமக்கள் ! நமக்குமிதில்  பொறுப்பு  வேண்டும்-வீட்டைப்
      பூட்டிவிட்டால் , போதாது  காக்க  ஈண்டும்!
 எதுவீட்டில்  வைப்பதென  எண்ண  வேண்டும்-அதற்கு
      ஏற்றவழி  என்னவெனக்  ஆய்வீர் யாண்டும்!
 முதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே
      முறையாக தெரிவிப்போம்! குற்றம் தவிர்க்க!
 இதுபோல ,மேலும்சில நாமும்  செய்வோம் –ஏதோ
      இயன்றவரை நமைக்காக்க முயலின்!  உய்வோம்!
 
 புலவர்  சா  இராமாநுசம்